திங்கள், 31 டிசம்பர், 2012

பதிலுக்குப் பதில் !



Vaniyambadi Sdpi : இறைதூதரின் மீது உள்ள பற்று, இறப்பின் விளிம்பில் நின்று தவிக்கும் நம் சக தோழன் மீது இல்லையா? தம்பி வேலு அவர்களே, நபிகள் நாயகம் ஒரு நபி ஆவார் , அவருக்கும் அபு தாகிர் க்கும் நீங்கள் ஒரே மதிரியான போராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லும் அந்த வாசகமே சரி இல்லை, என்பதை தெரிவித்து கொள்கின்றேன்

என் பதில் : தோழரே.. நீங்கள் என்றைக்காவது நபிகளை பார்த்தது உண்டா? அவர் கருப்பா? சிவப்பா ? உயரமா? குள்ளமா? என்று தெரியுமா? ஏன் அவருக்கு சிலைகளோ, உருவப்படங்களோ இல்லை என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்; இசுலாம் மார்க்கப்படி கடவுள் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் (நபிகள் நாயகம் உட்பட) யாரும் வணங்குதல் கூடாது என்பதை உணர்த்தவே அவருடைய புகைப்படங்களும், அவருக்கு சிலைகளும் தவிர்க்கப்பட்டன; காலப்போக்கில் இயேசுவைப் போல நபிகள் நாயகம் அவர்களையும் கடவுள் என்ற தவறான வாதம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது புகைப்படமும், அவருக்கு சிலைகளும் தடை செய்யப்பட்டது; அதை செய்தவரும் நபிகள் நாயகம் அவர்களே. தனிமனித வழிபாட்டை தம் வாழ்நாளிலும், அதற்குப் பின்னரும்  கடுமையாக எதிர்த்தவர் நபிகள் நாயகம் அவர்கள்.  ஒருமுறை நபிகள் அவர்கள் தம் தோழர்களுடன் தொழுகைக்கு சென்று இருக்கும் போது,நபிகள் அமர்ந்து தொழுகை செய்தாராம், அவருடைய தோழர்கள் நின்றுகொண்டு தொழுதார்களாம், நபிகள் அவர்கள் உங்களைப் போலவே நானும்; நான் எப்படித் தொழுகிறேனோ அப்படியே நீங்களும் தொழலாம் என்று வலியுறுத்தினார்; (ஆதாரம் : P.J.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மனிதனுக்கேற்ற மார்க்கம்) அதன் படியே இன்றும் வழக்கத்தில் இருக்கிறது; அரபு மன்னனுக்கு சமமாக அரபு நாட்டின் கடைகோடி இசுலாமியனும் ஒரே இடத்தில் தொழுகிறார்கள். அல்லாஹ்வின் பார்வையில் எல்லோரும் சமம்; யாரும் யாருக்கும் உயர்ந்தவர் அல்ல; என்று போதித்த நபிகள் நாயகம் அவர்களின் கொள்கை முழக்கத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு சம்பவம் இசுலாமிய மதத்தை தவிர வேறு எந்த மதத்தில் நடந்திருந்தாலும் நான் இப்படி கேட்டு இருக்க மாட்டேன்; உதாரணமாக இந்து மதத்தில் ராமனுக்கு விழா எடுப்பார்கள்; ராமனை வழிபடும் தொண்டர்களை நசுக்குவார்கள்; ஆகவே அங்கே  சமத்துவமோ, தனி மனித உரிமையோ இல்லை; இசுலாமியத்தில் இருப்பதனால் தான் நான் நபிகளோடு அபுதாஹீரை ஒப்பிட்டேன். இசுலாமிய மார்க்க கொள்கைப்படி கடவுள் (அல்லாஹ்) பார்வையில் நபிகள் நாயகம் அவர்களும், அபூதாஹீரும் இருவேறல்ல; யாரை விடவும் யாரும் உயர்ந்தவர் அல்ல;        யாரை விடவும் யாரும் தாழ்ந்தவர் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். மன்னிக்கவும்... நீங்கள் இசுலாமியராக இருக்கத் தகுதி அற்றவர் என்றே நினைக்கிறேன்....

- அங்கனூர் தமிழன் வேலு   

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

மனிதநேயமே உந்தன் விலை என்ன?


                வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் ! உலகில் எல்லா உயிர்களின் மீதும் நேசம் செய்ய வேண்டும் என்று இதை விட அழகாக சொல்லிவிட முடியாது; எம் தமிழ் தமிழ் பாட்டன் வள்ளலார் சொன்ன வரிகள் இது; அவர் பிறந்த இதே என் தாய் தமிழகத்தில் மனித நேயத்தாலும் மறுக்கப்பட்ட ஒருவர் இருக்கிறார்  என்றால் என் சகோதரன் அபுதாஹீர் தான்; காக்கைக்கும் குருவிக்கும், நிலத்திற்கும், நீருக்கும் கரிசனம் காட்டும் என் தாய் தமிழகம், என் சகோதரன் அபுதாஹீர் மீது  பரிதாபம் கூட காட்ட மறுக்கிறதே; அப்படியானால் இங்கே மனிதநேயம் இருக்கிறதா? விடுதலை என்ற சொல்லலை உச்சரிக்க யோக்கிதை எவருக்கும் இருக்கிறதா? என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன்; ஆனால் மரணத்தின் படுக்கையில் இருக்கும் என் சகோதரனின் உயிரை காக்க உங்கள் கரங்களை பற்றத் துடிக்கிறேன் தோழர்களே ! என் சகோதரன் இறுதி மூச்சையாவது  சுதந்திரமாக விடட்டுமே உதவுவீர்கள் என்று நம்புகிறேன்; 

யார் இந்த அபுதாஹீர்? ஏன் சிறைக்கு சென்றார்? இப்போது  அவருக்கு என்ன ஆயிற்று? ஏன் அவருக்கு நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்? என்று கேட்கிற தோழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்காக அபுதாஹீர் பற்றிய சிறு குறிப்பு...

கோயம்புத்தூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் அபுதாஹிர். கோவை குண்டுவெடிப்பில் பொய்யாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் வாடிவரும் 33 வயது இளைஞர். கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்.இவருக்கு 18 வயதாக இருந்தபோது மதுரையில் நிகழ்ந்த ஒரு படுகொலையில் இவர் உட்பட மூவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.2003ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இளம் வயதில் சிறைக்குள் தள்ளப்பட்ட அபுதாஹிர் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டவராவார். ஆனால் சிறை வாழ்க்கை காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் கல்வி கற்றார். இளங்களை நிர்வாக இயல் ((B.B.A)) மற்றும் முதுகலை வரலாறு (M.A) ஆகிய பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.

இந்த இளைஞனுக்கு SYSTEMIC LUPUS ERYTHEMATOUS என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நோயின் குணம் என்னவெனில், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து கொண்டே இருக்கும். அபுதாஹிரின் பார்வை குறையத் தொடங்கிவிட்டது. சிறுநீரகங்களும் ஏற்கனவே பாதிப்படையத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் அபுதாஹிருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. அவர் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.இவரது இறுதி நாட்களை நிம்மதியாகக் கழிக்க அந்த விடுதலை உதவும் என அபுதாஹிரின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

மேலும் துன்பப்படாமல் நிம்மதியாக மரணிக்க அரசு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார் அபுதாஹிரின் சகோதரர் சிக்கந்தர் பாஷா. இவர் கோவை உக்கடம் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.என் தம்பியின் வாழ்நாள் உடல் அளவிலும் மனரீதியாகவும் எண்ணப்பட்டு வருகிறது என்றார் அவர். மேலும் அபுதாஹிருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகள் குறித்து சிறைத்துறை கவனம் செலுத்தவில்லை என அவரது நண்பர் சம்சுதீன் கூறுகிறார். அபுதாஹிரின் உடல்நலக் குறைவை சீர்செய்யும் அளவு சிகிச்சைக்கான வசதிகள் கோவை மருத்துவக் கல்லூரியில் இல்லை. இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக நாங்கள் அறிந்துகொண்டோம் என்று கூறும் அபுதாஹிரின் நண்பர் சம்சுதீன் அபுதாஹிரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவரது மோசமான உடல்நிலையில் இருந்து ஓரளவாவது அவரை மீட்க அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.

அபுசித்தப்பா உடம்பு சரியில்லாத நிலையிலேயே ஒரு தடவை (பரோலில்) எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சாப்பிடும் உணவைவிட அதிகமாக அவர் சாப்பிடும் மாத்திரைகள் இருந்தன. சித்தப்பா எப்போது வருவார் என ஏங்குகிறார் அபுதாஹிரின் அண்ணன் மகள் ஆறு வயது சுஹைபா. ( தகவல் : TMMK Website)

அபுதாஹீரை கைது செய்யும்போது அவருக்கு வயது 18. 18 வயதில் ஒருவர் குற்றம் இழைத்திருந்தால் அவரை கைது செய்யும் போது அது சிறுவர் குற்றமாகத்தான் கருதப்படும்; ஆனால் காவி காவல்துறை திட்டமிட்டே அவரது வயதை உயர்த்தி வழக்கமான வழக்காக பதிவு செய்தது; 15 ஆண்டுகாலம் சிறையில் வாடி வதங்கி தன் சொந்த தேவைகளுக்கே (கழிவறை செல்லக்கூட ) மற்றவர்களின் துணையை எதிர்பார்க்கும் நிலையில் உள்ள அபுதாஹீரை உடனடியாக பரோலில் விட உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது; ஆனால் காவி நெஞ்சம் கொண்ட காவல்துறையோ வெளியே விட மறுக்கிறது; நம்முடைய சட்டம் என்ன சொல்கிறது என்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஒழுக்கமாக, குற்ற செயல்களில் ஈடுபடும் மனநிலையில் இல்லாமல் இருப்பாரேயானால் அவருக்கு  நன்னடத்தை அடிப்படையில் தண்டனையை குறைக்க அல்லது நீக்க பரிந்துரைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு; அந்த அடிப்படையில் பார்த்தால் கூட அபுதாகிர் சிறை வாழ்க்கை காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் கல்வி கற்றார். இளங்களை நிர்வாக இயல் ((B.B.A)) மற்றும் முதுகலை வரலாறு (M.A) ஆகிய பட்டப்படிப்புகளை கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருந்துள்ளார்; ஆனால் பரிந்துரைக்க அரசுக்கு ஏன் மனம் இல்லை? அவரை வெளியே விட்டால்,  வெளியே வந்தவுடன் குற்றசெயல்களில் ஈடுபடுவார் என்று அரசு சந்தேகிக்குமானால் அதைவிட முட்டாள்கரமான அரசு வேறெங்கும் இருக்க முடியாது. இன்றைக்கு தேதியில் அபுதாகிர் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருக்கிறார் என்பது அரசுக்கு தெரியாதா? அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய தமிழகம் மவுனம் சாதிப்பதன் நோக்கம் என்னவென்று  என்னால் புரிந்துகொள்ள முடிகிறது; தமிழகம் மனிதநேயத்திற்கு பெயர் போனது என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்; அந்த மனித நேயம் யாருக்கானது? அதற்க்கு ஏதாவது விதிமுறை உண்டா? என்பதுதான் என்னுடைய கேள்வியே... 

 இந்திய / தமிழக அரசின் காவி துரோகங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன; ஆனால் தட்டிக் கேட்கவேண்டியயவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது; கடந்த ஆண்டு தமிழகத்தின் வீதிகளில் தொடர் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன; பள்ளிக் கல்லூரிகளை  மாணவர்கள் புறக்கணித்துவிட்டு வீதிக்கு வந்தனர்; வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தார்கள்; வேலூர் மத்திய சிறையை  நோக்கிய அந்த முழக்கம் தமிழக  அரசின் கள்ள மவுனத்தையும் கலைத்தது; ஆனால் இன்று கள்ள மவுனத்தில் இருப்பது இதே தமிழகம் தான்,  தமிழகமே உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது!  ஆம், முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமாக தமிழகமே வீதிக்கு வந்தது என்றுதான் சொல்லவேண்டும்; ஆனால் உடல்நிலை நலிவுற்று, தம் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் எம் சகோதரர் அபுதாஹீரின் விடுதலையில் அக்கறை இல்லையா? இந்த  தமிழகத்திற்கு... முருகன், சாந்தன், பேரறிவாளன் அவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று சொன்ன இதே தமிழகமும் இன்று  கள்ள மவுனம் காக்கிறதே; தமிழர்களுக்கு இருப்பது மனிதநேயமா? மத நேயமா? என் அன்பு சகோதரர் அபுதாஹீர் இசுலாமியர் என்பதால் தான் இந்த கள்ள மவுனமா? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது தோழர் ஒருவர் சொல்லி இருந்தார். "இந்த நாட்டில் நீ அதிகாரபதவிகளுக்கு வரவேண்டுமானால்... நீ கொல்லைகாரனாக இருக்கலாம்; கொலைகாரனாக இருக்கலாம்... அடுத்தவன் குடியை கெடுப்பவனாக இருக்கலாம்... ஆனால் முஸ்லிமாகவோ...தலித்தாகவோ மட்டும் இருக்க கூடாது" இந்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது; அவர் சொன்னது இந்திய அரசின் அவலட்சணத்தை சுட்டிக்காட்ட தான் கூறினார், ஆனால் அபுதாஹீரின் விஷயத்தில் 100% பொருந்துகிறது ! என் தாய் தமிழகத்தில் சுற்றுசூழல் மாசுபட்டால் கூட பொங்கி எழும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒரு தலித்தோ, இசுலாமியரோ நாசப்பட்டால் கூட,எங்களுக்கு ஆதரவாக பேச யாரும் முன்வராத  நாதியற்ற மக்களாக நாங்கள் இருக்கிறோம் !

மற்றவர்களை விடுங்கள்!  அபுதாஹீர் விடுதலையில் இசுலாமியர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்த்தால் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது; நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தி, அமெரிக்க ஏகாதிபத்திய அரசு எடுத்த ஒரு திரைப்படத்திற்காக உலகில் உள்ள ஒட்டுமொத்த இசுலாமியர்களும் களத்தில் குதித்தார்கள்; அமெரிக்காவை அதிரசெய்யும் அளவுக்கு போராட்டம் வெடித்தது என் தாய் தமிழகத்தில் தான்; சென்னை மாநகரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் பங்கு கொண்டார்கள்; அமெரிக்க தூதரகத்தை பந்தாடினார்கள் ! அந்த எழுச்சி ஏன் இப்போது அபுதாஹீருக்காக எழவில்லை? இறைதூதரின் மீது உள்ள பற்று, இறப்பின் விளிம்பில் நின்று தவிக்கும் நம் சக தோழன் மீது இல்லையா? நான் இசுலாமியர்களை விமர்சிக்கவில்லை; இது சுய விமர்சனம், உங்களோடு என்னையும் சேர்த்துதான் விமர்சிக்கிறேன்.  அபுதாஹீரின் விடுதலைக்காக பாடுபடுவதும் இசுலாமியர்கள் தான்; அவர்கள் ஒரு சிலரே! ஒரு சில இயக்கங்களே ! இசுலாமியர்கள் ஒன்றுபட்டால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்துவார்கள்  என்பதை அமெரிக்க திரைப்படத்தின் மூலம் நான் கண்டு வியந்தேன்; ஏன் அப்படி ஒரு எழுச்சி அபுதாஹீரின் விடுதலைக்கு இல்லாமல் இருக்கிறது? பெரிதாக எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவையே தாக்க முனைந்த நம்மால், இந்த காவி அரசுகளை பந்தாட முடியாதா? சிந்தித்து கொள்ளுங்கள் தோழர்களே... நம்முடைய பலவீனம் தான் நம் எதிரிகளின் பலம்; நாம் அலட்சியாமாக இருக்கும் வரை, அவர்கள் லட்சியத்தை( நம்மை அழிப்பதை) நிறைவேற்றிக் கொள்வார்கள்...   

தமிழக அரசே இன்று நாங்கள் அபுதாஹீரை  விடுதலை செய்யுங்கள் என்று கேட்க காரணம், மரணப்படுக்கையில் இருக்கும் எம் அன்புசகோதரன் அபுதாஹீர், தம் இறுதி மூச்சையாவது சுதந்திரமாக விடட்டுமே என்ற நியாயமான கோரிக்கையில் தான். மரணத்தின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் அவர் கழிவறை செல்லும் போது  காவல்துறை கண்காணிப்பு செய்கிறதே ! இது நியாயமா? இதுதான் என் தாய் தமிழகம் சொல்லும் மனிதநேயமா? என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்..... 

- அங்கனூர் தமிழன்வேலு     

      

செவ்வாய், 25 டிசம்பர், 2012

சுயமரியாதைப் பாதை - 2 - அங்கனூர் தமிழன் வேலு

வீட்டிற்கு கேஸ் புக் பண்ண மறந்து விட்டேன், கடையில் கஸ்டமர் இருக்கும் போதே திட்டினாங்க, அதனால நான் வேலையை நிற்கிறேன் என்று சொன்னேன்.இதோடு தான் கடந்த சந்திப்பில் முடித்தோம். அதற்க்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன் வெளியேற வேண்டுமென்று.ஏன் அங்கிருந்து வெளியேற நினைத்தேன்? அதற்க்கு முன்பு நடந்த சம்பவங்கள் தான் அதற்க்கு காரணம் , அது ஐயப்பன் சீசன், விடிஞ்சா போதும் எங்க பார்த்தாலும் சாமியே சரணம் ஐயப்பா ! ஒரே சத்தமா இருக்கும்; எங்க ஓனர் தீவிர அய்யப்ப பக்தர், அவங்க அப்பா 18 வருஷம் மலையேறி குருசாமி ஆயிட்டார். அன்னைக்கு வேலையெல்லாம் முடிச்சிட்டு ரூமிற்கு போனேன்; நம்ம வசந்த மாளிகையில் லைட் எறிஞ்சிட்டு இருந்துச்சு, எப்பவும் நாமதானே லைட் போடுவோம், இன்னைக்கு அதிசயமா இருக்கே னு ஒரு பாட்ட பாடிகிய்யே உள்ளே போனேன். உள்ள பார்த்தா எங்க ஓனர் மனைவி என் பெஞ்ச்ல படுத்து இருந்தாங்க; இத்தனை நாளா என் ரூமுக்கு வராத மின் விசிறி அன்னைக்கு வந்து இருந்துச்சு; என்னன்னு ஓனரொட அம்மாகிட்ட கேட்டேன் அவங்க "வீட்டுக்கு தூரமாம்" சரி எப்பவும் நம்ம படுக்கை மொட்டை மாடிதானே னு நெனச்சிகிட்டே லுங்கிய தேடினேன், எல்லாமும் வெளியே கிடந்துச்சு. இந்த ரூம் கூட நமக்கு நிலை இல்லையே, நெனச்சிட்டே மொட்டை மாடிக்குப் போயிட்டேன். அன்னைக்கு மாடியில உட்கார்ந்து யோசிச்சிட்டு இருந்தேன். புரட்சியாளர் முன்மொழிந்த அந்த உணர்வுப்பூர்வமான வரிகள் நினைவுக்கு வந்தது. "சுயமரியாதை மனிதனின் சுவாசத்தைப் போன்றது; சுயமரியாதையை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்" இந்த வரிகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். சில கணம் சிறுவயது நினைவுகள் ஊசலாடியது; அப்போ என் தந்தை,அவரோட ஆண்டை வீட்டுல வேலை செய்வார்; நோட்டு, பேனா வாங்க நான் காசு கேட்டு வச்சுருப்பேன், அவரு அய்யா வீட்டுக்கு வாடா, நான் அய்யாகிட்ட வாங்கி தரேன் என்று சொல்வார், நான் அங்கெ போனா, எங்க அப்பா வீட்டுக்கு பின்புறமா வேலை செஞ்சிகிட்டு இருப்பார். எதுக்குங்க மூடி மறைக்கணும் ஓபனாவே சொல்லிடுறேன், வீட்டுக்கு பின்னாடி சாணி அள்ளிகிட்டு இருப்பாரு. நான் போனதும், அப்பா கொஞ்ச நேரம் இருடா என்று சொல்வார், அந்த அய்யா வந்ததும் என்ன ஏற, இறங்க பார்ப்பாரு, ஏன்னா அங்க மூட்டை ஏதாவது இருந்தால் அதுமேல உட்கார்ந்திருப்பேன் அதோடு மட்டுமில்லாமல் கால் மேல கால் போட்டுதான் உட்காருவேன்; இதனால் பல தடவை எங்க அப்பாகிட்ட திட்டு வாங்கி இருக்கேன், அதனாலேயே எங்க அப்பா என்ன அங்கே வரவேண்டாம் என்று சொல்வார்; வேறு வழியே இல்லனா வர சொல்வார். 

அன்னைக்கு எல்லாம் ஆண்டை முன்னாடியே நாம கால்மேல கால் போட்டுதான் உட்காருவோம்; ஆனா இன்னைக்கு இங்க வந்து இந்த ரூம்ல அடைபட்டு கிடக்கோமே ! அப்டினா எங்க அப்பா அந்த ஆண்டை கிட்ட முட்டி அடிச்ச்சதுக்கும், இப்போ நான் மூளை மழுங்கி கிடப்பதற்கும் வேறுபாடு உண்டா? அன்னைக்கு தாங்க உருப்படியா யோசிச்சேன். அதற்க்கு முன்பு அவங்க வீட்டுக்கு காய்கறி வாங்கி கொடுக்கும் போதும் சரி , வெள்ளிக்கிழமை தோறும் வீடு துடைக்கும் போதும் சரி எந்த ஒரு சூடு சொரணையும் இல்லாமல், ஓனருக்கு உண்மையா இருக்கணும் என்கிற விசுவாசம் மட்டும் தான் இருந்தது. வீட்டை விட்டு, வேலையை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன்; அனால் எக்காரணம் கொண்டும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என்ன சொல்லலாம் என்றும் யோசிச்சே வச்சிருந்தேன். "திட்டக்குடி ஜோசியர் சொன்னாராம், மின்சாரத்தால் என் உயிருக்கு ஆபத்து" என்று. அதனால் நான் வேலையை விட்டு நின்று கொள்கிறேன் என்றுதான் சொன்னேன்; என்னை அவர்கள் காயப்படுத்திய போதும் நான் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை. அப்போது என் கையில் இருந்தது வெறும் 5 ரூபாய். எங்க மாமா வெளிநாடு செல்லவேண்டும் என்பதற்காக, அவர்களிடம் முன்பே கொஞ்சம் பணம் முன்பணமாக பெற்று இருந்தேன். அதில் பாக்கி 2500 ரூபாய் திருப்பி தரவேண்டி இருந்தது. நான் சொன்னேன் நான் உங்களுக்கு ஏற்கனவே 2500 தரனும், இப்போ என்கிட்டே வெறும் 5 ரூபாய் தான் இருக்கு, இந்த ,மாதம் சாப்பாட்டு செலவுக்கு பணம் இல்லை அதனால் எனக்கு கூடுதலா 1000 ரூபாய் கொடுங்கள், மொத்தமா அடுத்த மாதம் கொடுத்து விடுகிறேன் என்றேன். அவர் சொன்ன பதில் என்னை வெகுவாக பாதித்தது. நீ முழுக்கடனையும் அடைக்காமல் செல்கிறாய்; அதற்காகவே உன்னை விடக்கூடாது, ஆனால் பழகியாச்சு என்பதால் விடுகிறேன், மேலும் பணம் தர முடியாது என்றார். மீண்டும் கெஞ்ச எனக்கு மனமில்லை. பழைய மணிவேலாக இருந்து இருந்தால் கெஞ்சி கூத்தாடி இருப்பான்; இவன் புரட்சியாளரால் மீட்கப்பட்டவன் ஆகவே கெஞ்சவில்லை; காலையில் என் துணிமணிகளை எடுத்து வைத்து விட்டு, எங்க ஓனரின் அம்மாவிடம் நான் கிளம்புகிறேன் என்று சொன்னேன். "சாப்பிட்டு விட்டு போ பா வேலு" என்றார்கள்; இல்லை வேண்டாம் அம்மா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன் . நான் அங்கிருந்து வெளியேறுவதில் அவருக்கு ( என் ஓனரின் அம்மாவிற்கு) துளியும் விருப்பமில்லை. எனக்கும் அவர்களை விட்டு பிரிந்து செல்வதில் மன சங்கடம் தான்; ஏன் என்றால் நான் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து திடீர் என்று எனக்கு டை- பாய்டு ஜுரம் வந்துவிட்டது. என் ஓனர் என்னை காந்திநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததோடு சரி பிறகு வந்து பார்க்கவே இல்லை; அனால் என் ஓனரின் அம்மா தினமும் எனக்கு கஞ்சியை மிக்சியில் அரைத்து சாப்பிட ஏதுவாக எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். என் தாய் அருகில் இல்லாத குறையை தீர்த்து வைத்தார். அந்த நன்றி உணர்ச்சி என்னை சங்கடத்தில் ஆழ்த்தியது. அவர்களுக்காக தான், என் உயிருக்கு மின்சாரத்தால் ஆபத்து என்று ஜோசியர் சொன்னார் என்று பொய்யும் சொன்னேன். அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை.

அங்கிருந்து வெளியேறி விட்டேன். அடுத்து என்ன செய்வது? எங்கே வேலை செய்வது? எந்த திட்டமும் முன்கூட்டியே இல்லை. ஒருவித பலமான யோசனையோடு, கையில் ஒரு பேக் வச்சுகிட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்; அப்போது நான் அந்த கடையில் வேலை செய்த போது அடிக்கடி அங்கெ எலக்ட்ரிகல் சாமான் வாங்க வரும் ஒரு நண்பர் வந்தார், எனக்கு நல்ல பழக்கமானவர் தான், என்ன தம்பி ஊருக்கு கிளம்பிட்டியா? என்றார். இல்லை அண்ணா என்று விஷயத்தை சொன்னேன்; சரி விடு இதுக்கு ஏன் கவலைப் படுற, "ஒரு கதவு மூடப்பட்டால் நிச்சயம் மற்றொரு கதவு திறக்கப்படும்" என்று ஆறுதல் கூறி என்னை அவர் பைக் ல ஏத்திக்கிட்டு அவங்க கம்பெனிக்கு அழைத்து சென்று முதலாளியிடம் பேசி எனக்கு வேலைக்கு ஏற்ப்பாடு செய்து கொடுத்தார்; கம்பெனி கீழ்தளத்தில் இயங்கியது. மேல் தளத்தில் வெளியூர் ஆட்கள் தங்கி வேலை செய்ய எதுவாக ரூம்கள் இருந்தன. அங்கே தங்கிக்க சொன்னார்கள்; ரொம்ப நன்றி அண்ணா என்று சொல்லிவிட்டு, மேலே சென்றேன். வேலை கிடைத்தாயிற்று, சம்பளம் வாங்கும் வரை சாப்பாட்டுக்கு வழி? அப்டியே கொஞ்சம் யோசிச்சவன் அந்த ஹோட்டல் இருக்கு அங்கே போகலாம்; அவர்கள் நமக்கு அறிமுகம் ஆனவர்கள் தானே, விவரத்தை சொன்னால் உதவுவார்கள் என்று நினைத்துக் கொண்டு போனேன், அந்த ஹோட்டல் நான் வேலை செய்த கடைக்கு நேர் எதிரில் தான். போய் தயங்கி தயங்கி சொன்னேன், அவருக்கு புரியல, என்ன வேலு எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுப்பா என்றார். விஷயத்தை சொன்னேன். இவ்வளவு தானா? போயி 2 ருபாய் பாக்கெட் நோட் ஒன்னு வாங்கிட்டு வந்து உன் பெயரை எழுதி வச்சுட்டு சாப்பிட்டுக் கொள். நோட்டுக்கு காசு தராத நான் கேட்டதா சொல்லு பிறகு நானே கொடுத்துக் கொள்கிறேன் என்றார். ஒரு மாதம் இல்லை, இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன்; உன் கடனை எல்லாம் அடைத்து விட்டு பிறகு எனக்கு சாப்பாட்டுக் காசு கொடுத்தாப் போதும் என்றார். நிறைவான மகிழ்ச்சி. அது மதியம் சாப்பாட்டு நேரம் என்பதால் நீ காலையில் சாப்பிட்டாயா? என்றார் இல்லை என்றேன். சரி இப்போ சாப்பிடு என்று வாஞ்சையோடு சொல்லி பரிமாறினார். சாப்பிட்டு முடித்து விட்டு ரூமுக்கு கூட செல்லவில்லை; நேராக பூக்கடையில் இருந்த என் அப்பாவை பார்க்க சென்றேன். கையில இருந்த 5 ரூபாய வச்சுகிட்டு வொயிட் போர்ட் பஸ்சுக்கு காத்திருந்து ஏறிக்கொண்டேன். பேரிஸ் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் போதுதான் சமத்துவம் என்றால் என்ன? என்பதை உணர்ந்தேன்; அரும்பு மீசையும் அழகான தாடியும் முளைத்தப் பருவம் அது; பஸ்ஸில் இருந்து இறங்கி என் அப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஒரு 55 வயது மதிக்கத்தக்க இசுலாமியர் எதிரில் வந்தார்; என்னைப் பார்த்து "அஸ்ஸலாம் அலைக்கும் பாய்" என்றார். புரியாத கண்களோடு பதிலுக்கு "அஸ்ஸலாம் அலைக்கும் பாய்" என்றேன். மீண்டும் அவர் நீங்கள் எந்த பள்ளிவாசல் என்றார். நான் முஸ்லீம் இல்லையே என்றேன். அப்படியா உங்களைப் பார்ப்பதற்கு முஸ்லீம் போலவே உள்ளீர்கள் என்று சொல்லி, இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

ஒரு இசுலாமியர் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு வசதிப் படைத்தவராக இருந்தாலும் அவருக்கு எதிரில் இருப்பவர் அவரை விட எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும், வயதில் சிறியவராக இருந்தாலும் மரியாதை செய்கிறாரே; இதுவல்லவா சமத்துவம்; இன்றைக்கு சிலர் என்னைப் பார்த்து திருமாவளவன் இசுலாமியர்களோடு நேசத்தோடு இருப்பதால் நீயும் இசுலாமியர்களை ஆதரிக்கிறாய் என்று கேலிப் பேசுகிறார்கள் ! இசுலாமியர்கள் மீது எனக்கு பாசம் திடீர் என்று வரவில்லை... அன்றைக்கே அந்த இடத்திலே நேசித்தேன் இசுலாமியத்தை.......
-------------------------------------------------
அடுத்த சந்திப்பில்.....
ஏதாவது படிக்க வேண்டும் என்று புறப்பட்டேன், 
காதலிக்க வேண்டும், 
திருமாவை ஏன் தலைவராக ஏற்றுக்கொண்டேன்?
-----------------------------------------------
மீண்டும் சந்திப்போம்......... 
அன்புடன் உங்கள் 
அங்கனூர் தமிழன் வேலு

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

டெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற்கா தூக்கு?


முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் முக்கியப் பிரச்சனையாக எடுத்து விவாதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். குறிப்பாக பி.ஜே.பி.யின் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில் 'தலைநகரில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை தடுக்காமல் அரசு என்ன செய்கிறது? இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். மேலும் சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன், 'பாலியல் பலாத்கார குற்றத்தை கொலை குற்றத்துக்கு சமமாகக் கருத வேண்டும். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். இந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்' என்று கூறி உள்ளார். மற்ற பல உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசி உள்ளனர். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட பரிந்துரைத்துள்ளார்.

இந்த கொடூர செயலுக்கு இத்தனைப் பேரும் கண்டனங்களை தெரிவிப்பது என்னவோ நியாயம் தான்; கண்டிக்கக் கூடியது தான்! ஆனால்....... இந்தியாவில் யாருக்கெல்லாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? யாரெல்லாம் அதில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார்கள்? என்றால் நமக்கு தலையே சுத்தும்; இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1995ல் ஏப்ரல் 27, ஆட்டோ ஷங்கர், 2004ல் தனன்ஜய் சாட்டர்ஜி, 2012ல் கசாப். ஆட்டோ சங்கர் 6 பேரை கொலை செய்த குற்றத்திலும், தனன்ஜய் சாட்டர்ஜி, 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கிலும், அஜ்மல் கசாப் 167 பேரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்கள்; அதன் பிறகு டெல்லியில் நடந்த தற்போதைய கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன; பலர் குற்றவாளிகளை தூக்கில் போட சொல்கிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான், ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்த கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அதிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டவர்களும் ஏராளம். விவசாயப் பெருமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு இன்று ஏகபோக சுக வாழ்க்கையை வாழ்பவர்களும் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதல்வர் சவானின் சொந்த கிராமமான கராட்டில் தலித் பெண் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாண‌மாக்கி அடித்து விரட்டினார்கள். சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ஒருவர் வீட்டிலே 16 வயது சிறுமியை கற்பழித்து, கொன்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் 44 விவசாயிகளை துடிக்கத் துடிக்க உயிரோடு ஒரு குடிசையில் வைத்து தீவைத்து கொளுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமமான வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். (Wikipedia) ஆனால் வாச்சாத்திக் கொடுமைக்கு தீர்ப்போ 19 ஆண்டுகள் கழித்துதான் வெளி வந்தது. 269 பேர்களுமே குற்றவாளிகள் , இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கி உள்ளது நீதி மன்றம். தண்டனை பெற்றவர்களை விட தப்பித்தவர்களே அதிகம். கடந்த ஆண்டு 2011, நவம்பர் 22ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.

இந்தியாவில் 2009 ஆம் ஆண்டைய புள்ளி விவரப்படி 2007யில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3010, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2106, உத்தரப்பிரதேசத்தில் 1648, பீகாரில் 1555, டெல்லியில் 598, அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1555, நாகாலாந்தில் 13, மணிப்பூரில் 20, சிக்கிமில் 24, அருணாச்சலப்பிரதேசத்தில் 48, மேகாலயாவில் 82, தென் மாநிலங்களைப் பொருத்தமட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக 1070, தமிழகத்தில் 523 வழக்குகளும், கேரளாவில் 512 வழக்குகளும், கர்நாடகத்தில் 436 கற்பழிப்புகளும் நடந்துள்ளன. இவை வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும்தான். வழக்குப் பதிவு செய்யப்படாதவை எத்தனையோ? அதிலும் தண்டனை வழங்கப்பட்டது எத்தனைப் பேருக்குத் தெரியுமா? 2007யில் மொத்தம் 20 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவானதில் 25 ஆயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டு, வெறும் 5 ஆயிரத்து 22 பேருக்கு மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டைப் பொருத்தவரை மொத்தம் 19 ஆயிரத்து 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 23 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு,வெறும் 5 ஆயிரத்து 310 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (தகவல் : நக்கீரன் : ஜூலை, 29, 2009).

அடுத்தபடியாக கொலைக் குற்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குஜராத்தில் வாழும் இசுலாமியர்களை குறிவைத்து அவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 1,200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 600 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், 400 குழந்தைகள் காணவில்லை, 500க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய நரேந்திர மோடி இன்று வரை தண்டிக்கப்படவில்லை, மாறாக மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அஜ்மல் கசாப்புக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற கடந்த கால சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் தற்பெருமையைக் காத்துக்கொள்ளவே கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஒரு குக்கிராமத்திலோ, அல்லது உலகின் பார்வைக்குப் புலப்படாத இடத்தில் எவ்வளவு பெரிய மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் அல்லது மனிதன் வாயில் மனிதனே மலத்தைத் திணித்து கொடுமை நடந்ததாலும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானாலும் எந்த மனித நேயவாதியும் வாய் திறப்பதில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த‌ வேளையில்கூட இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் யாராலும் அறியப்படாத மலைவாழ் கிராமத்தில் ஏதோ ஒரு காம மிருகத்தால் யாரோ ஒரு இளம்பெண் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம்; நரிக்குறவர் சமூகப் பெண்களை சர்வசாதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இதுவரை ஒரு வழக்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நான் அறிந்ததில்லை. அவர்களை காவல் நிலையத்துக்குள்ளே அனுமதிப்பதில்லையே பிறகு எப்படி புகார் கொடுப்பார்கள், வழக்கு பதிவார்கள்? நரிக்குறவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்காக உங்கள் மனித நேயம் பொங்கி புரையோடாதா? டெல்லியில் நடந்தால் அது கொலை, அது மனித உரிமை மீறல், அதுவே இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் குக்கிராமத்தில் நடந்தால் நியாயமா? தமிழக சேரிகளில் காவல் துரையின் அட்டகாசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை; அத்துமீறி உள்ளே நுழைந்து சேரிப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை; தலித் இயக்கங்கள் போராடி, வழக்குப் பதிவு செய்யத் தூண்டினால் சாதாரண வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே பிணையில் வெளி வந்துவிடுகிறார்கள்.

டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான்; பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை தூக்கில் இட வலியுறுத்தும் நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

"டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஆனால் அதுமட்டுமே நாட்டின் ஒரே பிரச்சனையைப்போல் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் விதர்பா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை சராசரியாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் ஆகும். இந்தக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் இது உலக சாதனை ஆகும். இதற்காக யாராவது வெடித்துக் கிளம்பிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? கண்ணீர் விட்டிருக்கிறார்களா? இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 48 சதவீதம். இது ஆப்பிரிக்கவின் மிகவும் பின்தங்கிய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை விட மிக அதிகம். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் தான். நம் நாட்டில் இதற்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழை மக்களுக்குப் போதிய மருத்துவ வசதியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு யாரும் குரல் எழுப்புவதில்லை.

இந்தியாவில் கல்வி, கசாப்புக்கடையைப் போல் உள்ளது. அரசின் பெரும்பாலான பணம் ஐஐடி-களுக்கும், ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகின்றது. அறிவுக்கு அடித்தளமிடும் தொடக்கப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதே இல்லை. விலைவாசியின் ராக்கெட் வேக உயர்வு. இன்னும் மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இவைகளைப் பற்றிப் பேச, கேள்வியெழுப்ப, போராட, கண்ணீர் விட மக்களோ, ஊடகங்களோ ஏன் பாராளுமன்றமோ கூட தயாராக இல்லை நடந்த கற்பழிப்பு சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இந்த டெல்லி சம்பவம் தான் நாட்டின் ஒரே பிரச்சனை என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள். மேலும் இந்தக் குற்றத்திற்கு இந்திய த‌ண்டனை‌‌ச் சட்டம் 376 இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தக் குற்றத்திற்கு சட்டத்தில் இல்லாத மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சலிடுவது எதற்காக என்று புரியவில்லை" என கட்ஜூ கருத்துத் தெரிவுத்துள்ளார்.

மரண தண்டனையே கூடாது என்பது தான் நம் நோக்கம், முழக்கம் எல்லாமே. ஆனால் மரண தண்டனை என்ற பேரில் மனிதநேயம் சாகடிக்க‌ப்பட்டு, காவி வெறி கொண்ட இந்தியாவின் போலி கவுரவம் தான் நிலை நாட்டப்படுகிறது என்பதே கசப்பான, பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. டெல்லியில் நடந்த கொடூர செயலுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு நின்றுவிடாமல், மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க குற்றங்கள் செய்யத்தூண்டும் காரணிகள் எவை என்பதை அறிந்து அரசு அதை களைய முன்வரவேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்காக அரசுக்கும் நீதித்துறைக்கும் காந்தியடிகள் பொன்மொழி ஒன்றை நினைவுப் படுத்துகிறேன், கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்.

- அங்கனூர் தமிழன் வேலு

புதன், 19 டிசம்பர், 2012

நடிகை குஷ்புக்கு எதிரான போராட்டம் ! இந்துக்கடவுள்கள் மீதான பக்தியா? ஆணாதிக்க திமிரா?


ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கொண்டு நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவரது சேலையில் ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உருவம் பொரித்து இருந்துள்ளது; ஆகவே நடிகை குஷ்பு இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டார் என்று இந்து மக்கள் கட்சியினர்குஷ்பு வீட்டை முற்றுகை இட்டுள்ளனர். இது உண்மையிலே  எந்த விதத்தில் நடந்தது என்பது தான் தற்போதைய கேள்வி; இந்துக் கடவுள்களின் மீதான பக்தியா? இல்லை ஆணாதிக்க திமிரா? 

அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன்;-

1. ராமர் ஏகபத்தினி விரதன்; அவர் சீதையை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட நினைக்கமாட்டார்; வேறு எந்த பெண்ணும் அவரை நினைக்கக் கூடாது என்றால் ராமர் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அனுமன் பிரமச்சாரி என்றால், அனுமன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் தட்சணையாக உண்டியலில் போடுவதை ஏன் எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்?

2. இந்துக் கடவுள்கள் படம் பொரித்து சேலை தயாரித்து அது சந்தைக்கு வந்தப் பிறகே நடிகை குஷ்பூ பயன்படுத்தி உள்ளார்; அப்படியானால் அந்த சேலையை தயாரித்த கம்பெனிக்கு எதிராகத் தானே போராட வேண்டும்? ஏன் ஒருப் பெண்ணிற்கு எதிராக போராடுகிறீர்கள்? 

3. இந்துக் கடவுள்களின் அவமதிப்புக்குவதால் தான் போராட்டம் செய்தோம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால் தினமும் பத்திரிக்கைகளில் வெளியாகும் கடவுள்களின் படங்கள் பயன்பாட்டிற்குப் பிறகு எங்கே செல்கிறது தெரியுமா? சாக்கடை, குப்பைத் தொட்டி, ரோட்டோரம் என்று காலில் மிதிபட்டு அவமதிப்பது உங்களுக்கு தெரியாதா? இன்னும் சொல்வோமானால் நீர் கிடைக்காதப் பட்சத்தில் மலம் துடைக்கவும் அது பயன்படத்தானே செய்கிறது? பத்திரிக்கைகளில் கடவுள்களின் படங்களை போடவேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?

4. ஒரு குடிகாரன், விலை மாதுக்கள் வீட்டிற்கு செல்பவன் ராமர் படமோ, அனுமன் படமோ பொரித்த சட்டையை போடும்போது மட்டும் அந்தக் கடவுள்களுக்கு அவமதிப்பு இல்லையா?

5. ஆண்கள் லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் கடவுள்களின் படங்கள் கொண்ட உடையை பயன்படுத்தினால் அது பக்தி; அதுவே ஒருப் பெண் ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோர் படங்கள் பொறித்த உடையை பயன்படுத்தினால் அது அவமதிப்பா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் போராட்டம் செய்தவர்கள் உளசுதியோடு பதில் சொல்வார்களா?

- அங்கனூர் தமிழன் வேலு

செவ்வாய், 18 டிசம்பர், 2012

சுயமரியாதைப் பாதைக்கு திரும்பிய கதை - அங்கனூர் தமிழன் வேலு



என் 18 ஆவது வயதில் தான் சாதியத்தின் கொடுமையை உணர்ந்தேன். பெரும்பாலான அறிவுஜீவிகள் கிராமங்கள் தான் இன்னமும் சாதியத்தை கெட்டியாகப் பிடுத்து தொங்குகின்றன; சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில் சாதியெல்லாம் யாரும் பார்ப்பதில்லை; எல்லோரும் சமமாகத்தான் வாழ்கிறார்கள் என்று சொல்கின்றனர், எழுதுகின்றனர். ஆனால் நான் சாதியத்தின் கோரமுகத்தை கண்டது அறிஜீவிகள் சொல்லும் நாகரிகம் வளர்ந்த சென்னையில் தான் ! ஒரு வகையில் நான் சென்னைக்கு நன்றிதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட கொடுமையை எனக்கு சென்னை அறிமுகபடுத்தாமல் இருந்திருந்தால் நானும் ஒரு சுயசாதி பற்றாளனாகவே இருந்திருப்பேன். அதனால் நானும் இச்சமூகத்திற்கு பரிகாரமில்லா பாவத்தை அல்லது தீங்கை செய்தவனாகவே இருந்திருப்பேன்.

                 பள்ளி இறுதி ஆண்டு படிப்பு முடிந்தது ! மேற்கொண்டு கல்லூரி படிக்க வசதி இல்லாத சூழல், அதனால் சென்னைக்கு ஓடி வரவேண்டிய நிலை, டீக்கடையில் க்ளாஸ் கழுவுவது, ஹோட்டலில் பென்ச் துடைப்பது, தட்டு கழுவது இப்படித்தான் சென்னையில் என் அறிமுகம் ! பிறகு தெரிந்தவர் மூலம் ஒரு எலெக்ட்ரிகல் கடையில் வேலைக்கு சேர்ந்து, அவங்க வீட்டிலே தங்கி வேலை செய்தேன்; அங்கயே தங்குவதால் சாப்பாடும் அங்கேதான். முதல்நாள் சாப்பிட அமர்ந்தேன்; அந்த வீட்டு சிறுவன் ஒரு சில்வர் தட்டை கொண்டுவந்து வைத்தான். நான் அந்த வீட்டுக்கு புதியவன் என்பதால் அமர்ந்தபடியே வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். "க்ரீச் என்ற சத்தம் கேட்டு திரும்பி தட்டை பார்க்கும் போது ஒரு அலுமினிய தட்டு இருந்தது !" எனக்குள் பெரிய குழப்பம். ஏன் என்றால் எனக்கு இதுவரை அப்படி எந்த அவமதிப்பும் நிகழ்ந்ததில்லை; சரி போகட்டும் என்று சாப்பிட்டு, கடைக்கு சென்றுவிட்டேன், இரவு திரும்பியவுடன் என்னிடம் தம்பி அந்த அறையில் தங்கி கொள் என்றார்கள். எனக்கு மிகுந்த சந்தோசம் ! இதுநாள்வரை ஓலைகுடிசையில் அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஒரே இடத்தில் படுத்திருந்தவனுக்கு தனி அறை என்றால் சந்தோசம் வரத்தானே செய்யும், ஆர்வத்தோடு ஓடினேன். ஓடிய வேகத்தில் திரும்பவும் மொட்டைமாடிக்கு ஓடிவிட்டேன். ஒரே அழுகை; அழுது தீர்த்தேன் ! வீட்டில் சிலகாலம் சாப்பாட்டுக்கு வழியில்லாத நாளில் கூட நான் அழுததில்லை அன்று அழுதேன். அந்த அரை வாழிங்மெஷின் ரூம் . கழிவறையை விட கொஞ்சம் பெருசு.  அங்கேதான் கிழிந்த துணிகள் எல்லாம் கிடந்தன.மறுநாள் அனைத்தையும் நானே சுத்தம் செய்தேன். அந்த வாழிங்மெஷினை வெளியே எடுத்து வைத்துவிடலாம் என்று நினைத்தால் மழையில் நனைந்தால் அது கெட்டுவிடுமாம் ! அதனால் உள்ளேயே இருக்கட்டும் பா... என்றார்கள்... 1 அடிக்கு 6 அடி அளவில் இரண்டு பென்ச் கொடுத்தார்கள். படுத்துக் கொள்ள; காலையில் நான் 9 மணிக்கு கடைக்கு சென்றுவிடுவேன் அப்போதெல்லாம் துணியை மெஷினில் போடலாம், ஆனால் அவர்கள் காலை 6 மணிக்கே வந்து போடுவார்கள்; இரவு 10 மணிவரை வேலை செய்த களைப்பில் அசந்து தூங்க நினைத்தால் முடியாது; இரவில் கொசுக் கடி தாங்காது; ஆகவே மொட்டை மாடிதான் என் படுக்கை அறையாக இருக்கும்; மழை நாள் என்றால் எம் பாடு திண்டாட்டமே; எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அங்கெ வேலை செய்ய எனக்கு என்ன தலைவிதியா? ஆம் ! தலைவிதி தான். வீட்டில் வறுமை என்ன செய்ய? என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். சமாதனம் சொல்லிக்கொண்டேன் என்பதை விட எதிர்ப்பு மனநிலை இல்லை; அடிமைபுத்தி என்றுகூட சொல்லலாம். அங்கெ வேலை செய்த இரண்டு வருடம் கழித்து தான் வந்தது எனக்கு தன்மானம், சுயமரியாதை எல்லாம். அதுவும் கடைக்கு வரும் ஒரு கஸ்டமர் ஒருத்தர் அம்பேத்கர் புத்தகத்தை மறந்து விட்டுட்டு போய்ட்டார். போன் பண்ணி சொன்னேன்; அதற்க்கு அவர் நான் அடுத்த வாரம் தான் வருவேன் அப்போது வாங்கி கொள்கிறேன் என்று சொன்னதால் இரவில் அதை படித்தேன். அந்த வாஷிங்மெஷின் ரூம்ல தான் எனக்கு அம்பேத்கர் அறிமுகம். அடுத்த ஒருவாரத்தில் வீட்டிற்கு கேஸ் புக் பண்ண மறந்து விட்டேன் என்பதால் கடையில் வைத்து கஸ்டமர் இருக்கும் போதே திட்டினார்கள்; கோவம் பொத்துக்கொண்டு வந்தது; இனி என்னால் வேலைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு மறுநாள் காலையிலே வெளியேறினேன். 

.........இன்னமும் இருக்கு  காத்திருங்கள்....

திங்கள், 17 டிசம்பர், 2012

புதிய தலைமுறையில் தவறிய கடிதம் !


             புதிய தலைமுறை ஆசிரியர் அவர்களே  வணக்கம் ! நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். என் கடந்த கடித சந்திப்பில் கூறியது போல தங்களின் சமூக விழிப்புணர்வு பணியை பெரிதும் மதிக்கிறேன். அது மேலும் மேலும் செழுமையடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பல ஆண்டுகளாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் வார இதழோ, அல்லது புலனாய்வு இதழோ வாங்கி பிரித்தவுடன் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண காட்சிகளும், சினிமா கிசுகிசுக்களும் நிறைந்து இருக்கும்; அதை எங்களின் அனுமதியே இல்லாமல் எங்கள் மூலையில் செலுத்தி ஆதிக்கம் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஆதிக்கத்தை உடைத்து, நடுப்பக்கம் என்பது நிர்வாணத்திற்கு அல்ல, நம்பிக்கையின் அஸ்திவாரம் என்று எங்களுக்கு நம்பிக்கை செலுத்தியவர் நீங்கள்; அந்த நடுப்பக்கத்தை ஆதரித்து  தான் உங்களின் நடுநிலைக்கு நற்சான்றிதழ் கொடுத்தோம். அந்த நடுநிலை இவ்வளவு சீக்கிரம் சரிந்துவிடும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

           டெங்கு காய்ச்சலைப் பற்றி பல்வேறு தரப்பு நாளிதழ், வார இதழ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் மட்டும்தான் அச்சம் தவிர் என்றீர்; ஆனால் எங்கள்  அச்சம் எல்லாம் உங்கள் குரல் யாருக்கானது என்பது தான் ! என்ன அச்சம் என்று குழம்புகிறீர்களா? " எங்களது பார்க்கவ குல (உடையார்) பெண்களுக்கு திருமாவளவன் தலைமையிலான பறையர் இன இளைஞர்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அரியலூர், பெரம்பலூர்,கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் உடையார் இனப் பெண்களை பறையர் ஆண்கள் திட்டமிட்டு நாடகத் திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர். இவர்கள் அருந்ததியர் இனப் பெண்களை திருமணம் முடிப்பதில்லை !" இப்படிப்பட்ட சாதிய வன்மம் நிறைந்த, பிற்போக்குத்தனமான கருத்தை வெளியிட்டு இருப்பது யார் என்பது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன முதலாளியும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதிய தலைமுறை, தொலைகாட்சி,   புதிய தலைமுறை வார இதழ்,  புதிய தலைமுறை கல்வி வார இதழ் முதலாளியுமான  பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் தான்.

           தருமபுரி கலவரத்தை விமர்சித்து காதல் திருமணம் மட்டும் தான் பிரச்சனையா? என்று தலைப்பிட்டு பல்வேறு தரப்பினரின் கருத்தை பதிவு செய்த, புதிய தலைமுறை நடுநிலை நாளேட்டுக்கு நன்றி !. ஆனால்  அதேவேளையில்  டிசம்பர் 2 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் 48 லெட்டர் பேட் சாதி சங்கங்களின் கூட்டத்தை கண்டிக்க மனமில்லையோ என்றுதான் தோன்றுகிறது. தருமபுரி கலவரம் கண்டிக்க கூடியது தான், ஆனால் அதேவேளையில் இந்த தலித்துகளுக்கு எதிரான அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களின் ஒருங்கிணைப்பு இன்னும் ஆயிரம் தருபுரிகளை உருவாக்க காத்திருக்கிறது என்பதை உணரவில்லையா? உணர்ந்து நமக்கென்ன என்று இருந்து விட்டீர்களா? இது சாதிப் பாசமா? இல்லை முதலாளி விசுவாசமா? என்பதை புதிய  தலைமுறை விளக்கும் என்று நம்புகிறேன். இதற்க்கு ஆசிரியர் அவர்கள் பதில் வைத்திருப்பார், புதிய தலைமுறை அரசியல் விமர்சன இதழ் அல்ல; சமூக விழிப்புணர்வு இதழ் என்று! 

    சாதிய வன்முறைகளை கண்டிக்காமல், சாதியத்தை எதிர்க்காமல், சாதியத்தை வேரறுக்காமல் வேறு எந்த சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை தாங்களே அறிவீர்கள். வெறும் 19 சதவிகிதம் மட்டுமே உள்ள தலித்துகளுக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள 81 சதவிகிதம் சாதி இந்துக்களை ஏவி விடுவது என்பது எவ்வளவுப் பெரிய கொடூரம்! எவ்வளவுப் பெரிய ஆபத்து!! எவ்வளவுப் பெரிய அநியாயம் !! என்பதும் தாங்கள் அறிந்ததே ! ஒருவேளை அந்த கூட்டத்திலே திரு.பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் புதிய தலைமுறை தம் வாளை சுழற்றி இருக்குமோ என்னவோ?

          ஒரு தனி நபரின் அல்லது ஒரு இயக்கத்தின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை தாங்கி பிடிக்க இரண்டு  யுக்திகளை கையாளலாம்; ஒன்று அவர்களின் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசுவது, அதைதான் சன் நியூஸ், கலைஞர் நியூஸ், ஜெயா டிவி, கேப்டன் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்கள் செய்கின்றன. மற்றொன்று அவர்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் அமைதி காத்துகொண்டே,  அவர்களை தவிர மற்ற அனைவரையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வது இரண்டாமாவதை தான் புதிய தலைமுறை செய்கிறது. முதலாமாவது எல்லோரையும் முகம் சுளிக்க வைக்கும்; இரண்டாமாவது செயல் தந்திரம் என்று சொல்லலாம்.முதலாமாவது முகம் சுளிக்க வைத்தாலும் மக்களை அது எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை; நம்புகிறவர்கள் நம்பலாம்; இல்லை என்றால் தவிர்த்து விடலாம்! ஆனால் இரண்டாமாவது நம்பிக்கை துரோகம்!  

          பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் என்கிற அவர்கள் இதற்க்கு முன்பு கூட, அதாவது புதுக்கோட்டை இடைத்தேர்தல் நேரத்தில் விருத்தாசலத்தில் பார்க்கவ குலத்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பாரிவேந்தர் என்று பெயர் வைத்ததற்காக கொதித்தெழுந்த புதிய தலைமுறைக்கு இதை கண்டிக்க மனமில்லை ஏனோ? அம்பேத்கர் கார்டூன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பியதற்கு அய்யய்யோ கருத்துரிமையின் குரல்வளையை திருகுகிரார்களே என்று கோபம் கொந்தளிக்க தலையங்கம் தீட்டிய புதியதலைமுறைக்கு  தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதித்தவுடன் ஆஹா மகிழ்ச்சி! என்று வரவேற்று தலையங்கம் தீட்டிய புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டித்து தலையங்கம் தீட்ட மனமில்லை? 1.5 லட்சம் தமிழர்களை கன்று குவித்த இனக்குற்றவாளி ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து லயோலா அருகே அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்க முடிந்த புதிய தலைமுறைக்கு, தலித்துகளுக்கு எதிராக அனைத்து தலித் அல்லாத சாதி சங்கங்களை ஒருங்கிணைத்ததை ஏன் கண்டிக்க மனம் வரவில்லை? 

        என் நண்பன் என்னிடம் அடிக்கடி சொல்வார் " நீ வெளி உலகத்தை பார்க்க ஆசைபட்டால் முதலில் உன் வீட்டு அறையை முழுதும் சுற்றி பார்த்துவிட்டு பிறகு ஜன்னல், கதவுகளை திற" என்று. அதையே இன்று நான் புதிய தலைமுறைக்கும் சொல்கிறேன். கடைசியாக தோழர் இளந்தமிழன் அவர்கள், கொள்கைவீரர் கலைஞர் அவர்களுக்கு என்று தலைப்பிட்டு தபாலில் தவறிய கடிதம் எழுதி "காகித பூ நாடகமா? இல்லை இதுதான் உண்மையா?" என்று கேள்வியை எழுப்பி இருந்தார். அதையே இன்று உங்களிடம் நானும் கேட்கிறேன், உங்களின் நடுப்பக்கம் தான் உண்மையா? இல்ல இந்த மௌனம் தான் உண்மையா? உங்களின் நடுப்பக்கம் யாருக்கானது? இளைய தலைமுறையான நாளைய தமிழகத்திற்கா?  இல்லை புதிய தலைமுறையின் உரிமையாளர் திரு. பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களுக்கா? பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களை ஏன் விமர்சிக்கவில்லை என்று மற்ற பத்திரிக்கைகளை நான் கேட்கவில்லை; உங்களை மட்டும் தான் கேட்கிறேன் ! ஏன்னா நீங்கதான் நடுநிலை சமூக விழிப்புணர்வு வார இதழாச்சே !!!

அன்புடன்... 
அங்கனூர் தமிழன்வேலு

வெள்ளி, 14 டிசம்பர், 2012

திருந்தி வாருங்கள் ! திரும்பி வாருங்கள் !


நாற்ப்பத்தெட்டு சாதியினர் 
மருத்துவர் அய்யா 
தலைமையேற்று ஓரணியில்!

அய்யா ...நாற்ப்பதொன்பதாய்
நாங்களும் வருகிறோம் !

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்
மீனவனின் உயிருக்கு உத்திரவாதம்
இல்லையாம்; பாதுகாக்க வேண்டிய
இந்திய அரசுக்கு, அவர்கள் மீது
அக்கறை இல்லை; பாதுகாப்புக்கு
செல்வோம் வருவீர்களா?

காந்தல் மலராய் கருகிப்
போன நம் ஈழ சொந்தங்களின்
கண்ணீரைத் துடைக்க, ஐ.நா.
வின் மௌன கதவை தட்ட
மத்திய அரசுக்கு நெருக்குதல்
கொடுப்போம் வருவீர்களா?

முல்லைப் பெரியாரை
உடைக்கப் போகிறார்களாம்;
பாதுகாக்க வேண்டிய மத்திய
அரசோ, ராணுவப்
பாதுகாப்பு தாராதாம்;
வாருங்கள் பாதுகாக்க
படை எடுப்போம் வருவீர்களா?

பாலாற்றின் குறுக்கே அணை
கட்டப் போகிறார்களாம்;
அணை கட்டிவிட்டால் அழிவு
நமக்குத்தானே ! வாருங்கள்
அணை கட்ட கூடாது என்று
ஒன்றிணைவோம் வருவீர்களா?

காவிரியை எதிர்பார்த்து
கண்ணீர் மட்டுமே மிச்சமாய்
இருக்கும் நம் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க,
காவிரியில் இருந்து நீர் எடுக்க
நடைபயணம் செல்வோம்
வருவீர்களா?

இப்படி ஒவ்வோர் நாளும்
உத்திரவாதமற்ற வாழ்வை
தமிழர்கள் வாழும் வேளையில்
எங்களுக்கு எதிராய் முண்டாசு
கட்டுகிறீரே நியாயமா?

எங்களை தனிமைப் படுத்துவது
உங்களைத் தனிமைப்படுத்துவதற்கு
சமமய்யா ! திருந்தி வாருங்கள் !
திரும்பி வாருங்கள் !
நாம் காண வேண்டிய களம்
நூறாயிரம் !

- அங்கனூர் தமிழன்வேலு

வியாழன், 13 டிசம்பர், 2012

சமூகத்தின் குரலாய் வீரமங்கை !

குரலற்றவள் தான் 
மங்கம்மாள்; ஒட்டுமொத்த 
எம் சமூகத்தின் குரலாய் 
ஓங்கி ஒலித்திருக்கிறாள் !

தான் விரும்பியதை 
விரும்பியபடியே
வினவ முடியாதவள் 
தான் மங்கம்மாள்;
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் 
கொஞ்சம் கூட கூச்சமின்றி 
கொளுத்தப்படும் சேரிகளுக்காக 
கொதித்து எழுந்திருக்கிறாள் !

வாய்ப் பேச முடியா 
மாற்றுத் திறனாளி தான் 
மங்கம்மாள்; ஆனால் 
மாற்றமே நிலையான 
இப்பூவுலகில், மாறாத 
கொடுமையாய் எரியும் 
ஏழைக் குடிசைககளை   
கண்டு கோபம் கொண்டிருக்கிறாள் !

ஊமையின் குரலாய் 
ஓங்கி ஒலிக்கிறாள்
மங்கம்மாள்; செவுட்டுத் 
தமிழகம் நட்சத்திர 
கொண்டாட்டத்தில் 
மிதக்குது ; நாயக 
பிறந்தநாளை போட்டிப் 
போட்டு கொண்டாடுது;
அரிதாரம் பூசியவருக்கு 
இன்று தலைப்பு செய்தி;
அநியாயம் கண்டு துடித்த 
போராளி மங்கம்மாவுக்கு  
கடைசிப்பக்கத்தில் பெட்டி செய்தி !  
இதை விட வெட்கம் 
உண்டா? இதை விட 
கேடு உண்டா?


வீரமங்கை மங்கம்மாவே...
மன்னித்துக் கொள்வாயாக !
அநியாயம் கண்டும் வாய் 
பேசா மடந்தைகளும்,
அலறித் துடித்தாலும் காதில் 
வாங்கா செவிடர்களும்
நிறைந்த ஊனமுற்றவர்கள் 
இங்கே பலர்;  அவர்களை  
விடுத்து ஊமையின் 
குரலாய் ஓங்கி ஒலித்த 
உம்மை ஊனமுற்றவள் 
என்று  அழைத்தமைக்கு !

வீரவணக்கம் சொல்லுகிறேன் 
உந்தன் விழித்திரையில் 
விழித்துக் கொள்ளட்டும்
எம் சமூகம்; மௌன 
குரலாய் ஓங்கி ஒலித்த 
உம் பறை முழக்கம் 
இந்த மௌன தமிழகத்தை 
தட்டி எழுப்பட்டும்! 
------------------------  
வீரவணக்கத்துடன் 
அங்கனூர் தமிழன் வேலு

சாதியத்தின் உயிர்ப்பு !



                 சாதியம் இன்று பல்வேறு பரிணாமங்களை தொட்டு வளர்ந்து வரும் விஷச்செடி! சாதி ஒழிப்பு இயக்கங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், சனநாயக சக்திகள், மனிதநேய விரும்பிகள் இப்படி எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் சாதியத்தின் மீது இன்னமும் சின்ன சிராய்ப்புக் கூட விழவில்லையே ஏன்? இது ஒரு இயல்பான, எதார்த்தமான ஆதங்கமான கேள்வி! அதற்க்கான பதிலும் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களின் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சாதியத்தை சாய்ப்பது அல்லது வேரறுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதே ! ஏற்றுக்கொள்கிறேன், சாயக்கமுடியாது, வேரறுக்க முடியாது ஆனால் வளராமல் தடுக்க முடியுமல்லவா? ஏன் வளர்கிறது? நவீன யுக்தியையும் பயன்படுத்தி  வளர்கிறதே எப்படி?ஏன்? செல்போன், இணையம், ஐ பேட், இவை எல்லாவற்றிலும்  சாதியம் இருக்கத்தானே செய்கிறது. எங்கிருந்து வளர்கிறது? தடுக்க என்ன வழிமுறை இருக்கிறது? என்பது தான் நம்முன் கிடக்கும் மிகப்பெரிய சவாலான கேள்வியும் கூட ! சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று  காரணங்களை முக்கியமாக சொல்லலாம் ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

என்ன செஞ்சி கிழிச்சீங்க? இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழிக்கும் நீர்ப்பறவை !



என்ன செஞ்சி கிழிச்சீங்க?
இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழிக்கும் நீர்ப்பறவை !
 ----------------------------------------------------

         மீன்வாங்க மார்கெட்டுக்கு போனவுடன் அது அழுகிய மீனா? அழுகாத மீனா? என்று ஆராய்ந்து பார்க்கும் நமக்கு அந்த மீனை பிடித்து கொடுக்கும் மீனவன் அழுகிறானா?சிரிக்கிறானா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை; புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் நமக்கில்லை நாம்தான் வாங்கிய மீனுக்கு காசு கொடுக்கிறோமே அப்டித்தானே ! அப்டிதான் இன்றைக்கு தமிழக  மக்கள், "எனக்கு என்ன?" என்று அலட்சிய மனப்பான்மையோடு வாழப் பழகி கொண்டுள்ளார்கள்; மீனவர் பிரச்சனையில் மட்டுமல்ல ஏறக்குறைய தமிழகத்தின் அன்றாட அத்தியாவசியப் பிரச்சனைகளில் எல்லாவற்றிலும் இதே மனப்பான்மையோடு நாம் வாழப் பழகிகொண்டோம்; "இடி நம் வீட்டில் விழாதவரை நமக்கு எந்த கவலையும் இல்லை" ! சரி கதைக்கு வருவோம்....

        நடிகர் விஷ்ணு, நடிகை சுனைனா, சமுத்திரக்கனி, நந்திதாதாஸ், சரண்யா, தம்பி ராமையா, மற்றும் பலர் நடித்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கி உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்  திரைப்படம் நீர்ப்பறவை.

கதை:  

      இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவனை ராமேஸ்வர மீனவர் குடும்பம் தத்தெடுத்து வளர்க்கிறது. அவன் வளர்ந்த பிறகு முழுநேர குடிகாரனாக ஊரில் உள்ள அத்துனைப் பேரிடமும் கடன் வாங்கி குடிக்கிறான். ஒட்துமொத்த ஊரே வெறுத்து ஒதுக்கினாலும் தாய் அவனை பாசத்துடன் வளர்க்கிறாள். பிறகு கதாநாயகியின் அன்பில் உருகி அவள்மேல் காதல்வயப்பட்டு, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தவன் சுனைனாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். சுனைனாவின் வளர்ப்பு தாய் வேலை எதுவும் இல்லாத இவனை நம்பி என் மகளை திருமணம் செய்து கொடுக்க இயலாது என்று மறுக்கிறாள். கதாநாயகியை திருமணம் செய்து கொள்ள விரும்பி வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். கதாநாயகி சுனைனா கதாநாயகனை ஒரு மீனவனாக பார்க்க ஆசைப்படவே மீன்பிடிக்க விரும்பும் போது  கடலில் மீன்பிடிக்க ஊரில் உள்ளவர்கள் அவனை  அனுமதிப்பதில்லை. அவன் பிறப்பில் மீனவனா இல்லையா? என்று தெரியாமல் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்று  சொல்கின்றனர். பிறகு ஊர் கூட்டத்தில் மீன்பிடிக்க அனுமதித்தாலும் யாரும் படகு தரமாட்டோம் என்று சொல்லி விடுகின்றனர். சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கிறேன் என்று சபதம் இட்டு கடுமையாக உழைத்து சமுத்திரக்கனியிடம் தவணைமுறையில் சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கிறான். கதாநாயகியின் வளர்ப்பு தாயும் திருமணத்திற்கு சம்மதிக்க திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் மீன்பிடிக்க சென்றவன் திரும்பவில்லை. இலங்கை கடற்படையால் சுட்டுக்கொள்ளப்படுகிறான். அவனை யாருக்கும் தெரியாமல் கதாநாயகனின் தந்தை கண்டுபிடித்து எடுத்துவந்து வீட்டிலேயே புதைத்து விடுகின்றனர். ஊரில் எல்லோரும் அவன் காணவில்லை என்றே நினைத்துகொண்டிருக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு  கதாநாயகனின் மகன் தன தந்தை இறந்துவிட்டதையும், அவரை வீட்டிலே புதைத்து வைத்து இருப்பதையும் கண்டுபிடித்து தாயை போலீசில் காட்டிக் கொடுக்கிறான். போலிஸ் விசாரணையில் நடந்த உண்மைகளை சொல்லும் கதாநாயகியை நீதிமன்றம் அவளது அறியாமையை மன்னித்து விடுதலை செய்கிறது.

விமர்சனம்:   

      தண்ணீரிலே மிதக்கும் மீனவனின் வாழ்க்கை நிலையை மிக தத்ரூபமாக காட்சி படுத்தி உள்ளது படத்தின் உயிராக இருக்கிறது. முழுநேர குடிகாரன் எப்படிப்பட்ட நிலையில் இருப்பான் என்பதையும், அவனை மற்றவர்கள் எப்படி கையாளுவார்கள் என்பதையும் நன்றாக காட்சி படுத்தி உள்ளனர். படத்தில் கொஞ்சமும் பிசுகாமல் மீனவனின் வாழ்வியலை அப்படியே படம்பிடுத்தி உள்ளனர். இலங்கை அகதியை தமிழகத்து தமிழர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு சாட்சியாக கதாநாயகனை மீன்பிடிக்க அனுமதிக்காத அந்த காட்சியே போதுமானது. ராமேஸ்வர மீனவர்களின் வாழ்வில் இந்த அரசு எப்படி அக்கறை கொள்கிறது என்பதற்கும், அவர்களின் கூக்குரல் கடலின் அலையோடு கரைந்துதான் போகிறது என்பதற்கும் இந்த படம் ஒன்றே சாட்சி. ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி ராமேஸ்வர மீனவர்களும் வாழவேண்டுமா? வேண்டாமா? என்பதை சிங்களப் பேரினவாத அரசுதான்  தீர்மானிக்கிறது என்பதையும் இப்படம் மிகத்தெளிவாக கூறுகிறது. இசுலாமியராக வரும் சமுத்திரக்கனி திரையில் தோன்றும் இடமெல்லாம் அரசை கடுமையாக சாடுகிறார். மொத்தத்தில் ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட வாழ்வியலை கொஞ்சம் கூட பிசகாமல் படம் பிடித்து சிறகடிக்கிறது நீர்ப்பறவை. நீரில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமெங்கும் சிறகடிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். 

படத்தின் சிறப்பு: 

       ஒரு  இடத்தில் சமுத்திரக்கனியை சக மீனவர் ஒருவர் நீங்கள் தான் ( இசுலாமியர்கள்) எங்கள் துயரில் கலந்து கொள்ளமாட்டேன் என்கிறீரே என்று சொல்ல அதற்க்கு சமுத்திரக்கனி நாங்கள் மவுனமாக இருந்தால் ஒதுங்குகிறோம் என்று சொல்கிறீர்கள்; கூட்டமாக வந்தால் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள் என்று சொல்லும் காட்சி இசுலாமியர்களை இந்த நாடு எப்படி பாவிக்கிறது என்பதற்கு சாட்சி. 

      அதே காட்சியில் மீனவர்களின் துயரை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை என்பதற்கு சொல்லும் விளக்கம், நம்மிடம் ஒரு 30 தொகுதிகள் இருந்தா; நம் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கும். நமக்கு தான் ஒரு தொகுதிகூட இல்லையே அதனால் தான் இந்த கடல் அலையோடு கலந்துவிடுகிறது என்று சொல்லும் காட்சி பொய்யின் கலப்பே இல்லாத உண்மை.

     மற்றொரு காட்சியில் மீனவர் ஒருவர் சொல்லுவார், மீனவனை கடலோர காவல்படை சுட்டுக் கொன்றால் எல்லையை தாண்டியதால் சுட்டார்கள் என்று சொல்கிறார்கள்; எல்லையை எப்படி தெரிந்துகொள்வது? அங்கெ என்ன தடுப்பு சுவரா கட்டி வச்சுருக்காங்க? ஒரு கயிறில் பஞ்சை  போட்டு வச்சுருக்காங்க அது அலை அடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து விடுகிறது என்று சொல்வார்.  இதை அரசு கவனிக்க வேண்டும். எல்லையை மீனவர்கள்  தெரிந்துகொள்ளும்படி  மாற்று ஏற்ப்பாட்டை செய்யவேண்டும்.

      சமுத்திரக்கனி தோன்றும் காட்சி ஒன்றில் மீனவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இருப்பார் இயக்குனர். இதை மீனவர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

           நீதிமன்றத்தில் நீதிபதி உங்கள் கணவர் இறந்ததை ஏன் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று நந்திதாதாசை கேட்கும் போது நந்திதாதாஸ் என் கணவர் உட்பட 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். நீங்க என்ன செஞ்சீங்க? என்று ஒற்றைவரியில் மீனவர்களின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லி, இந்திய, தமிழக அரசுகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார் இயக்குனர்.

      ஈழத்தமிழர்களுக்கும், ராமேஸ்வர மீனவத்தமிழர்களுக்கும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர். இதை அரசு கவனிக்குமா? இல்லை வழக்கம் போலவே கள்ள மவுனம் காக்குமா?

     இறுதியாக நந்திதாதாசை நீதிமன்றம் அவரது அறியாமையை மன்னித்து விடுவிப்பதாக சொல்வார்கள். அங்கேதான் நமக்கு சந்தேகம் எழுகிறது. இயக்குனர் சார்பில் நாம் இந்த அரசை கேள்வி கேட்போம். அறியாமையில் இருப்பது மீனவர்களா? மீனவர்களின் துயரைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் இந்த அரசா? 

      ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களது மனைவிகள் எப்படி வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் இத்திரைப்படம் வெற்றிப் பெற வாழ்த்துவோம். மேலும்   ராமேஸ்வர மீனவர்களின் குரலை கடலை தாண்டி தமிழகம் எங்கும் வெளிக் கொண்டு வந்தமைக்காக இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். .............

மனமார பாராட்டுகிறோம் சீனு ராமசாமி சார்.... 

           --------------------------------------------------------- X --------------------------------------------------------- X 
     ராமேஸ்வர மீனவர்கள் இப்படி நித்தம் வாழ்வா?சாவா? என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது இந்த அரசுக்கு வைரவிழா ஒரு கேடா? என்றைக்காவது அந்த மீனவர்களின் துயரைத் துடைக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதா? ஆளாளுக்கு பவளவிழா என்றும், வைரவிழா என்றும் கொண்டாட்டங்களில் மிதக்கவே விரும்புகின்றனரே, எம்மக்களின் துயரை துடைக்க, சாமான்ய மக்களின் கண்ணீரை துடைக்க அரசுகள் முன்வரவேண்டும்..... 

வாழ்த்துக்களுடன்....
அங்கனூர்  தமிழன் வேலு 

       

செவ்வாய், 27 நவம்பர், 2012

இல்லையா தீக்குச்சி?


உன்னுடைய குடிசைகள்  
கொளுத்தப்படுவதும்,உன்னுடைய 
குரல்வளை  நசுக்கப்படுவதும்
உன்னாலே; உனக்குள் இருக்கும் 
உணர்வுகளை உணராத, ஆதிக்க 
வர்க்கத்திற்கு உணர்த்தாத 
அலட்சியத்தாலே; 

எரிகிற குடிசை எல்லாம் 
சேரியாய் இருக்கிறது; 
அழுது சிவக்கின்ற நிலமெல்லாம்  
சேரியாய் இருக்கிறது;
அழுது குமுறுவதும்  பின் எரிந்த 
சாம்பல் முன் புலம்புவதும் 
உன் வாடிக்கையானது !
அதுவே ஆத்துக்க வர்க்கத்திற்கு 
வேடிக்கையானது 

உன் உயிருக்கு உத்தரவாதம் 
இல்லையேல் வைத்துக்கொள்
இடுப்பில் கத்தி ! 
உன் குடிசையை கொளுத்த 
ஆதிக்க வர்க்கம் தீப்பந்தம் 
தூக்குமானால் உன்னிடம் 
இல்லையா ஒரு தீக்குச்சி?

- அங்கனூர் தமிழன் வேலு 

திங்கள், 26 நவம்பர், 2012

பெரியார் திடலில் சாதி மதங்களுக்கு எதிரான பெருநெருப்பு !



சாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பிராமணாள் கபே, ஸ்பெலென்டர் அய்யர், போன்ற சாதி துவேஷங்கள் மீண்டும் வலுப்பெருகிறதே பெரியாரியவாதிகள், சனநாயக சக்திகள் என்ன செய்கிறார்கள் என்ற மனக்குமுறல் இருந்தது. அடுத்து காடுவெட்டி குரு, பொங்கலூர் மணிகண்டன், பழ கருப்பையா போன்ற சனநாயக தீய சக்திகள் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக வாள் சுழற்றுகிரார்களே என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் "கருப்பு சட்டைக்காரர்கள் என்றைக்கும் சளைத்தவர்கள் அல்ல; சாதி மறுப்பு திருமணத்தை நீங்கள் எதிர்த்தால் நாங்கள் நடத்துவோம்" என்று முன்வந்து சவாலுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். 


நிகழ்ச்சிக்கு பிராமிணர் சமூக தோழர்களும் வந்திருந்தது பெரியாரின் சாதி ஒழிப்பு  பயணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !  நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தது 82 வயதுள்ள சீனிவாசன் என்பவர் தனக்கு 50 மதிக்கத்தக்க துணைதேவை என்று வந்திருந்தார். அந்த பெரியவரின் வருகையில் தான் தந்தை பெரியார் வெற்றி கண்டுள்ளார். கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதல் திருமணத்தில் நம்பிக்கை இழந்து மறுமணம் புரிய வந்திருந்தவர்கள் என அத்தனைப் பேரின் வார்த்தைகளிலும் சாதி மதங்களுக்கு எதிரான நெருப்பு தெறித்தது. வந்திருந்தவர்கள் 99 சதவிகிதம் பேர் மணமகன் / மணமகள் பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை பதிவு செய்தார்கள். அதிக அளவில் மறுமணம் புரிய பெண்கள் வந்திருந்தனர். பெரியாரின் சுயமரியாதை திருமணம் அதன் அவசியம் இன்றைக்கு தேதியில் மக்களிடம் நல்ல எழுச்சியை பெற்று உள்ளது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக இன்றோடு நின்றுவிடாமல் தொடர்ந்து நடக்கவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் விரும்பினார்கள். நாமும் விரும்புவோம். சாதி மதங்களை கடந்து மணமகன், மணமகள் தேடி வந்திருந்த அத்தனைப் பேருக்கும் நாமும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே......

சனி, 24 நவம்பர், 2012

என்ன செய்ய போறீங்க?



Add caption
காக்கை குருவி 
எங்கள் சாதி !
மரங்களும் மலர்களும் 
மனிதர்களுள் பாதி !
நீரும், காற்றும் இன்னபிற 
இயற்கையும் மனிதரின் 
உயிர்நாடி ! - இது தமிழ் 
கூறும் நல்லுலகின் 
ஓயாத முழக்கங்கள் !

தருமபுரியில் 
பாதிக்கப்பட்டது 
காக்கையோ குருவியோ 
அல்ல; மரமோ மலரோ 
அல்ல; நீரோ காற்றோ 
இன்னபிற இயற்கையோ 
அல்ல!

மனித இனத்திலே 
பிறக்ககூடாத 
தீண்டத்தகாத இனம் !
இழிதொழிலை செய்தவன் 
இனி முடியாதென்பதா?
ஓலைக்குடிசையிலே 
உருண்டவன் ஓட்டு 
வீட்டிலே வாழ்வதா?
உழைத்து கொடுக்க 
மட்டுமே பிறந்தவன் 
உரிமை என்று 
முழங்குவதா?
ஊருக்கு வெளியே 
ஓரமாய் கிடந்தவன் 
ஊருக்குள் நடப்பதா?
அடிவாங்கவே பிறந்தவன் 
அடங்கமறுத்து, அத்துமீறி 
திமிறி எழுந்து திருப்பி 
அடிப்பதா?

அச்சச்சோ... 
அநியாயமாச்சே
இதுவும் தமிழ்பேசும் 
நல்மாந்தர் எனும் 
ஆதிக்கவர்க்கத்தின் 
எழுதப்படாத, ஏட்டில் 
வரையாத, சத்தமில்லாத 
சாக்கடைத்தனமான 
சர்வாதிகார 
முழக்கங்கள் தான் !

ஈழ வேடமிட்டு; போலி 
கோஷமிட்டு தமிழ்தேசம் 
எனும் சாதியதேசம் கட்டத்
துடிக்கும்  சாதிதமிழ்
தேசியவாதிகளின் ஆசிபெற்ற 
முழக்கங்கள் தான் போலும் ! 
அதனால் தானே இன்னமும் 
கள்ள மவுனம் காக்கின்றனர்?

தமிழன் இல்லாத நாடில்லை ! 
ஆனால் தமிழனுக்கென்று ஒரு 
நாடில்லை! தருமபுரி சாதி 
வெறியாட்டம் ஒட்டுமொத்த 
தமிழ்தேசியத்திற்கு எதிராக 
விடப்பட்ட சவால் அல்லவா?

தம் இறுதி மூச்சுவரை 
மூத்திரப்பையுடன் 
கிஞ்சிற்றும் சமரசம் இன்றி 
சாதி ஒழிப்புக் களத்திலே 
சுழன்றுக் கொண்டிருந்த 
பெரியாருக்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

பசியும் பட்டினியுமாய் 
உழைக்க மட்டுமே தெரிந்த 
பாமரனின் ஒரு நூற்றாண்டின் 
உழைப்பையே சுரண்டியுள்ளனரே;
இது மார்க்சியத்திற்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

தமிழ்தேசியவாதிகள்;
பெரியாரியவாதிகள்;
மார்க்சியவாதிகள்;
இன்னபிற சனநாயக 
சக்திகள் தமிழகத்தில் 
நித்தம் அரங்கேறும் சாதி 
வெறியாட்டத்தை எப்படி 
எதிர்கொள்ளப் போகிறார்கள்?
என்ன செய்யப் போகிறார்கள்?
எப்படி தமிழ்தேசத்தை கட்டி 
எழுப்பப் போகிறார்கள்?

முடிவை அவர்களின் 
சிந்தனைக்கே விட்டு 
விடுகிறேன்.....

- அங்கனூர் தமிழன்வேலு

சனி, 17 நவம்பர், 2012

கலப்பு திருமணம் கூடாது !

ஒரு சமூகம் உயிர்ப்போடுத்தான் இருக்கிறது என்பதை இரண்டு விதங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ஒன்று கருத்து பரிமாற்றம் மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம்; அதே வேளையில் இந்த சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கருத்து பரிமாற்றம் மிகவு
ம் அவசியமாகிறது. ஆனால் அந்த கருத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள் எவரும் கவலைப்படுவதில்லை. ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் "எனக்கு பூச்சரம் கட்டத்தெரியும் என்பதால் காகிகதப் பூவைக் கொண்டு பூச்சரம் கட்டினால் பூச்சரம் மணக்காது" என்று. அப்படித்தான் எனக்கு எழுதத்தெரியும் என்பதாலோ, எனக்குப் பேசத்தெரியும் என்பதாலோ எதை வேண்டுமானாலும் எழுதிவிடமுடியுமா? எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒரு கருத்தோ அல்லது ஒரு எழுத்தோ சமூக பொறுப்பு உள்ளவர்களின் மூலம் சமூகத்தின் பார்வைக்கு செல்லும் பட்சத்தில் அந்த சொல் தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த சொல் சமூகத்தில் எவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு தவறை தான் இங்கே எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆம் ! சாதி மறுப்பு திருமணத்தை கலப்பு திருமணம் என்று எழுதியும், பேசியும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். கொச்சைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அது எதோ நடக்ககூடாத ஒன்று போலவும் பாவப்பட்ட செயல்போலவும் சித்தரிக்க முனைகிறார்கள்.

இதற்க்கு முதலில் கலப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அவசியமாகிறது. கலப்பு என்பது இருவைக்கப்படும் ஒன்று இனக்கலப்பு மற்றொன்று பொருட்கலப்பு; இனக்கலப்பு என்பது ஒரு இனம் அதற்க்கு முற்றிலும் வேறுபட்ட இனத்தோடு சேர்ந்து கொள்வது அல்லது உறவை ஏற்ப்படுத்திக் கொள்வதே ஆகும். பொருட்கலப்பு என்பது ஒரு பொருள் அதன் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்ட பொருளுடன் இணைந்து கொள்வது (உதாரணமாக பாலுடன் நீரை கலப்பது) இதுவே கலப்பு ஆகும். அடுத்து இனம் என்றால் என்ன? இனம் எத்தனை வகைப்படும்? (உயிரியலில், இனம் என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரினங்களை உருவாக்கக் கூடிய ஒரு தொகுதி உயிரினங்கள் என வரையறுக்கப்படுகின்றது. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது. எனினும், டிஎன்ஏ ஒப்புமை அல்லது உருவாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான அல்லது வேறுபட்ட முறைகளிலும் இனம் என்பதற்கு வரைவிலக்கணம் தரப்படுவது உண்டு. இனங்களுக்குள் காணப்படும் சூழல் சார்ந்த இயல்பு வேறுபாடுகள், அவற்றைப் பல்வேறு துணையினங்களாகப் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன. (நன்றி wikipedia) சுருக்கமாக சொல்வதேயானால் பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம். அந்த வகையில் அடிப்படையில் மூன்றே இனங்கள் தான் உண்டு. ஒன்று மனித இனம், இரண்டு விலங்கினம், மூன்று தாவரஇனம்.

ஆகவே தான் இனங்களுக்கான வகையறைகள் அல்லது வரையறைகள் இப்படி இருக்கும் பட்சத்தில் சாதி என்பது ஒரு இனமா? மதம் என்பது ஒரு இனமா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. சாதி என்பது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாத அல்லது பிரித்து வைத்து தான் நலமாக வாழ யாரோ ஒரு சிலரால் செய்யப்பட்ட ஒரு கயநெறியே ஆகும். இன்னும் சொல்வோமானால் தந்தை பெரியார் அவர்கள் இதை மனுதர்மம் எனும் தீரக்கருமத்தின் சூத்திரம் என்று சொல்வார். ஒரு சாதியை சேர்ந்த பெண் மற்றொரு சாதியை சேர்ந்த ஒரு ஆண்மகனையோ, ஒரு சாதியை சேர்ந்த ஆண்மகன் மற்றொரு சாதியை சேர்ந்த பெண்ணையோ திருமணம் செய்துகொண்டால் அது கலப்பு திருமணமா? அல்லது சாதி மறுப்பு திருமணமா? தன் குணநலன்களோடு ஒத்த சக மனிதனையே திருமணம் செய்து கொள்ளும்போது அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தான் சாதி மறுப்பு திருமணம் என்று பிரகடனம் செய்தார்கள். ஆனாலும் இன்னும் பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள் கலப்பு திருமணம் என்றே எழுதுகிறார்கள். இது தவறான சிந்தனைக்கு இட்டு செல்லும் என்பதை அவர்கள் உணர்கிறார்களா? அல்லது சாதியும் ஒரு இனம் என்ற விஷத்தை மக்கள் மனதில் பதியவைக்க துடிக்கிறார்களா? என்று தெரியவில்லை !

சாதியின் மீது அதீத நாட்டம் கொண்டவர்கள் இதை ஒரு சூழ்ச்சியாகவே பயன்படுத்துகிறார்கள். எப்படியாவது சாதியை மக்கள் மனதில் தக்கவைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடு. சாதியை ஒழிக்கவேண்டும் என்று வலியப் பேசுவார்கள்; வாயடிப்பார்கள் ஆனால் சாதி மறுப்பு என்ற சொல்லைக்கூட உச்ச்சரிக்கமாட்டார்கலாம்; குறைந்தபட்சம் சாதிமறுப்பு என்ற சொல்லைக்கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முனைவார்கள்? ஒருப் பெண்ணோ அல்லது ஆணோ சாதியின் மீது நம்பிக்கை இழந்து சாதிகளை கடந்து திருமணம் செய்துக் கொள்ளும் போது அதை கலப்பு திருமணம் என்று எழுதிக் கொச்சைப்படுத்தி மக்கள் மனதில் அது எதோ வினோதமான செயல் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். இதுதான் இந்துத்துவத்தின் சூழ்ச்சி, சூது, வெற்றி ! 

சாதியை வலியுறுத்த எப்படி எல்லாம் முயலமுடியுமோ அப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். இவர்கள் சொல்வதுப் போல கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரு ஆட்டை திருமணம் செய்துக் கொள்ளவில்லை; ஒரு கழுதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; எல்லா விதத்திலும் மனிதனுக்கே உரிய குண நலன்களை கொண்ட சகமனிதனைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் ! ஆனாலும் இவர்கள் பார்வையில் அது கலப்பு திருமணமாம். அப்படியானால் ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு கழுதையை திருமணம் செய்துகொண்டால் அதற்க்கு என்ன பெயர் சொல்வார்கள்? சாதி என்ற ஒரு இனமே இல்லாத பட்சத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? 

தங்கள் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மனதில் எப்படி பதியும், எந்த வித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை
அறிந்து கொண்டு எழுதுவதுதான் ஒரு முற்போக்கு சிந்தனையாளரின் சிறந்த பார்வையாக இருக்கமுடியும். இந்த சமூகத்தில் சிந்தனையாளர்கள் முற்போக்குவாதிகளால் தான் பெரும் மாற்றங்கள் நிகழ்த்து உள்ளன. அப்படி உள்ள வேளையில் சாதியை வேரோடு ஒழிக்க வேண்டிய பொறுப்பும் சிந்தனையும் சமூக சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்குமே உரியது. அதை விடுத்து இவர்களும் இப்படியே செய்வார்களேயானால் அது ஒரு பிற்போக்கு சிந்தனையாகவே மாறும். கலப்பு திருமணம் என்றே சொல்லிக் கொண்டு வருவோமானால் சாதியின் மசுரைக்கூட புடுங்க முடியாது. சாதியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி மறுப்பு என்ற சொல்லாடலை நடப்பில் கொண்டுவாருங்கள். சொல்லில் கூட சாதிமறுப்பை உறுதி செய்யவில்லை என்றால் சாதியை ஒழிப்பது என்பது இயலாத ஒன்றே.....

- அங்கனூர் தமிழன்வேலு

வெள்ளி, 9 நவம்பர், 2012

சர்வதேசப் பார்வை வேண்டும் !

தமிழகத்தில் இன்றைக்கு தேதியில் ஈழத்தமிழனுக்காக யார் வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டலாம்; கூடிப் பேசலாம்; கொள்கை என்று முழங்கலாம்! முந்தையக்காலங்களைப் போல ஈழம் என்றாலோ. பிரபாகரன் என்றாலோ பொடா, தடா என்ற ஆள்தூக்கி சட்டங்கள் அமுலில் இல்லை ஆகவே
 நாம் பேசலாம். அதனால் என்ன பிரயோஜனம்? பசியில் வாடிவதங்கி; வயிறு சுருங்கி வாழ்வே இருண்டு வாடிக்கிடக்கும் ஈழத்தமிழனின் வாழ்வில், தமிழகத்தில் நாம் போடும் கூட்டங்களோ, ஆயிரம் பேர் அல்ல 5 ஆயிரம் ேர்க் கூடி எழுப்பும் கோஷங்களோ எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிடாது; ஈழப்பிரச்சனை உள்ளூர் அல்லது உள்நாட்டுப் பிரச்சனையில் இருந்து உலக, சர்வதேசப் பிரச்சனையாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. 85 களில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பத்திரிக்கை நிரூபர் ஒருக் கேள்வி கேட்கிறார். அமேரிக்கா எந்த அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவுகிறது? அதற்க்கு தலைவரின் பதில் : இலங்கையில் உள்ள திரிகோண மலை அடிவாரத்தில் ஒரு நிலையான கப்பல்ப்படை தளத்தை அமைத்துக்கொள்ள அமேரிக்கா விரும்புகிறது; அப்படி அமைத்துக்கொண்டு தெற்காசிய நாடுகளையே தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமேரிக்கா விரும்புகிறது; அதற்க்கு இலங்கை அரசின் ஆதரவு தேவைப்படுகிறது; அதனால் அமேரிக்கா இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்று சொல்லி இருக்கிறார். தலைவரின் பதிலின் மூலமே ஈழம் 85 களிலே சர்வதேசப்பிரச்ச்சனையாக உருவெடுத்து இருப்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆகவேதான் சொல்கிறோம் ஈழத்தை சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாருங்கள்; உலக அரங்கில் ஈழப்பிரச்சனையை பேசுங்கள்; உலகத்தின் செவுட்டுக் காதுகளில் கேட்குமாறு உரத்துப் பேசுங்கள் என்று. அன்றி அப்படி இல்லையேல், சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாராமல் உள்ளூர் அரசியல் பகையை வைத்து அரசியல் செய்ய நினைத்துக்கொண்டு பேசுவோமானால் இங்கே நாம் போடுகிற கூட்டங்களும், கோஷங்களும், கொள்கை முழக்கங்களும், முத்துக்குமார், கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன், விஜயராஜ் போன்ற தியாகிகளின் தியாகங்களும் மண்ணுக்கு இரையாகுமே ஒழிய எம்மக்களின் நீண்டநெடிய லட்சியத்தை அடையவோ, பால்சுரக்காத தாயின் மார்பை சப்பி பால்...பால் என்று அழும் பிஞ்சுகளின் பசியைப் போக்கவோ உதவாது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

இங்கே சிலர் ஈழப்பிரச்சனையை வைத்து பகடி ஆடுகிறார்கள். தமிழர்களை பிரித்தாள நினைக்கிறார்கள்; அவர்கள் வேறு யாருமல்ல, அதிதீவிர தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் என்று தம்மைத்தாமே அடையாலப்படுத்துக் கொண்டு புகழ்ந்துக் கொள்ளும் கோமாளிகள். வேட்டிப் பேச்சிலும் வீண் பொழுதுப் போக்கிலும் நேரத்தை கழித்து தமிழர்களை திரையரங்க இருளில் மூழ்கடித்த காலி டப்பாக்கள். இவர்கள் தான் கனடாவில் விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கோமாளிகள், காலி டப்பாக்கள் நவம்பர் மாதம் துக்க மாதம் எனவே கொண்டாட்டங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மாவீரர்கள் தினம் துக்க தினமா? மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதையே கேட்போமே... 1989 ஆம் ஆண்டு முதல் மாவீரர்கள் தின உரையில் தலைவர் பேசும் போது, கார்த்திகை திங்கள் நவம்பர் 27 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் சங்கர் என்ற போராளியின் நினைவுதினம் நவம்பர் 27, அந்த தினத்தை தான் நாம் மாவீரர்கள் தினமாக அறிவித்து உள்ளோம். இயக்கத்தின் முக்கியதளபதியாக இருந்தாலும் கடைசி வீரராக பணியாற்றிய போராளியாக இருந்தாலும் எல்லோரும் சமம் என்பதை உணர்த்தவே அனைத்து போராளிகளின் நினைவாக நவம்பர் 27 யை மாவீரர்கள் தினமாக கொண்டாடுகிறோம். எம் இனம் இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது அதற்க்கு இயக்கத்திற்கும், தமிழீழத்திற்கும் தம் இன்னுயிரை நீத்த 1207 போராளிகளின் தியாகமே காரணம். இந்த தியாகிகளின் தியாகத்தால் எம் இனம் உலக அரங்கில் பெருமை கொள்கிறது. இதை இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்று பிரகடனப்படுத்தினார். அடுத்து 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில், எம் இன சுதந்திரத்திற்காக எம் மக்களின் கவுரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை நீத்த இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எம் இதயக்கோவிலில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர்கள் என்று கூறினார். அடுத்து 1993 ஆம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில் தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.


எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே...
இன்று மாவீரர் நாள் !
நமது தேசவிடுதலை இயக்கத்தின் வரலாற்றுச் சிற்பிகலான, நம்மைவிட்டுப் பிரிந்த மாவீரர்களின் நினைவுநாள். இன்று அடிமைத்தளையும், எவலார்கலாயுமிருந்த நிலையையை மாற்றி நமது தேசத்தை விடுதலைப் பூமியாக்க ஒரு வீரமிக்க போரை இந்த மண்ணின் விடுதலைக்காக ஆற்றிய அம்மாவீரர்களின் நினைவை நெஞ்சிற் சுமந்து போற்றுகின்றோம். பராதீனம் செய்ய முடியாத நமது தாய் மண்ணிற்கான உரிமையை " எங்கள் நாடு எமக்கே உரியது" என்ற கோட்பாட்டுடன் சர்வதேச அளவில் அந்தப் போராளிகள். மாவீரர் நாள் என்பது ஒரு துக்கநாளோ, அழுதுப் புலம்பும் நாளோ அல்ல. அந்நாள் ஒரு புத்துயிர்க்கும் நாள்.பிரதிக்ஞ்சையும் உறுதிப்பாடும் கொண்ட நமது தேசிய எழுச்சி நாள்!
(நன்றி: மாவீரர் உரைகள் நேர்காணல்கள் புத்தகம்)


மாவீரர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அல்லது நியாயத்தை தலைவரின் சொல்லில் இருந்தே பார்த்தோம். அப்படித்தான் மாவீரர்கள் தினம் உருவாக்கப்பட்டது. தமிழ்தேசத்திர்க்கு விலைமதிப்பில்லாத தம் இன்னுயிரை துறந்து மண்ணின் விடுதலைக்கு களமாடிய, இன்னமும் களமாடிக்கொண்டிருக்கிற தியாகிகளை நினைவுகூர்ந்து, எந்த லட்சியத்தை தம் நெஞ்சில் சுமந்தார்களோ, எந்த கொள்கைகாக்க தம் உயிரை நீத்தார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று சூளுரைக்கும் அல்லது உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் நாளே மாவீரர்கள் நாள். மாவீரகள் சாவிற்கு அஞ்சக்கூடியவர்கள் அல்ல. அவர்களின் இறப்பு சாதாரண நிகழ்வும் அல்ல. கண்ணீர் சிந்தி, அழுது புலம்பி அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் கோமாளிகள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நாம் ஏன் இளையராஜாவை ஆதரிக்கிறோம்? உலகில் பத்துக்கோடிக்கும் மேல் தமிழர்கள் இருக்கிறார்கள்; அந்த பத்துக்கோடிக்கும் அதிகமான தமிழர்கள் அனைவருக்கும் ஈழ விவகாரம் சென்றடைந்ததா? ஈழத்தமிழர்கள் ஆடும் இன்னல்களை கண்டும், கேட்டும் அதனால் அவன் மனம் வெந்து வீதிக்கு வந்தானா? என்பது ஆயிரம் மில்லியன் கேள்விதான்; ஆனால் அந்த பத்துக்கோடிக்கும் மேலான தமிழர்கள் மட்டுமில்லாது தமிழர்கள் அல்லாத பிற மொழித் தோழர்களும் இளையராஜாவின் இசைக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவேதான் இளையராஜா அங்கெ சென்று இசைநிகழ்ச்சி நடத்தும் போது அது அவரது ரசிகர்கலானவர்களின் கவனத்தில் நிச்சயம் பதியும். எதற்க்காக அந்த நிகழ்ச்சி என்று அவர்கள் ஆராயும் வேளையில் தமிழீழத்தின் நோக்கமும் புலிகளின் நோக்கமும் அவர்களை சென்றடைந்து அது ஒரு பேரெழுச்சியாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே தான் இளையராஜாவின் கனடா நிகழ்ச்சியை நாம் வரவேற்கிறோம்; ஆதரிக்கிறோம்.

அடுத்ததாக இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சுதந்திரமான நீதி விசாதரனையை ஐ.நா மேற்கொள்ள வலியுறுத்தியும் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் ‘பிரித்தானியா தமிழர் பேரவை’ சார்பில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை பிரிட்டன் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழுவும் இணைந்து நடத்துகின்றன. இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து தி.மு.க வின் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. எம்.பி.கள் தி.ஆர்பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு லண்டன் சென்று உள்ளனர்.ஆனாலும் தமிழ்தேசியக் களத்தில் நிற்கும் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொது செயலர் வைகோ, கொளத்தூர் மணி, சீமான் போன்ற சிலர் இம்மாநாட்டை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்டால் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்வதனால் அங்கெ நாங்கள் கலந்து கொள்ளமுடியாது என்றும், வழக்கம் போலவே சேற்றை வாரி இறைக்கும் செயலில் முனைப்பு காட்டி உள்ளனர். உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய சர்வதேசப் பிரச்சனையை உள்ளூர் அரசியல் பகையை காரணம் காட்டி புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும்...
முனைவர் அ .ப.அறவாணன் அவர்கள் சொல்வதைப்போல இதுநாள் வரையில் தமிழர்கள் மத்தியில் உள்ளது கூட்ட உணர்ச்சியே ஒழிய கூட்டு உணர்ச்சி அல்ல என்பது நூறு சதவிகிதம் பொருத்தமே... தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் கூட்டு உணர்ச்சியை உருவாக்க முன்வரவேண்டும்

தமிழினத்தை ஒடுக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? நம் கண்முன் கிடக்கும் இருபெரும் கேள்விகள். அதைப் பற்றி யோசிக்க மறுக்கிறோம்... உடனே நம்மிடம் இருந்து பதில் காங்கிரஸ் காரணம், கருணாநிதி காரணம் என்று மிக எளிதாக சொல்லிவிட்டு அரசியல் செய்ய போய்விடுகிறோம்...

அங்கே தமிழினம் அழிவதற்கு காங்கிரசும் ஒரு காரணம். ஆனால் காங்கிரஸ் மட்டும் தான் காரணம் அல்ல... 30ஆண்டுகால ஆயதப் போராட்டக் காலத்தில் எந்த நாடு புலிகளை ஆதரித்தது. ஈழத்தை அங்கீகரித்து... புலிகள் இயக்கம் என்பது வெகுமக்கள் இயக்கம் தான் என்பதை இதுநாள் வரையில் நம்மால் உலக குருட்டுக் கண்களுக்கு நிருபிக்க முடிந்ததா? குறைந்தபட்சம் இந்திய அளவிலாவது எடுத்து செல்ல முடிந்ததா?

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் - பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து - உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நாட்டிருக்கும் எதிரான இயக்கம் இல்லை என்றபோதிலும் பெரும்பாலான நாடுகளில் இயக்கத்திற்கு தடை உள்ளதே ஏன்? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் போராளிக்குழுக்கள் ஆயுதத்துடன் கிளம்பிவிடுவார்களோ? அதற்க்கு புலிகள் இயக்கம் முன்மாதிரியாக இருந்துவிடுமோ என்று அச்சப்படுகின்றன! எனவே தான் உலக நாடுகளில் தமிழன் எங்கு சென்றாலும் அடிக்கின்றான். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்னமும் இலங்கையில் புலிகள் இயக்கத்திற்கு தடையே கிடையாது. தற்போதுதான் தடை விதிக்கலாமா என்பதையே விவாதித்து கொண்டு இருப்பதாக கேள்வி பட்டேன்... எனவே தான் சொல்கிறேன் நம் பிரச்சனையை மெதுவாகவோ அல்லது உள்ளூரில் வைத்தோ பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழீழத்தின் அவசியத்தை, தமிழர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை, விடுதலைப் புலிகள் உருவாக நேரிட்ட சூழ்நிலையை உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் செய்யவேண்டும். ஒன்றுபடவேண்டிய காலம் வந்துவிட்டது; அவசியம் இருக்கிறது. புலிகள் வலுவாக இருந்த காலத்தில் நாம் செய்திருக்க வேண்டிய பணிகள் தான் இவை. ஆனால் அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். உலகில் எந்த ஒரு போராளிக்குழுக்களுக்கும் இல்லாத சிறப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்றால், பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அவரை தாண்டியும் வளர்ந்தது என்பதுதான்; அப்படி ஒரு சிறப்பான கட்டுமானப் பணியை செய்து முடித்த மாவீரன் தான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன். அவரை தாண்டியும் வெற்றிகளை குவிக்க வல்ல மாவீரர்களை உருவாக்கினார். ஆனால் இன்று புலிகள் சிதறிக்கிடக்கிறார்கள்; இல்லை, இல்லை தாயக விடுதலைக்காக வெடித்து சிதறி இருக்கிறார்கள்! மீண்டும் புலிகளே எழுந்து வந்து போராடவேண்டும் என்று விரும்புவது அல்லது வலியுறுத்துவது தவறான கருத்தியல். தமிழீழப் போராட்டம் என்பது இரண்டு கட்டங்களை தாண்டிவிட்டது, அதாவது ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அமைதிப் போராட்டம் அது நிறைவேறாமல் போகவே தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார் எம் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியும் போராடுவார்கள் என்று. அந்தப் பிரகடனத்தை உள்வாங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம் நடந்தது. மீண்டும் ஆயுதப்போராட்டம் என்பது கடினமான ஒன்றாகவே பார்க்கமுடிகிறது. எனவே அடுத்தக்கட்டமான அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை முன்னெடுத்து அரசியல் போராட்டம் செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். தெற்கு சூடானுக்கு ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி விடுதலைப் பெற்று தந்ததைப் போல தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்க்கு உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை களத்தில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. தமிழீழம் என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய விடுதலை கோட்பாடு. இருப்பினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவேண்டிய தலையாய கடமையும் நம் தலையிலே விழுந்திருக்கிறது. அதுதான் இன்றைய அதிமுக்கிய கோரிக்கையாகவும் உள்ளது. திட்டமிட்டு நடைபெறும் இனக்கலப்பை தடுக்கவும் கலாசார சீரழிவை தடுக்கவும் உலக நாடுகளின் கதவை தட்டவேண்டிய கடமை நம்முன் கிடக்கிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்ககூடிய நாம் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஏன் ஆதரித்தோம்? முரண்பாடுகள் இருந்தாலும் உலகப்பார்வைக்கு தமிழீழம் செல்லும் என்ற நம்பிக்கையில் தானே; அதே கொட்ப்பட்டுடன் தான் இன்று பிரித்தானியா தமிழர் பேரவை நடத்தும் மாநாட்டையும் ஆதரிக்கிறோம்; வரவேற்கிறோம்....

எழுச்சித் தமிழர் திருமா சொல்வதைப் போல


"உத்திகளும் செயல்தந்திரங்களும் மாறலாம்;
பாதைகளும் கூட மாறலாம்; ஆனால் ஈழ
விடுதலைக்கான நோக்கமும், இலக்கும்
மாறாது! காலம் தள்ளிப் போகலாம் ;
ஆனால் கடமை மறந்துப் போகாது !
புலிகள் மீண்டும் எழுவார்கள் !
இந்த நம்பிக்கையை வளர்ப்பதும்
தமிழீழ அரசியலை அடைகாப்பதும்
தமிழகத்தின் கடமையாகும் - குறிப்பாக
விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் !
கனவை நிறைவேற்றப் போராடுவோம் !
புலிகளின் கனவை நனவாக்கக் களமாடுவோம் !!


இந்தக் கருத்தியலை விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்லாது தமிழீழத்தை எதிர்நோக்கும் ஒவ்வொருத் தமிழனும் நெஞ்சில் நிறுத்திக் களமாட வேண்டியது கடமையாகிறது.

ஒன்றுப் பட்டு உலக கதவுகளை தட்டுவோம் !!
மாவீரர்களின் ரத்தத்தில் வரையப்பட்ட
தமிழீழத்தை கட்டி எழுப்போவோம் !!


தாயக விடுதலைக்கு தன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு ஆயுதம் ஏந்தாத விடுதலைப் புலியாக, விடுதலை சிறுத்தையாக எம் செம்மாந்த வீரவணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன்...
தமிழர்களின் தாகம் ...தமிழீழ தாயகம்...

-----------------------------
என்றும் அன்புடன்
அங்கனூர் தமிழன்வேலு