வியாழன், 28 நவம்பர், 2013

கடவுள் சாட்சியாக சங்கர் ராமன் கொல்லப்பட்டது உண்மை... ஆனால் தீர்ப்பு?

பொதுவாகவே நம்மவர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒருவரிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் "கடவுள் சாட்சியாக சொல்" என்று சத்தியம் வாங்குவார்கள். அந்த பழக்கம் முக்கியப் பதவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து கொள்பவர்கள் கூட "கடவுள்  ஆணையாக உண்மையாக இருப்பேன்" என்று சத்தியம் செய்வார்கள். பின்னாளில் திராவிட இயக்கங்களின் மூலம் பகுத்தறிவு பிராச்சாரத்தின் பயனாக "உளமாற உறுதியளிக்கிறேன்" என்று பதவியேற்றுக் கொள்ளும் வழக்கம் வந்தது. இந்த "கடவுள் சாட்சியாக" என்பது தான் ஒருவரின் உச்சபட்ச நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் சொல்லாக பரவலாக இருந்து வருகிறது. கடவுளின் மீது சத்தியம் செய்துவிட்டு தவறு செய்பவர்களை கடவுள் நேரடியாக தண்டிப்பார் என்றும், கடவுள் மீது சத்தியம் செய்த ஒருவர் தவறு செய்யமாட்டார் என்றும் தப்பபிராயம் கற்பிக்கப்பட்டுள்ளது. சில கடவுள் அபிமானிகள் கூட சொல்வார்கள் கடவுள் நம்பிக்கை என்பது ஒருவனை நேர்வழி படுத்தும் அவன்  தவறு செய்யும் போது தயக்கம் உண்டாகும் என்பார்கள். 

ஆனால்


கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, பட்டபகலில் கடவுளின் சன்னிதானத்தில், "கடவுள் சாட்சியாக" காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டார். கடவுள் வரதராஜ பெருமாள் சாட்சியாக நடந்த இக்கொலையை தடுக்க கடவுளும் முன்வரவில்லை, கொலை செய்தவருக்கு எவ்வித கடவுள் பயமோ, குற்ற உணர்ச்சியோ, கடவுள் அபிமானிகள் சொல்வதைப் போல தயக்கமோ கூட ஏற்ப்படவில்லை என்பது தனிக்கதை. 

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் பெயர் அடிபடத் தொடங்கியது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரன். அது தீபாவளி நாள். 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்தினும் கைதானார்.9 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக 10 ஆண்டாக நடந்து கொண்டிருந்த வழக்கில் நேற்று (27.11.2013) புதுச்சேரி நீதிமன்றம் "கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் ஜெயேந்திரன், விஜயேந்திரன் உட்பட 23 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி முருகன் தீர்ப்பளித்திருக்கிறார். பரபரப்பான இந்த வழக்கில் அரசு முன்வைத்த சாட்சிகளில் 83 பேர் அரசுத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராமல் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பது தான் வழக்கின் தீர்ப்பையே தீர்மானித்து இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரன் நீதிபதியிடம் பேரம் பேசிய ஆடியோ சிடி வெளியான பிறகுதான் இந்த தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது." 81 பேர் பிறழ் சாட்சியாளர்களாக ஆனதுதான்-ஆக்கப்பட்டதுதான். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் பிறழ் சாட்சியானது கிடையாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எப்படி இதனை அனுமதித்தனர் என்பது மிகவும் முக்கியமானது. புலனாய்வுக்கென்றே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது. 81 பேர் பிறழ் சாட்சியாகும் அளவுக்கு எப்படி கோட்டை விட்டனர்" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் எஸ்.வி.சேகர் 'நீதி நிலைநாட்டப்பட்டது' என்கிறார், சுப்ரமணியசாமி ஜெயலலிதா ஜெயேந்திரரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது மகிழ்ச்சி என்கிறார் சுஸ்மா ஸ்வராஜ்.

எஸ்.வி.சேகருக்கோ, சுப்ரமணிசாமிக்கோ, சுஷ்மா சுவராஜுக்கோ சங்கர் ராமன் கொலையைப் பற்றி கவலையில்லை. ஏழைப் பார்ப்பானாகிய சங்கர் ராமன் கொலைக்கு நீதி வேண்டும் என்பதிலும் அக்கறையில்லை. ஆனால் சங்கராச்சாரியார் விடுதலை ஆனது அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. கொண்டாடுகிறார்கள். இத்தனைக்கும் சங்கர் ராமன் இந்து மத புனிதத்திற்கு எதிராக செயல்பட்டவர் கிடையாது. கடவுள் மறுப்பு கொள்கையை பேசியவர் கிடையாது. இந்து மதத்தின் புனிதத்தை காக்க ஆச்சாரம் பேணும் பார்ப்பன குடியில் பிறந்தவர் தான் அவரும். உள்ளபடியே சங்கர் ராமன் கொலைக்கும் சங்கராச்சாரிக்கும் சம்மந்தம் இல்லை என்றால், சங்கர் ராமனை கொன்றது யார் என்ற கேள்வியை அவர்கள் தான் முதலில் எழுப்பி இருக்க வேண்டும். சங்கர் ராமன் கொலைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு அவர்கள் தான் போராடி இருக்க வேண்டும். அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள். அதனால் நீதி நிலை நாட்டப்படவேண்டும், உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நாமே அந்த கேள்வியை எழுப்புகிறோம்.

கடவுள் சாட்சியாக 
சங்கர் ராமன் கொல்லப்பட்டது 
உண்மை... 

குற்றவாளிகள் என்று 
சொல்லப்பட்ட சங்கராச்சாரிகள்
விடுதலையாகி விட்டார்கள். 

அவர்கள் கொல்லவில்லை 
என்றால், கொன்றவர்கள் 
எவர்கள்? 

நீதிமான்கள் வாய் திறக்க 
மறுக்கிறார்கள் ... 
இப்போதாவது வாய் திறப்பாரா
 வரதராஜ பெருமாள்? 

என்ற கேள்வியை நாமே எழுப்புகிறோம்...


சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில், செய்தி தாளில் ஜெயேந்திரன் பற்றிய செய்தியை படித்துவிட்டு சங்கர் ராமன் கொலை வழக்கைப் பற்றி விவாதத்துக்கு இழுத்துவிட்டேன். அப்போது நண்பர் ஒருவர் சொன்னார். கடவுள் இருப்பதால் தான் இந்த வழக்கே இவ்வளவு நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ ஓத்தி மூடி இருப்பார்கள். இக்கொலையின் நேரடி சாட்சி வரதராஜ பெருமாள். நீதியை அவர் வென்று தருவார்" என்றார. நேற்றிரவு நான் அவருக்கு போன் செய்து தீர்ப்பை பற்றி சொல்லி, வரதராஜ பெருமாள் நீதியை நிலைநாட்டி விட்டாரா? என்றேன். "ஒருவேளை ஜெயேந்திரன் ...."என்று பதில் சொல்ல ஆரம்பித்தார். "டேய்... டேய் திருந்துங்கடா.." என்று போனை துண்டித்துவிட்டேன். அவர் கூற்றுப்படி வரதராஜ பெருமாள் தொடுத்த வழக்கில் ஜெயேந்திரன் வென்றுவிட்டார். வரதராஜ பெருமாள் தோற்றுவிட்டார். தீர்ப்பளித்தவர், பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் அனைவரும் கடவுள் வரதராஜ பெருமாளை விட, அவருக்கு பூசை செய்யும் ஜெயேந்திரனுக்கே சாதகமாக நடந்து கொண்டார்கள். இதிலே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் "இந்நாட்டில் சாமியை விட, சாமியார்களே வலுவானவர்களாக இருக்கிறார்கள்.."     

இந்த வழக்கில் கொலையாளியும் பிராமிணர், கொலை குற்றம் சாட்டப்பட்டவரும் பிராமிணர், தீர்ப்பை கொண்டாடி வரவேற்கும் சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களும் பிராமிணர்கள். இந்த வழக்கின் தீர்ப்பை சாதி தீர்மானிக்கவில்லை, மதம் தீர்மானிக்கவில்லை, வர்க்கம் தீர்மானித்திருக்கிறது. சொந்த சாதிக்காரனாக இருந்தாலும் ஏழை பிராமிணன் சங்கர் ராமனைப் பற்றி சு.சாமி, எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை...

சங்கரராமனுக்காக பேச கடவுள் வரதராஜ பெருமாள் கூட வரவில்லை. ஒருவேளை சங்கரராமன் சங்கராச்சாரியை கொலை செய்திருந்தால் வரதராஜ பெருமாள் முந்திக் கொண்டு வந்து சாட்சி சொல்லி இருப்பார், நீதி விரைவில் கிடைத்திருக்கும். சங்கரராமனுக்கு தூக்கு தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைத்திருக்கும். சு.சாமியும், எஸ்.வி.சேகரும் சங்கரராமனை தூக்கில் போட வலியுறுத்தி வாதாடி இருப்பார்கள்...

எப்படி என்று கேட்கிறீர்களா?
அதான் கடவுள் எல்லாருக்கும் போதுவானவரே, 
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே...

சங்கரராமனை வரதராஜ பெருமாள் மட்டும் கைவிடவில்லை... நீதிமன்றமும் கைவிட்டு விட்டது...

தீர்ப்பு வெளியான மகிழ்ச்சியில் ஜெயேந்திரன் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, திருப்பதிக்கு சென்று கடவுள் பெருமாளை சந்திக்க இருக்காராம்... பொய் சாட்சி சொன்னதுக்கு கூலி கொடுக்கணும் ல.... 

தீர்ப்புக்குப் பின் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர ராமனின் மகன் ஆனந்த சர்மா "இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. எங்களால் நம்பமுடியவில்லை. என்னுடைய தந்தையார் தானே வெட்டிக் கொண்டு சாகவில்லை. எங்கள் தந்தையை யார் வெட்டி கொலை செய்தனர் என்பதை அறிய விரும்புகிறோம்" என்று கூறி இருக்கிறார். அரசும் நீதிமன்றமும் என்ன செய்யப் போகிறது? மீண்டும் வழக்கை விசாரிக்கப் போகிறதா? இல்லை வழக்கை ஊத்தி மூடப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

- தமிழன் வேலு  

புதன், 27 நவம்பர், 2013

தீர்ப்புக்கு முன் உத்தரவு !

இன்று
அவர்களை
விடுதலை செய்கிறேன்
என்று தீர்ப்பளித்தார் !

ஆனால்

நேற்றிரவே
சங்கர ராமனுக்கு
உத்தரவிட்டு விட்டார் !

அந்த உத்தரவு
இப்படியும் இருக்கலாம்

"சங்கர ராமா ...
அவர்களை
விடுதலை
செய்யப் போகிறேன்

மீண்டும் எழு
கத்தியை எடு
உன் தலையை நீயே
பிளந்து கொள் !"

- தமிழன் வேலு

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஏற்காடு - எச்சரிக்கை !

மலைப்பகுதியான ஏற்காடு தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தால் அனலாய் தகிக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோடு, தி.மு.க. நேருக்கு நேர் மோதுகிறது. 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுப்படி ஏற்காடு அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி தான். ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க.வின் வேட்பாளராக சரோஜாவும், தி.மு.க.வின் வேட்பாளராக மாறனும் களத்தில் நிற்கிறார்கள். 

ஏற்காட்டில் தி.மு.க. வெற்றி பெற்றால் கூட அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. அது போலவே மீண்டும் அ.தி.மு.க. வே வென்றாலும் கூட அ.தி.மு.க. வுக்கு கூடுதல் பலம் கிடைத்துவிடப் போவதில்லை. தன்னுடைய பழைய உறுப்பினர் பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதுபோலவே தி.மு.க. வென்றாலும் தி.மு.க.வுக்கு கூடுதலாக ஒரு உறுப்பினர் கிடைப்பதை தாண்டி வேறெந்த பயனும் கிடையாது. ஒருவேளை தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. க்கள் ஆறுபேரையும் விஜயகாந்த் கட்சியை விட்டு நீக்கினால், அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 ஆக குறையும். அந்த சூழ்நிலையில் ஏற்காட்டில் தி.மு.க. வென்றால் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 லிருந்து 24 ஆக உயரும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விஜயகாந்த் அதிருப்தி எம்.எல்.எ.க்கள் ஆறுபேரையும் நீக்குவாரா? என்பது கேள்விக்குறி. 

அப்படி விஜயகாந்த் அதிருப்தி உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்காத பட்சத்தில் தி.மு.க.வுக்கு இந்த வெற்றியால் கூடுதல் உறுப்பினர் கிடைப்பதை தவிர வேறெந்த பயனும் இல்லை. கூடுதலாக உறுப்பினர் கிடைத்தாலும் ஏற்கனவே இருக்கும் 23 உறுப்பினர்களோடு 24வது உறுப்பினராக அவரும் அவைக்கு குந்தகம் விளைவித்தார் என்று அவையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பது ஒருபுறமிருக்கட்டும்... 

நிலவரம் இப்படியிருக்க, ஆளும் அ.தி.மு.க. வுக்கு நேரடியாக எவ்வித கூடுதல் லாபமும் இல்லாத சூழலில் ஏற்காட்டில் அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், என்று என்று படை பரிவாரங்களோடு மல்லுகட்டுகிறது.போதாக்குறைக்கு ஜெயலலிதா வரும் 28ஆம் தேதி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஏன்? வெற்றி பெற்றால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. 150 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

இருந்தாலும் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வி நீள்கிறது ...

உண்மையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் விரும்பும் ஆட்சியை அவர்கள் நடத்தி இருந்தால் ஏற்காட்டில் படை பரிவாரங்களோடு மல்லுகட்ட வேண்டிய அவசியமே கிடையாது. ஏற்காடு இடைதேர்தல் வெற்றி சான்றிதழ் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகாலம் நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி இருக்கிறோம். அதற்கு சாட்சி இந்த ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, ஏற்காடு மக்களின் அமோக ஆதரவு" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே அவர்களுக்கு இந்த வெற்றி அவசியமாகிறது. மேலும் அவர்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை தந்திருந்தால் பறக்கும் குதிரையின் இறக்கைக்கும், மூலிகை இலைகளுக்கும் கூட அவசியம் வந்திருக்காது என்பது தனிக்கதை... 

மேலும் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஏற்காட்டில் மீண்டும் அ. தி.மு.க.வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளின் பேரம் பேசும் ஆற்றலை குறைக்க முடியும் என்பதும் அவர்களின் வியூகமாக இருக்கலாம்...

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றியை காட்டி, வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்க முடியும் என்பதும் அவர்களின் நோக்கமாக இருக்கலாம். "இதோ பாருங்கள் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என்று ஏற்காடு மக்களே சொல்லிவிட்டார்கள்" என்று வெற்றி சான்றிதழை காட்டுவார்கள்..! எச்சரிக்கை..!

- தமிழன் வேலு

26.11.2013 அன்று Fesbook யில் எழுதியது

வெள்ளி, 22 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 2


"அரசியலில் நேர்மை ! பொதுவாழ்வில் தூய்மை ! லட்சியத்தில் உறுதி !" என்ற முழக்கங்களை கட்சியின் அதிகாரப்பூர்வ முழக்கமாகவே வைகோ அறிவித்திருக்கிறார். அதுபோக வைகோ பற்றி பொதுவாகவே நடுநிலை பேசுபவர்கள் மத்தியில் அவர் நேர்மையானவர், சிறந்த தலைவர், ஊழல் கரை படியாதவர் என்ற பொதுக் கருத்து ஒன்றும் இருக்கிறது. ஆகவே தான் அவரது நேர்மை, தூய்மை, உறுதிகளை நாம் உரசிப் பார்த்ததில் அனைத்துமுமே போலி கோஷங்களாகவே அம்பலப் பட்டு நிற்கின்றன. 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஐந்து உயிர்களை காவு வாங்கி கொண்டுதான் உதயமானது என்பது வரலாறு. தி.மு.க-வில் இருந்து வை.கோபால்சாமி என்கிற வைகோ மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தி.மு.கழகக் உடன்பிறப்புகள் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐந்து பேரும் தீக்குளித்து மாண்டார்கள். அவர்களின் வெந்த உடல்களை பார்த்த வைகோ இனி 'தி.மு.க.வோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை' என்று கர்ஜித்தார், ஆனால் அதே வைகோ தான் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தம் உறவை புதிப்பித்துக் கொண்டார். அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொடா வழக்கில் சிறைபடுத்தபட்ட வைகோவை கலைஞர் சென்று சந்தித்தார். இதற்காகவே காத்திருந்தவர் போல, சிறையில் இருந்து வெளியேறி 28.09.2003 அன்று ஆனந்த விகடனில் "என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரே மனிதர் கலைஞர் தான். அவரால் தான் வார்க்கப்பட்டேன், வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையில் இருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர், அவர் வந்து என்னைப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்து போனது, அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கவே மாட்டேன். காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பக்குவம் இது" என்று மிகவும் உணர்ச்சி பொங்க பேட்டி அளித்திருந்தார். அன்றிலிருந்து இவருக்காக தீக்குளித்து இறந்து போன அந்த ஐந்து பேரின் ஆன்மா இன்றும் கேவிக் கொண்டே இருக்கிறது. அந்த ஐந்து பேரின் மரணம் சொல்லும் செய்தி அரசியல்வாதிகள் நேர்மையானவர்கள் கிடையாது; இனி எந்த அரசியல்வாதிக்காகவும், எந்த தொண்டனும் எந்த தியாகத்தையும் செய்யக்கூடாது என்பதே. 

யாருடையை செயல்பாடுகளை எதிர்த்து யாருக்காக ஐந்து பேரும் உயிர் நீத்தார்களோ, அவர்கள் இருவரும் மீண்டும் ஒட்டிக் கொண்டார்கள். ஆனால் இறந்துப்போன ஐந்து பேரின் குடும்பத்தின் நிலை என்னவானது? இவையெல்லாம் வைகோவின் நேர்மையை பறைசாற்றுகிறதா? 

வைகோவின் நேர்மை கோஷம் போலியானது என்பதற்கு இன்னொரு தகவல் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலே கிடைத்தது. 05.02.1989 அன்று கலைஞருக்கு வைகோ எழுதிய கடிதத்தில் "13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல்" என்று குறிப்பிட்டிருக்கும் வைகோ அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில்  "1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கருணாநிதியின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது வைகோ கருணாநிதிக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கி மேடையில் கர்ஜித்தார் என்பதை தமிழகம் அறியும். தேர்தல் அரசியலுக்காக முதல் நாள் ஒன்று பேசி, மறுநாளே அதற்கு முரணான நடப்பது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால் வைகோ அதற்கும் ஒருபடி மேல்சென்று தன்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்தின் மீதே சேற்றை வாரி இறைக்கிறார். மேலும் அவரது இணையதளத்தில் "சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார். கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கருணாநிதி கைப்பற்றிக்கொண்ட போதும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய போதும், தமது குடும்பத்திற்காக கலைஞர் சொத்துக்களை குவித்துக் கொண்டிருந்த போதும் வைகோ எங்கிருந்தார்? யாரோடு உறவு வைத்திருந்தார்? யாருக்காக மேடைகளில் கர்ஜித்தார்? என்ற கேள்விகளை நீங்களே எழுப்பிக் கொள்ளுங்கள் வைகோவின் நேர்மை புலப்படும். 

அவரே 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது என்கிறார். ஊழல்கறை படிந்த (?) கருணாநிதியை விழுந்து, விழுந்து 1993 வரை ஆதரித்து கொண்டிருந்த வைகோ ஊழல் கறைபடியாதவர் என்ற கூற்றுக்கு பொருத்தமானவரா? 90களுக்கு முந்தையை தி.மு.க.வின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் வைகோவுக்கும் பங்குண்டு என்பதே உண்மை.

- தொடரும்...        

புதன், 20 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 1


அண்ணன் ஒருவர் இப்படி எழுதி இருந்தார்...

"பாராளுமன்ற தேர்தலில் மதிமுக தனித்து போட்டி - வைகோ 

ஒரு நேர்மையான தமிழின போராளியை மதவாத கட்சியான பாஜக வோடு இணைத்து அவரின் போராட்ட குணத்தை கூர் மழுங்க செய்யும் சதிவலையை விரித்த தமிழருவிமணியணின் கள்ள நாடகத்தை முறியடித்தார் வைகோ"
--------------

முற்றிலும் முரணான கருத்து இது. நேர்மை என்ற பேச்சுக்கெல்லாம் வைகோவின் தேர்தல் அரசியலில் இடமே கிடையாது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல் அரசியலில் வைகோவின் நிலைப்பாடுகளே அதற்கு சாட்சி. தனித்துப் போட்டி என்று இன்றைக்கு நீட்டி முழங்குகிறார் வைகோ. ஆனால் இதே தமிழருவி மணியன் வைகோவை மேடையில் வைத்துக் கொண்டுதான் பா.ஜ.க.வோடு மதிமுக - தே.மு.தி.க. கூட்டணி என்ற திட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்காக பக்கம் பக்கமாக வார ஏடுகளில் கட்டுரை வரைந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் வாதாடினார். கோயம்பேடு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் பேரம் பேசினார். அப்போதெல்லாம் உள்ளூர வைகோ அதை ரசித்துக் கொண்டிருந்தார். உண்மையில் வைகோவின் திட்டம் தான் அது. வைகோ தமிழர்களை கோமாளிகள் என்று நினைத்திருப்பார் போலும், காங்கிரஸ் எதிர்ப்பலையில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் தமிழர்கள் துடுப்பு போடுவார்கள் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. தனித்து தான் போட்டி என்று இன்றைக்கு சொன்னதை தமிழருவி மணியன் தன் திட்டத்தை வெளிப்படுத்திய அன்றே சொல்லி இருந்தால் இத்தனை வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்காது. இத்தனை விமர்சனங்கள் எழுந்திருக்காது. விமர்சனங்கள் கடுமையாக எழவே மணியனை வசதியாக மாட்டிவிட்டுவிட்டு வைகோ தப்பிக்கப் பார்க்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்சமயம் தன் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறார். தன்மீதான விமர்சனங்களுக்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முற்றுப்புள்ளி அருகில் கமா போட்டு மீண்டும் அவரே துவங்கி வைப்பார். அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமே கிடையாது. பி.ஜே.பியையும், வாஜ்பாயையும் புகழ்ந்து பேசி, பி.ஜே.புயுடன் கூட்டணிக்கான சிக்னலை காட்டியவரே வைகோ தான் என்பதை நினைவுப் படுத்துகிறேன்...

- தொடரும்....

ஞாயிறு, 10 நவம்பர், 2013

முற்றத்தை யாருடைய கண்களால் பார்ப்பது? உதயகுமாருக்கு ஒரு கடிதம் !

அரசு இயந்திரங்களை கண்டு அஞ்சாமல், நெஞ்சுரத்தோடு அணுஉலை எதிர்ப்பு களத்தில் நிற்கும் தோழர் சுப.உதயகுமார் அவர்களே... வணக்கம். நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அப்படியே இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். 

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டாகாரர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும், சிறுவர்கள், முதியவர்கள் என்றுகூட பாராமல் கடும் தாக்குதலை மத்திய, மாநில கூட்டு சேர்ந்து தொடுத்தன. அன்றைக்கு அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து நெஞ்சம் வெடித்து "மற்றுமோர் முள்ளிவாய்க்கால்" கூடன்குளமும், கொலவெறியும் என்று எழுதினேன். மத்திய மாநில அரசுகள் கண்கொத்திப் பாம்பாக தங்களை கண்காணித்துக் கொண்டிருக்கையில், எங்கோ ஒரு குக்கிராமத்தில், ஓலைக்குடிசையில், எழுதப்படிக்க தெரியாத தமிழனுக்கும், தமிழச்சிக்கும் பிறந்த என்னை தாங்கள் அறிய வாய்ப்பில்லை. நீங்கள் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு நான் பெரிதாக எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வப்போது எம் மக்களின் குரல்வளைகள் நெரிக்கப்படும் போது என்னால் முடிந்தமட்டில், எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எதிர்த்து பேசி இருக்கிறேன் அவ்வளவே. அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் என்னால் முடிந்தமட்டில் சிறிதளவேனும் கருத்து பரப்பலை செய்திருக்கிறேன், அந்த மக்களின் நியாயத்தை, உரிமைகளை, உங்கள் ஒருங்கிணைப்பின் அவசியத்தை என் சுற்றத்தில், என் நட்பு வட்டங்களில் எடுத்து கூறி இருக்கிறேன் என்ற நம்பிக்கையிலே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

நவம்பர் 8 ஆம் தேதி முகநூல் பக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் குறித்து பதிவை வெளியிட்டு இருந்தீர்கள். அது கொஞ்சம் நீண்ட பதிவுதான், அதில் போஸ்னியா-ஹெர்செகோவினா, ருவாண்டா போன்ற இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளை நினைவு கூறி, வியட்நாம் வெடெரன்ஸ் மெமோரியல், அமெரிக்கத் தலைநகராம் வாஷிங்டனில் உள்ள யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் போன்ற நினைவு சின்னங்களை மேற்கோள் காட்டி அப்படியே சிங்களப் பேரினவாத அரசோடு உலகநாடுகள் பலவும் கூட்டு சேர்ந்து தமிழீழத்தில் நடத்திய இனப்படுகொலையை பற்றி எழுதி இருந்தீர்கள். தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை பாரெங்கும் எடுத்துரைக்க தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை பற்றி பேசி, "முற்றம் அற்றம் காண வேண்டும் – தமிழ்ச் சுற்றம் ஏற்றம் பெற வேண்டும்!" என்று அழைப்பு விடுத்திருந்தீர்கள். அருமையான பதிவு அது. 

ஆனால் நீங்கள் சுட்டிகாட்டிய உலக வரலாறுகளும், நினைவு சின்னங்களும் எதையோ மறைக்கின்றன, முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் நடந்தேறிய அருவருப்பான அரசியல் கோமாளித்தனங்களை மூடி மறைக்கின்றன என்ற ஐயத்தில் தான் அதே பதிவில் பின்னூட்டம் வழியாக "அண்ணா, உங்கள் மீது வைத்திருக்கும் மிகுந்த மரியாதையினால் உண்டான உரிமையில் கேட்கிறேன்.. 'நீங்கள் அடையாளம் காட்டிய ஆபத்தான ஆறுகட்சிகளில் பி.ஜே.பியும் ஒன்று. ஆபத்தானவர்களோடு மேடை ஏறுவது உங்களுக்கு எற்புடையது தானா?" என்று தங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன். அதற்கு தாங்கள் "மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான். அழைக்கப்பட வேண்டிய சில தலைவர்களை, இயக்கங்களை அழைக்கத் தவறியதும் தவறுதான். சில தன்னலவாதமிக்க ஆற்றலில்லா ஆளுமைகளை அணைத்துக் கொள்வதும் தவறுதான். தவறுகளை உரிமையுடன் சுட்டிக்காட்டுவோம், அன்புடன் தட்டிக்கேட்போம். நிகழ்வுக்குப் போய் நமது கருத்துக்களை, நிலைப்பாட்டை நாகரீகமாகப் பதிவு செய்வோம். நிகழ்வு வெற்றிபெறட்டும்." என்று எனக்கு பதில் அளித்தீர்கள். அந்த பதில் என்னை சமாதானப் படுத்தவில்லை, திருப்தி அளிக்கவில்லை. உங்கள் மீது நான் கொண்டிருந்த மதிப்பை ஓர் அங்குலம் குறைத்துவிட்டது. ஓர் அங்குலம் தானே குறைந்துவிட்டது, மீதம் எத்தைனையோ அங்குலம் மரியாதை இருக்கிறதே, அண்ணனிடம் கேள்வி கேட்க உரிமையும் இருக்கிறதே என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உலக வல்லரசுகளோடு கரம் கோர்த்து கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட  நம்  ஈழ சொந்தங்களின் வலியை, தமிழீழத்தின் அவசியத்தை, நம் சொந்தங்களின் கோரிக்கையின் அவசியத்தை பாரெங்கும் எடுத்துரைக்க ஒரு நினைவு சின்னம் அமைப்பதில், அதுவும் நம் தமிழகத்தில் உருவாவதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்தில்லை. உள்ளம் இனிக்க, இனிக்க சொல்வேன் நிச்சயமாக வரவேற்க கூடியதே. ஆனால் அந்த நினைவு சின்னம் யாரால் கட்டப்பட வேண்டியது? யாரோடு கூட்டு சேர்ந்து கட்டப்பட வேண்டியது என்பதில் தான் முரண்பட்டு நிற்கிறேன். உலகில் பல்வேறு நாடுகளில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு எது காரணம்? அந்த நாட்டின் ஏகாதியபத்திய சிந்தனையே. முதலாளித்தவ மனப்பான்மையே. அடிமை நிலையில் இருக்கும் மக்கள் வெகுண்டெழுந்து தங்களுடைய அடிப்படை உரிமைகளை கோரும் போது தான் அங்கே அடக்குமுறையும், வல்லாதிக்கமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழீழத்தில் நடந்ததும் அதுவே தான். கூடங்குளத்தில் நடந்த அரச பயங்கரவாதத்திற்கு காரணமும் அதே தான். கூடங்குளம் அணு உலை திறக்கட்டுமே என்று தாங்களும், இடிந்தகரை மக்களும் அமைதி காத்திருந்தால் இந்த அரசுகளுக்கு  நீங்கள் தங்கமான பிள்ளைகளாக இருந்திருப்பீர்கள். கூடங்குளம் அணு உலையை நிறுவ இந்த அரசுகள் தீவிர முனைப்பு காட்டுவதற்கு அவர்கள் சொல்வதைப் போல நம் மக்களின் நலன் காரணமல்ல, நம் நாட்டில் இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்கவேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமல்ல,ரஷ்ய  முதலாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூட அமெரிக்க முதலாளிகளின் நலனையே கருத்தில் கொண்டது. ஆனால்  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கும் இந்திய / மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இடிந்தகரை மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். சில பார்ப்பனிய ஊடகங்களும், இந்திய அரசும் இதை இடிந்தகரை மக்களின் பிரச்சனை என்றளவிலே பரப்புரை செய்கிறார்கள். ஆனால் நாமோ இது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சனை என்கிறோம். கம்யூனிஸ்டுகளின் காதுகளுக்கு மட்டும் நம் பரப்புரை போய் சேரவில்லை போலிருக்கு. அதே போல தமிழீழ விவகாரத்தில் கூட மக்களுக்கு எதிராகவே நிற்கிறார்கள். ஈழம் என்ற சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி இருக்கும் சூழலில் தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பதை நீங்களே தெளிவுபடுத்துங்கள். நன்கு வளர்ந்து நிற்கும் மரம் கூட சொல்லும் அது வளர்ந்த மண் வளத்தையும், அதை பராமரித்தவரின் பெருமையையும். தமிழீழத்தின் வலிகளை பாரெங்கும் எடுத்து சொல்ல அமைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தமிழ்தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்கள். அதன் விளைவாக வரும் காலங்களில் அந்த முற்றத்தை பார்வையிடுபவர்களின் கண்களில் ஈழத்துயரமோ, தமிழினத்தின் சிறப்போ தெரியபோவத்தில்லை. மன்னார்குடி மன்னர் நடராசனின் கொடைவள்ளல் தன்மையும், பெருமையுமே எஞ்சி நிற்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஜெயலலிதா முதல் முறை தடா ஆட்சி நடத்தினார், இரண்டாம் முறை பொடா ஆட்சி நடத்தினார், மூன்றாம் முறை தடாலடி ஆட்சி நடத்துகிறார் என்று மக்கள் பாவலர் இன்குலாப் எழுதினார். அதுபோலவே அவர் இரண்டாம் முறை ஆட்சி செய்த பொழுது"இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்"என்ற கொடுங்கோன்மை ஆட்சி நடத்தினார். தமிழீழ உணர்வாளர்களை பொடா எனும் கொடிய சட்டத்தின் மூலம் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம் அது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு பொடாவை ஆதரிக்கிறேன் என்று வைகோ சொன்னாலும் பொடாவின் வெளிப் பாய்ச்சலுக்கு வைகோவும் பலியானார். புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார். மேலும் கோவை ராமகிருட்டிணன்,  ஆறுச்சாமி போன்றவர்களை  இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது. பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ( தகவல்கள் : பல்வேறு இணையதளங்கள்)

 இப்படி தமிழினத்திற்கும், தமிழீழத்திகும் எதிர் நிலைப்பாட்டில் இருந்த ஜெயலலிதாவோடு நட்போடு இருந்த நெடுமாறன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, பொடா சட்டத்தை ஆதரித்து, அதிலே ஜெயலலிதா ஆட்சியிலே கைதாகி மீண்டும் அவரோடு அரசியல் உறவை ஏற்ப்படுத்திக் கொண்ட வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்தான் நல்ல தலைவர் என்று நீங்கள் சான்று அளிக்கிறீர்கள். ஆனால் பொடாகாலத்தில் கூட தமிழீழ கருத்துக்களை துணிந்து பரப்புரை செய்த சுப.வீ., திருமாவளவன் போன்றவர்களை நெடுமாறன் துரோகி என்கிறார். அவரிடம் எதிர்த்து ஒருவார்த்தை உங்களால் பேச முடியவில்லை. இங்கே நெடுமாறனின் கவனத்திற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விழைகிறேன். 10.03.2003 அன்று பாண்டிச்சேரியிலே ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மார்ச் 10 என்பது நெடுமாறனின் பிறந்ததினம். அப்போது அவர் பொடா கைதியாக சிறையில் இருக்கிறார். பாண்டிச்சேரியில் நடந்த நிகழ்வு நெடுமாறனின் பிறந்தநாளை பொடா எதிர்ப்பு நாளாக கொண்டாடினார்கள். அந்நிகழ்விற்கு தோழர் அழகிரி தலைமை தாங்கினார். பேராசியர் கல்யாணி, புலவர் பச்சையப்பன், திருச்சி சவுந்திரராசன், திருமாவளவன், பாவலர் இன்குலாப் போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது. (தகவல் : பாவலர் இன்குலாப் அவர்களின் எதிர்ச்சொல் நூல்) நெடுமாறன்,வைகோ போன்றவர்களின் கைதை கண்டித்து பேசியமைக்காகவே சுப.வீ கைது செய்யப்பட்டார். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் திருமாவளவன். இன்று அவர்களெல்லாம் துரோகியாகிப் போனார்களோ? என்று நெடுமாறன் அவர்களிடம் வாய்ப்பிருந்தால் நீங்களே கேளுங்கள்...

திருமாவளவன், சுப.வீ. போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், அதற்கு ஒரு காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். அது போகட்டும் பரவாயில்லை. தமிழகத்திலே தமிழினத்தின் மீட்சிக்காகவே தொடர்ந்து களமாடி, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது ஏன்? யார், யார் புகைப்படங்கோ வைத்திருக்கிறார்கள், தந்தை பெரியார் தமிழினத்திற்குஅப்படி என்ன துரோகத்தை செய்து விட்டார்? பகுத்தறிவு கருத்துக்களை தமிழ்மண்ணில் விதைத்தது தவறா? சுயமரியாதை சுடரை தமிழகமெங்கும் ஒளிர விட்டது தவறா? மூடநம்பிக்கை களுக்கு எதிராக போராடியது தவறா? உச்சிக்குடுமிகளின் ஆதிக்கம் அடங்கவேண்டும், சாதியும், சாதியை காப்பாற்றும் இந்துமதமும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டும் என்று போராடியது துரோகமா? பெரியாரின் புகைப்படம் தவிர்க்கப்பட்டதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் (1) இந்துத்துவத்திற்கு எதிராக அவர் ஆடிய கோர தாண்டவமாக இருக்கலாம். (2) தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தம் வாழ்நாள் முழுவதும் மூத்திரப் பையுடன் சூத்திர வேதங்களை கண்டித்ததிற்காக இருக்கலாம். (3) மோடி மஸ்தான் களை மகிழ்விப்பதற்காக இருக்கலாம்.

அண்ணன் வைகோவிடம் என் சார்பாக நீங்கள் இந்த கேள்வியை கேளுங்கள் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படம் முற்றத்தில் தவிர்க்கப்பட்டது சரியா? என்று. அண்ணே, நான் உங்களிடம் கேட்கிறேன் தந்தை பெரியாரை தவிர்த்து விட்டு தமிழகத்தில் எந்த களத்தில் நீங்கள் நிற்பீர்கள்? பெரியாரை புறக்கணித்துவிட்டு தமிழினத்தின் வரலாற்றை எழுதிவிட முடியுமா?

அண்ணே... இறுதியாக 

மனிதன் என்பதால் அவரும் தவறுகள் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை, இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான் என்று தாங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். அவர் மட்டும் தான் மனிதரா? மனிதர் என்ற பட்டியலில் கலைஞரும், ஜெயலலிதாவும், சோனியாவும் கூடத்தான் அடங்குவார்கள். அவர்கள் செய்யும் தவறுகளையும் நாம் மன்னித்துக் கொள்ளலாமா? என்ற ஐயம் உண்டாகிறது. ஒருவேளை நெடுமாறனுக்கு காங்கிரசின் மீதான பழைய காதல் நினைவுக்கு வந்து காங்கிரசில் இருந்து யாரையாவது அழைத்திருந்தால் கூட அப்போதும் நீங்கள் இதே பதிலை தான் சொல்வீர்களா? அப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. ஏனெனில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்கு பி.ஜே.பி. உதவி செய்தது என்று இன்றைக்கு வைகோவும், நெடுமாறனும் சொல்கிறார்கள். ஆனால் இதே வைகோவும், நெடுமாறனும் தான் 2004 ஆம் ஆண்டு பி.ஜே.பியை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஒட்டுக் கேட்டார்கள் என்பதும் வரலாறு. மேலும் 'இந்துத்வா சகதிகளை, குஜராத் இனப்படுகொலையாளர்களை அந்த நிகழ்வுக்கு அழைத்தது தவறுதான்' என்கிறீர்கள். இதை உங்களின் மனசிறையிலே பூட்டி வைத்திருப்பதால் என்ன பயன்? உண்மையில் காங்கிரஸ் தலைவர்களைப் போல அல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் கூட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களோடு பழகியதில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தலைமைக்கு அஞ்சி தங்கள் மனசாட்சியைப் பூட்டிவைத்து விட்டு வெளி வேஷம் போடுகிறார்கள். அப்படித்தான் நீங்கள் சொல்வதும். ஒரு கருத்தை வெளிப்படையாக எடுத்து வைக்கும் போது தான் அது வலுப்பெறுகிறது, இல்லையென்றால் அது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்காது. பொதுவாகவே மனிதர்கள் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும் சிறு தவறை கூட பெரிது படுத்தி பேசுவார்கள், தமக்கு வேண்டியவர்கள் செய்யும் பெரிய தவறை அலட்சியப்படுத்தி சிறுமை படுத்துவார்கள். அப்படி நீங்களும் சாதாரண மனிதர்களைப் போல பேசுவது வேதனை அளிக்கிறது. காரணம் நாங்கள் உங்களை சாதாரண மனிதராக பார்க்கவில்லை. அசுர பலம் கொண்ட அரசுகளை எதிர்த்து நிற்கும் போராளியாகத்தான் பார்க்கிறோம். உங்களின் நேர்மைத்திறன் மிகவும் வேதனை அளிக்கிறது. குஜராத் இனப்படுகொலையாளர்களை நாம் எதிர்ப்பது வெறுமனே மத அளவுகோல் மட்டும் காரணமல்ல, உழைக்கும் மக்களை சுரண்டி முதலாளிகளை மகிழ்விக்கிறார் மோடி என்பதும்  முக்கிய காரணம்.

ஜெயலிதாவோடு இருந்தாலும் நெடுமாறன் தமிழினத்திற்காக பேசுவார், வைகோ வாதாடுவார் என்று நினைக்கிற உங்களால் கலைஞரோடு இருந்தாலும் திருமாவளவன் தமிழினத்திற்காக போராடுவார் என்று ஏன் நினைக்கத் தோன்றவில்லை? இந்த இடத்திலே ஒரே ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் கூடங்குளம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடும் வெயில் என்றும் பாராமல் கோயம்பேட்டில் நடுரோட்டில் அமர்ந்து கைதான ஒரே தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும்  திருமாவளவன்  என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வைகோ நல்ல தலைவர் என்று எழுதுகிற உங்களால் திருமாவளவனை புறக்கணித்தது தவறு, இந்துத்துவா சக்திகளை வரவேற்றது தவறு என்று ஏன் எழுத முடியவில்லை? மேலும் இந்துத்துவா சக்திகளை அழைத்ததை தோழர் கொளத்தூர் மணி, தோழர் ஜிவாஹிருல்லா போன்றவர்கள் கண்டித்திருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு நினைவு கூறுகிறேன். 

முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைத்தமையால் தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுத நேர்ந்தது. தங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கமெல்லாம் எமக்கில்லை, ஒருவேளை நான் குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெற்றுக் கொள்ளலாமே என்ற நேர்மறை சிந்தனை தான் எமக்கு இக்கடிதத்தை எழுத தூண்டியது. முற்றத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைக்கிறீர்கள் அனால் முற்றத்து புகைப்படங்களை காணும் போதெல்லாம் நெடுமாறனின் சந்தர்ப்பவாதமும், நடராசனின் முதலாளித்தவமும் தான் என் கண்களுக்கு தெரிகிறது. வந்தால் முற்றத்தை யாருடைய கண்களால் பார்ப்பது?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தம்பி...
தமிழன்வேலு

வியாழன், 7 நவம்பர், 2013

கடைசி மனிதனின் கோபங்கள் - 3 ( மங்கள்யான் பெருமையா? )

ஏய்... வள்ளி, 'வாயேண்டி போயிட்டு வந்திடுவோம்' அவசரப்படுத்தினாள் சரோசா. செத்த இருக்கா சுமதியும் வாரேன் ன்னு சொன்னா, சேர்ந்தே போயிட்டு வந்திடுவோம் என பதில் சொல்லிக்கொண்டே வீட்டை பெருக்கி கொண்டிருந்தாள் வள்ளி. சுமதி புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்தவ, அசலூர்க்காரி. பாத்தாவது வரை படித்திருக்கிறாள். சரோசா இந்த ஊருக்கு கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்து 25 வருஷம் ஆவுது. ரெண்டு பொம்பள புள்ளைங்க மட்டும்தான். ரெண்டாவது மவள போன வருஷம் கட்டிகொடுத்தாங்க. வள்ளிக்கு  ஒண்ணாவது படிக்கிற பொம்பள புள்ளையும், ரெண்டு வயசு  பையன் ஒருத்தனும். சரோசாவும், வள்ளியும் கூட்டாளிக. அவங்களோட புதுக்கூட்டாளி தான் சுமதி. சந்தைக்குப் போறது, மோட்டாருக்கு துணி துவைக்க போறது, வீடு மொழுக, விடியகாலையில வாசல்ல தெளிக்க சாணி எடுகக போறது, குளிக்க போறது, கக்கூஸ் போறது வரைக்கும் மூவரும் கூட்டுதான். இப்பகூட கக்கூஸ் போகத்தான் சரோசா வள்ளியை அவசரப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். "கக்கூஸ் போறதுக்கு கூட கூட்டாதான் போவிகளோ?" ன்னு நகர்ப்புறங்களில், எப்பவும் ஒன்னாவே திரியுற பசங்ககிட்ட பெருசுகள் கேட்பதுண்டு. நகர்ப்புறங்களில் கூட்டு சேர்ந்து கக்கூஸ் போக வேண்டிய  அவசியமில்ல, ஏன்னா அங்க வீட்டுக்கு வீடு கழிவறை இருக்கு. கழிவறையில ஒரு நேரத்துக்கு ஒருத்தர் தான் போகமுடியும். ஆனா கிராமப்புறங்களில் கழிவறை இல்ல, விடியகாலை நேரத்திலும், பகல் நேரத்திலும் காட்டுப்பக்கம் மறைவான இடமும், இரவு நேரங்களில் ரோட்டோரமும் தான் அங்க இருக்க மக்களுக்கு கழிவறை. ஒரே நேரத்துல அம்பது, அறுவது பேர்கூட போகமுடியும். மானத்தை அடகுவச்சி தான் கக்கூஸ் கூட போகமுடியும், எங்கிருந்து எவன்  வந்து அம்மண குண்டியா உக்கார்ந்திருக்கிற பொம்பளைகளை பார்த்திருவானோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குளிப்பது கூட அப்படி ஒரு போராட்டம் தான்.

"பொழுதே போ..போ.., இரவே வா.. வா.." என்று அன்றைய நாளை வழிநடத்திக் கொண்டிருக்கிறது நிலவு. கிராமத்தை முற்றாக கவ்வி கொண்டது இருள். தெரு முக்கில் சோலார் லைட்டு எரிந்து கொண்டிருக்கிறது. சில வீடுகளில் சொந்த சர்வீஸ் கரண்ட் வாங்கி இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகள் அரசாங்க இலவச மின்வசதி தான். சொந்த சர்வீஸ் எடுத்தவங்க வீட்டில் பளீரென்ற வெளிச்சமும், இலவச மின்சாரம் உள்ள வீட்டில் மங்கலான குண்டு பல்பும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்றிரண்டு வீடுகள்   காரை வீடுகளாகவும், பெரும்பாலான வீடுகள் கருப்பஞ்சருகு வேய்ந்து, களிமண் சுவரால் ஆன கூரை வீடுகளாகவும் தான். காரை வீடு உள்ளவங்க வீட்டில கூட கழிவறை கிடையாது. 

புருஷனுக்கு சோறு குடுத்திட்டு பளீரென்ற சிரிப்போடு சுமதி வெளியே வருகிறாள். வள்ளியும் வீட்டு வேலைகளை முடிச்சிட்டா, ரெண்டுபேரும் சரோசா வீட்டுக்கு போய் "வாக்கா, போயிட்டு வந்திடுவோம்" என்க மூவருமாக கிளம்பிட்டாங்க. வறண்ட பட்டிக்காடு என்பதால் ரோட்டில் போக்குவரத்து பகல் நேரத்தில் கூட கம்மிதான். ஒரு நாளைக்கு நாலுமுற தான் பஸ் கூட வரும். இரவு என்பதால் ரோட்டில் ஆள் அரவமே இல்ல. இவங்கள மாதிரி கக்கூஸ் போக வரவங்க வந்தாதான். இல்லாட்டி ஆத்திர அவசரத்துக்கு யாராச்சும் வந்தா தான் உண்டு. ரோட்டோரத்தில், காடுகளில் திறந்த வெளியில் கக்கூஸ் போவது என்பது,  அது ஒரு நரக வேதனை.  அவசரமா பேண்டுகிட்டு இருக்கும் போது  யாராவது எதிரில் வருவது போல நினைத்துப் பாருங்களேன், அந்த நரக வேதனையை உங்களாலும் உணர முடியும். ஊருக்குள்ள இருக்க நாலஞ்சி காலிப்பயலுவ வேணுமுன்னே அந்தபக்கமா போவதும் உண்டு. மூவருமாக சீரியல் கதை, மாமியார் கதை, ஊருக்குள்ள ஓடிகிட்டு இருக்க காதல் கதை, அதுபோக வேண்டாதவங்க பத்தி அப்படி, எப்படி கிசு கிசு பேசிகிட்டே போவதுண்டு. அன்னைக்கு மாட்டுனது மூனாவது தெரு முனியன் பய கதை. அவன் தான் ஊருக்குள்ள இருக்க ஒன்னாம் நம்பரு காலிப்பய. எங்கயோ போயி சாராயத்தை ஊத்திகிட்டு வந்து 'எனக்கு கண்ணாலம் பண்ணி வைய்யுன்னு' அந்த கிழவன் - கிழவியை அடிச்சி ரோட்டுல இழுத்து போட்டுட்டானாம். இவிங்க பேசிகிட்டே போகும் போதே இவங்களுக்கு முன்ன போனவங்க திரும்பி வந்துகிட்டு இருக்காங்க. இவிங்க அவங்கவங்களுக்கு இடம் பார்த்து, யாரும் அந்த இடத்தில கக்கூஸ் போயிருக்காங்களா ன்னு செக் பண்ணிட்டு, பூச்சி பூரான் எதுவும் இருந்தா ஓடிபோகட்டும் ன்னு ச்சூ...ச்சூ... ன்னு சத்தம் போட்டு, எதுவும் பிரச்சனை இல்ல உக்காரலாம் ன்னு தீர்மானம் பண்ணிக்கிட்டு உக்கார்ந்தாங்க. 

உக்காந்து கிட்டே

ஏய்...சுமதி ன்னு மூணு பேருக்கு மட்டும் கேக்குறாப்ல மெல்ல குரல் குடுத்தாள் சரோசா

சொல்லுக்கா ன்னு சுமதி பதில் சொல்ல

இப்படித்தான் ஒருமுறை நம்ம பக்கத்துக்கு வீட்டு முருகாயி கிழவி இருக்குல்ல, அதுக்கு அவசரமா வந்திருக்கும் போல வேகமா ஓடிவந்து ஒரு எடத்துல உக்காந்து போகும்போது பின்னாடி கட்டுவிரியன் பாம்பு ஒண்ணு இருந்திருக்கு, அவசரத்துல அத கிழவி பாக்குல போலிருக்கு. பாம்பு பின்னாடியே கொத்திபிச்சு...

அப்புறம் என்னக்கா ஆச்சு?

வைத்தியர் வந்திருக்காரு , கிழவி கூச்ச்சபட்டுகிட்டு காட்டமாட்டேன் ன்னு உறுதியா சொல்ல கொஞ்சநேரத்துல கண்ணு சொருகிடுச்சு. தர்ம ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுனா முடியாது பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ ன்னு சொல்லிட்டான். அப்புறம் மல்லிகா ஆஸ்பத்திரியில தான் பணம் கட்டி தான் கிழவியை காப்பாத்துச்சு...

'பாம்பு கூட இங்க இருக்காக்கா' ன்னு பயந்துகிட்டே சுமதி கேட்க

"இருக்காதுடி, எப்ப வந்தாலும் பூச்சி, பூரான் இருக்கான்னு பாத்திட்டு மெதுவா சத்தம் போட்டு உக்காரு. ஒன்னும் ஆகாது" அறிவுரை சொன்னாள் சரோசா

எக்கோ யாரோ வர்ர்றாங்க எந்திருக்கா ன்னு வள்ளி சொல்ல

டபக்குன்னு சேலையை கீழ வுட்டு மூணுபேரும் எந்திருச்சி, எங்கன்னு பாக்க...

ஒரு முன்னூறு அடி தூரத்துல டார்ச்சு வெளிச்சம் கிட்ட வருவது போல இருந்தது..

இப்ப இன்னும் கொஞ்சம் கிட்ட வந்துடுச்சு...

வருது...வருது...

இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் மங்கலாக தெரிய.. 

என்னன்னு பார்த்தா மின்மினி பூச்சி...

அடி போடி பொச கெட்டவள... 'வந்ததும் உள்ள போய்டுச்சு இனி எப்ப வருமோ? 'ன்னு அங்கலாய்த்தாள் சரோசா

ஏக்கா... இப்பவே இப்படின்னா மழைக்காலத்துல என்ன பண்றது? ன்னு சுமதி கேட்க...

ஹ்ம்ம்... சட்டியில பேண்டு வெளியே வந்து கொட்ட வேண்டிதான்னு சரோசா கிண்டலடித்தாள்...

'கோவிக்காதக்கா தெரியாமத்தானே கேக்குறேன் சொல்லுக்கா' மீண்டும் சுமதி...

ஒங்க அப்பன் வீட்டுல மொசகல்லு வச்ச பாத்ரூம்லய போன, உனக்கு தெரியாதா? சரோசா மறுகேள்வி எழுப்பினாள்...

இல்லக்கா எங்கூர்ல பக்கத்துலையே ஆறு இருக்கு... அங்க போவோம் சுமதி பதில் சொல்ல...

முழங்காலு சேத்துல தான் அந்த காட்டுக்குள்ள போகணும், இல்லாட்டி அங்க தூரத்துல பாழடைந்த ரைஸ் மில் ஒன்னு இருக்கு. அங்க போகணும்... வேற வழி? அலுத்துக்  கொண்டாள் சரோசா...

எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டும், வேதனை பட்டுக்கொண்டும் கேட்டுகிட்டு இருந்த வள்ளி 'ஏக்கா என் பையன் அழுவான்' வாங்க போகலாம் என்று எழுந்து கொண்டாள். மூவரும் கிளம்பி கொஞ்சதூரம் நடக்க, காணாமல் மறைந்து போன அந்த மின்மினி பூச்சி இவர்களை பார்த்து கண்ணை சிமிட்டி சிமிட்டி சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேராக வந்தது... 'கிண்டலாப் பண்ற ஒன்ன எண்ணப் பண்றேன் பாரு'ன்னு அதை பிடிக்க சரோசா தாவ அது மேல பறந்து ஓடிப்போகவும் சரோசா தடுமாறி விழுந்தாள். சுமதியும், வள்ளியும் கொல்லென்று சிரித்தார்கள்.. மீண்டும் தெருவு கிட்ட வரவும், அடுத்த க்ரூப் இப்ப போறாங்க...

அவரவர் வீட்டுக்கு அவரவர் போயிட்டாங்க...

பிளாஸ்டிக் ஜெக்குல தண்ணி எடுத்திட்டு வீட்டுக்கு பின்னாடி போனாள் சுமதி...

'இவ்ளோ நேரம் எங்கடி போனான்'னு சுமதி வீட்டுக்காரன் கேட்டுகிட்டே கலைஞரய்யா ஆட்சில கொடுத்த டிவி ல நியூஸ் கேட்டுகிட்டு இருந்தாப்ல ...

செய்தியில் ...

மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றும், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். செய்தி வாசிப்பாளர் பூரிப்படைந்து சொல்லி கொண்டிருந்தார். அடுத்ததாக  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் வீட்டுக்குள்ள நுழைந்த சுமதி "இந்த நாட்டுல பொம்பளைங்க கற்புக்கும் பாதுகாப்பில்ல, கக்கூஸ் போகவும் பாதுகாப்பில்ல" இதுதான் இந்த நாட்டுக்கு பெருமையா போல ? என்று வாய் விட்டு சொல்லி கோபபட்டாள்... 

... தொடரும்...