புதன், 30 ஜனவரி, 2013

"விஸ்வரூப" புயலில் சிதைக்கப்படும் தலித் - முஸ்லிம் ஒற்றுமை !




                   
                            "ஒரு சினிமா" "எத்தனை எத்தனை அரசியல்" என்று சொல்லும் அளவுக்கு தமிழகம் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹோட்டல், டீக்கடை, பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் என்று எங்கு பாரினும் வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறுகின்றன; விஸ்வரூப படத்திற்கு தடை விதித்தது சரி என்று ஒரு தரப்பும், இது கருத்துரிமையை பறிக்கும் அப்பட்டமான சட்டமீறல் என்று மறுதரப்பும் சூடான விவாதங்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் சினிமா ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது; இதை விட வெட்ககேடு உண்டா என்று புலம்பலுக்கு உள்ளாகி இருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக இணையங்களுக்கு வருவதை தவிர்த்து வந்தேன்; அப்படியே வந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்த வேகத்திலே திரும்பிவிடுவேன். விஸ்வரூபம், விஸ்வரூபம் என்று ஒரே கூச்சல். அப்படி என்ன இந்த செய்தி முக்கியத்துவம் பெற்று விட்டது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று இந்த திரைப்படத்தை பயன்படுத்தி இந்துத்துவம் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தி விடலாம் என்று பலான பலான கனவுகளை கண்டுகொண்டு இருப்பதை அறிய முடிகிறது. இதற்க்கு முழுப் பொறுப்பும்  தமிழக அரசும், மங்கையர்களின் மறைவானப் பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி காசுப் பார்க்கும் ஊடகங்களுமே.

தினசரி செய்தி தாள்கள், தொலைகாட்சி செய்திகள், வாரப்பத்திரிக்கைகள் என அத்துனைப் பொறுக்கிகளும் ஒன்று கூடிவிட்டார்கள். தருமபுரி சாதிக்கலவரத்திற்கு கவலைப்படாத ஊடகப் பொறுக்கிகள், கமலஹாசனுக்கு கவலைப்படுகிறார்கள். திண்ணியம் கொடுமைக்கு கவர் ஸ்டோரி போடாத பணப் பேய்கள் இன்று திரைப்படத்திற்கு கவர் ஸ்டோரி எழுதுகிறார்கள். தருமபுரியிலே 300 குடிசைகளுக்கு தீ வைத்த கொடுமை நிகழ்ந்த போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கவலைப்படாத கவர்மெண்ட் இந்த திரைப்படம் வெளிவந்தால் கெட்டுவிடும் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது. தருமபுரி சாதிக்கலவரத்திற்க்குப் பின்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு? அப்போது கெட்டுவிடாத சட்ட ஒழுங்கு இந்த படத்தால் கெட்டுவிடும் என்று முந்திக்கொண்டு தடை விதிக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? எலி என்னடா அம்மணமா ஓடுதே நு பார்த்தா உள்ளே இவ்வளவு வக்கிர எண்ணங்களும், அரசியல் லாபங்களும் இருக்கின்றன. 

எப்படியோ இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. விஸ்வரூப திரைப்படத்தில் இசுலாமியர்களை இழிவுபடுத்துவதாக காட்சி இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் அவர்களின் நோக்கம் தலித் -  முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பது ஒன்றே. கடந்த 24 ஆம் தேதி அன்று தோழர் வே. மதிமாறன் அவர்கள் இணையத்தில்  விஸ்வரூபம் திரைப்படம் குறித்து "இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஊடகங்கள் காட்டி, இந்துக்கள் மத்தியில் அவர்களை பற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விஸ்வரூபத்திற்கு ஆதராவகவும் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றுகிற… பிரச்சினையாக திசை திருப்பப்படுகிறது.பெங்களுரில் இந்தப் படத்தை இந்து அமைப்புகள் ஆதரித்து இருக்கிறார்கள். சன் டி.வி. செய்தியாளருக்கு பின்‘ பாரத் மாதாக்கி ஜே.. ’ என்று முழக்கமிடுகிறார்கள். இந்தப் பிரச்சின வேறு வடிவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அது மிக அபாயகரமானதாக அறிகுறியாக தெரிகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் எனக்குப் புரியாததால் விட்டு விட்டேன். ஆனால் இன்று நடிகர் கமல்ஹாசனின் பேச்சு உறுதி செய்துள்ளது. இன்று விஸ்வரூபம் திரைப்படத்தைப் பற்றி பேசுவோர் அத்துனைப் பெரும் கமலின் மீது பரிதாபப்படுவதை தவிர்க்க முடியவில்லை; ஏனெனில் 100 கோடி முதலீடு செய்துள்ளாராம்; இந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றால் அவரது சொத்துக்கள் ஏலத்துக்கு சென்றுவிடுமாம். முதலீடு செய்தவருக்கு அதைப் பற்றிய கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமலஹாசன் பேசும் போது "எனக்கு மதசார்ப்பற்ற ஒரு இடம் வேண்டும். அது தமிழகமாக இல்லாமல் போய்விட்டால், மதசார்ப்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா என்று தேடி குடியமர்வேன். இருந்ததெல்லாம் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் பொழுது, குடியமர நான் உகந்ததாக கருதும் மாநிலத்தில் தங்கலாம் என்று இருக்கிறேன். காஷ்மீர் முதல் கேரளம் வரை ஒதுக்கி வைத்திருக்கிறேன் நீங்கள் பார்ப்பீர்கள். எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், மதசார்ப்பற்ற ஒரு நாடு தேடி போவேன்." என்று ரெடி, ஸ்டார்ட், ஆக்சன் சொல்லாமலே நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் "எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் என்பது உங்களுக்கு பலருக்கு தெரியும்." என்று எல்லோரின் அனுதாபத்தை பெற்றுவிட்டார். இதற்கெனவே காத்திருந்தது போல கூத்தாடிகள் எல்லோரும் ரஜினிகாந்த், அர்ஜுன், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா,  அரவிந்தசாமி, சிம்பு, நடிகை ராதிகா, சினேகா உட்பட தமிழகத்தை விட்டு போகாதீர்கள் என்று கிளீசரீன் போடாமேலே கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த கூத்தாடிகளில் எவனாவது எம்மக்கள் கொத்துக் கொத்தாக செத்தப் போது கண்ணீர் வடித்தானா? அதோடு மட்டுமில்லாமல் சிவகாசியில் ஏற்ப்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அண்டை மாநிலத்து நடிகர் மம்மூட்டி 35 லட்சம் மதிப்பில் மருத்துவ உதவி செய்தார். ஆனால் எம்மக்களின் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைக்கும் இந்த கூட்டம் எவனாவது / எவளாவது ஒரு துரும்பை கிள்ளிப் போட்டார்களா? அது மட்டும் இல்லாமல் மதுரை கமல் நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில் "தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்." என்று வெட்கமே இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இதை விட வெட்க கேடு வேண்டுமா?

உண்மையில் கமலஹாசன் மதசார்பற்ற மனிதர் தான் என்பது உண்மையானால் The innasense of Muslim என்ற அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு வந்த போதே அவர் சுதாரித்து இருக்கவேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி இருக்கவேண்டும். ஆனால் அதில் இருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இங்கே தான் காவி பயங்கரவாதிகள் விழித்துக் கொண்டனர். இசுலாமியர்களின் உணர்ச்சியை கண்டு வியந்த அவர்கள் அதோடு வியூகமும் வகுக்கத் தொடங்கினார்கள். அதற்க்கு விஸ்வரூபம் மூலமாக மடை திறந்து விட்டிருக்கிறார் கமலஹாசன். ஏன் காவி பயங்கரவாதிகள் இதை பயன்படுத்தவேண்டும் என்ற கேள்வி எழலாம். சமீப காலமாக தலித்களும், இசுலாமியர்களும் ஓரணியில் நிற்கிறார்கள். அதற்க்கு சான்றாக தருமபுரி சாதிக் கலவரத்திற்கு தலித் அமைப்புகளுக்கு முன்னாள் முதன்முதலில் களம் இறங்கியவர்கள் இசுலாமிய அமைப்புகள். SDBI நேரடியாக கள ஆய்வு செய்து அரசுக்கு தம் கண்டத்தையும், பரிந்துரைகளையும் செய்தது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தலித்களையும்  - இசுலாமியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கட்டினார். அதற்க்கு ஓரளவு நல்லப் பயனும் கிட்டியது. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்ட காவி பயங்கரவாதிகள் தலித்துகளையும், இசுலாமியர்களையும் ஓரணியில் திரள விடக்கூடாது என்று முடிவெடுத்து விட்டனர். அதனால் இந்து முன்னணியினரும்,  வன்னியர் சங்க தலைவர் ராமதாசும், திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

தமிழக அரசு இதை எப்படி பார்க்கிறது என்றால் மத்திய அரசின் தணிக்கை துறையை குற்றம் கூறி அதில் லஞ்சம் பரிமாறப் பட்டதாக கூறி காங்கிரசுக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளின் ஓட்டுக்களையும், இசுலாமியகளுக்கு ஆதரவாக செயல்படும் பேரில் இசுலாமியர்களின் வாக்குகளையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாங்கி விடலாம் என்று கணக்கிடுகிறது. அதோடு தம் மீது கோபத்தில் உள்ள மக்களின் அபிமானத்தைப் பெறவும் இதை பகடைக் காயாக பயன்படுத்துகிறது. ப. சிதம்பரத்தின் புத்தக விழாவில் கமல் கலைஞர் அவர்களோடு கலந்து கொண்டதற்கும் பழி வாங்குகிறார். இதற்கு முன் கலைஞரை பாராட்டிய காரத்தினால் ரஜினியை பழிவாங்கிய அரசு இப்போது கமலையும் பழிவாங்குகிறார்.

எது எப்படியோ இன்று ஒட்டுமொத்த இசுலாமியர்களையும், மனிதாபிமானமற்றவர்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து, விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே இழிவுபடுத்திவிட்டது தமிழக அரசு. எந்த திரைப்படம் வந்தால் இசுலாமியர்களுக்கு இழிவு என்று கருதினோமோ அதை திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே செய்துவிட்டனர். இசுலாமியர்களின் உணர்வுகளை மூலதனமாக்கி இசுலாமியர்களுக்கு எதிராகவே பிரச்சாரம் நடக்கிறது. இதற்க்கு சூத்திரதாரி கமலா? இல்லை அவர் பகடைக் காயக்கப் பட்டாரா? என்பது அவரவர் மனசாட்சிக்கே விளங்கும். எது எப்படியோ இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவ்வளவு தான் சொல்ல முடியும்...

- அங்கனூர் தமிழன் வேலு        

புதன், 9 ஜனவரி, 2013

சிறிய கட்சிகளுடன், பெரிய கட்சிகள் தேர்தல் கூட்டணி கணக்கு !




பெரிய கட்சிகளால் தான் சிறிய கட்சிகள் இருக்கின்றன; என்று பல அரசியல் விஞ்ஜானிகள் கூறுகிறார்கள்; அந்த கூற்று முற்றிலும் பொய்யானது. சிறிய கட்சிகளின்  வாக்குகள் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்; இவர்களின் தேர்தல் கூட்டணி என்பதற்கு வரைமுறை எதுவும் இருக்கிறதா? இல்லை கொள்கை இருக்கிறதா? என்றால் ஒரு வெங்காயமும் இல்லை! ஒரு பிரபல எழுத்தாளர் குழந்தைகளுக்கு கூறும் கதைகளை நாவலாக தொகுத்து எழுதி இருக்கிறார். அவர் பெயர் நினைவில்லை, அனேமாக காட்வின் என்றுதான் நினைக்கிறேன். அந்த தொகுப்பில் இருந்த ஒரு சிறுகதை நமது தேர்தல் அரசியல் கூட்டணிக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. அந்த கதை...

ஒரு சுறாமீன், சிறிய மீனிடம் கேட்டதாம் எனக்கு பசிக்கிறது; உனக்கு பசிக்கிறதா? என்று. அதற்க்கு சிறிய மீன் ஆமாம் என்றதாம். மீண்டும் சுறாமீன் சரி அப்படியானால் உன்னால் முடிந்தால் என்னை கொன்று சாப்பிட்டுக் கொள்; என்னால் முடிந்தால் உன்னை கொன்று சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றதாம் ! 

அப்படித்தான் இங்கே தேர்தல் கூட்டணி கணக்குகளும், பெரிய கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் ஏற்படும் அதிகாரப் பசியில், ஒருவித குறைந்தபட்ச உடன்படிக்கை மூலம் ஒருசேர கரம் சேர்க்கிறார்கள்; இறுதியில் சுறாமீன் சின்னமீனை கொன்று சாப்பிடுவதைப் போல, பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை பசிக்கு  சாப்பிட்டுவிட்டு பின்பு அந்த சிறிய கட்சியை ரெண்டாக, மூன்றாக உடைத்து ஏப்பம் விட்டு விடுகின்றன; அதற்க்கு தமிழகத்தில் உதாரணங்கள் பல....

- அங்கனூர் தமிழன் வேலு

        

செவ்வாய், 8 ஜனவரி, 2013

திருமாவுக்கு ஓட்டு வாங்கும் அரசியல் தெரியவில்லை !

தமிழன் வேலு  : திருமாவளவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிக்கை கடைக்காரரின் பதில் : 50 ஆண்டுகளாக பத்திரிக்கை கடை நடத்துகிறேன்; அந்த வகையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அவர்களைப் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். நேற்றைக்கு கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் தன்னை மிகப்பெரிய தலைவன் என்றும், என் பின்னால் பல கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று நாக்கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசியல் களத்தில், இன்னமும் என்னை ஒரு கட்சியின் தலைவனாக அரசியல்வாதிகளே  கூட ஏற்றுக் கொள்ளவில்லையே, என்று மனம் திறந்து கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது; மேலும் என்னிடம் பத்திரிக்கை வாங்கும் பலரிடம்  அரசியல் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது,  திருமா அரசியலில் முதிர்ச்சியை, பக்குவத்தை வெளிக்காட்டுவதாக நான்கு, ஐந்து பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்; திருமா நினைத்து இருந்தால் தருமபுரி கலவரத்தை வைத்து அரசியல் செய்திருக்கலாம்; ஆனால் அவர் செய்யவில்லை, ராமதாஸ் பேசிவரும் பேச்சுக்கு திருமாவும் பதிலுக்குப் பதில் சவடால் விட்டு இருந்தால் நிச்சயம் பல கலவரங்கள் நிகழ்ந்து இருக்கும்; ராமதாஸ், திருமாவை ரவுடி என்று சொன்னப் பிறகும், நான் இன்னமும் சமூக நல்லிணக்கத்திற்கு அவரோடு கைகோர்க்க தயார் என்று சொல்லும் பக்குவம் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய சிறந்த பண்பு. ஆனால் ஒன்று, திருமா நல்ல பேச்சாளர், நல்ல சிந்தனையாளர், இயல்பிலே போராடும் குணம் படைத்தவர்; ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் அவருக்கு தெரியவில்லை...

(வழக்கமாக பத்திரிக்கை வாங்கும் கடைகாரரிடம் நேற்று இரவு பேசியதில் இருந்து.... நான் எந்த கட்சி என்று அவருக்கு தெரியாது )

தொண்டர்களுக்கு தலைவர்கள் சேர்க்கும் பெருமை இதுவல்லவா.... பெருமை கொள்கிறேன் !          

தமிழன் டா... டேய் தமிழன் டா...


2009 க்குப் பிறகு தமிழன் என்றும், ஈழம்  ன்றும் கூச்சல் போடும்
சிலரை காணும் போது கடுமையான கோபம் பீறிட்டுக் கொண்டு
வருவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை;

ஒருமுறை பாவலர் இன்குலாப் அவர்கள்...

"மனுசங்கடா....நாங்க  மனுசங்கடா
உன்னைப் போல, அவனைப் போல
எட்டுசாணு ஒசரமுள்ள
மனுசங்கடா - டேய் மனுசங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச
தீயில்  வேகுதே உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெய் ஊத்துதே
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுரைப் 
புடுங்க போனீங்க? "

என்று கோபமாக பாடினார் .... அதுபோல

தமிழன் டா... நாங்க தமிழன் டா
உன்னைப் போல, அவனைப் போல
வேட்டிகட்டி நல்ல தமிழைப் பேசும்
தமிழன் டா... டேய் தமிழன் டா...

நீங்க ஈழம் என்ற போதும், தமிழன்
என்றபோதும் உங்க பின்னாடி வந்த
தமிழன் டா... ஈழத்தமிழருக்கு
இன்னல் என்ற போது  தீ யில் எங்க உசுர
மாய்த்துக் கொண்ட  தமிழன் டா...

எங்க குடிசையெல்லாம் தமிழன்
வச்ச தீயில் வேகுதே; ஆண்ட சர்க்காரும்
ஆளும் சர்க்காரும் அதில் எண்ணெய் ஊத்துதே

நாங்க
எரியும் போதும்,
எங்க குடிசை எரியும் போதும்
எவன் மசுரைப் 
புடுங்க போனீங்க?

என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன்

- அங்கனூர் தமிழன்வேலு

திங்கள், 7 ஜனவரி, 2013

ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா?



தமிழ் நதி : நன்றி என்னை உங்கள் நன்பனாக ஏற்றுக் கொண்டதற்கு. தலித்துக்கள் என்பதை எரித்து விடுங்கள். தமிழ்ச்சிறுத்தையாக முழக்கமிடுங்கள்!

பதில் : ஏற்கனவே இங்கே ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா? நானும் எரிக்கவேண்டுமா? நாட்டில் எத்தனைப் பிரச்சனை இருந்தாலும் எனக்கு முதல்ப் பிரச்சனை சாதி; கடைசி மனிதர்களின் கண்ணீரைக் கூட ஓட்டாக மாற்றத்துடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நானும் தமிழ், தமிழ் என்று கூப்பாடுப் போட  எனக்கு உடன்பாடில்லை; தலித் விடுதலையே தமிழ்தேசிய விடுதலை( http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html ) என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ; அதுதான் உண்மையும் கூட தலித் விடுதலையின் மூலமே சாதியை ஒழிக்க முடியும்; சாதி ஒழிப்பின் மூலமே தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப முடியும் !

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

முடி அரசும் ! குடி அரசும் !!



அன்றைக்கு மன்னர்களும் , குறுநில
மன்னர்களும் மக்களை ஆண்டனர்;
இன்றைக்கு பிரதமர்களும், முதல்வர்களும் 
மக்களை ஆள்கின்றனர் !

அன்றைக்கும்  ஒரு நாட்டை கைப்பற்ற 
படைவீரர்களை பயன்படுத்தினர்;
இன்றைக்கும்  ஒரு தொகுதியை 
கைப்பற்ற அடியாட்களை 
பயன்படுத்துகின்றனர் !

அன்றைக்கு படைவீரர்களை தெம்பூட்ட 
"கள்" கொடுத்தார்கள்; இன்றைக்கு 
வாக்காளர்களை கவர "சாராயம்" 
கொடுக்கிறார்கள்

அன்றைக்கு அரசசபையில் நாட்டியக்காரர்கள்
இருந்தார்கள்; இன்றைக்கு நாட்டியக்காரராக
இருப்பதுதான் நாட்டை ஆள்வதற்கான 
முதல் தகுதியே !      

அன்றைக்கும் மந்திரிகளை அரசர்களே 
தேர்வு செய்தனர்; இன்றைக்கும் மந்திரிகளை 
முதல்வர்களே தேர்வு செய்கின்றனர் !

அன்றைக்கு மந்திரிகளுக்கு மதியூகம் 
தகுதியாக கருதப்பட்டது; இன்றைக்கு 
மந்திரிகளுக்கு துதியூகம் தகுதியாக 
கருதப்படுகிறது !  

அன்றைக்கு மந்திரிகள் வரும்பொருள் 
உரைப்பவர்களாக  இருந்தார்கள்; இன்றைக்கு 
மந்திரிகள் வரும்பொருள் பறிப்பவர்களாக 
உள்ளனர் !

அன்றைக்கு மந்திரிகள் வேதங்களுக்கு 
உரை எழுதினர்;  இன்றைக்கு மந்திரிகள்
கட் அவுட்டுக்கு உரை எழுதுகின்றனர்!

அன்றைக்கு அரச சபையில் புலவர்கள் 
இருந்தார்கள்; இன்றைக்கு சட்டசபை 
உறுப்பினர் ஒவ்வொருவரும் புலவர்களாக 
இருக்கின்றனர் !

அன்றைக்கு அரசர்களைப் புகழ்ந்துப் 
பாடினால் பரிசு கிடைக்கும், இன்றைக்கு 
முதல்வர்களைப் புகழ்ந்துப் பாடினால் 
பதவி கிடைக்கும் !

அன்றைக்கும் அரசர்களை பெயர்சொல்லி 
அழைக்காமல்  ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, 
ராஜ மார்த்தாண்ட, ராஜ விக்கிரம சக்கரவர்த்தி 
என்று அழைத்தனர்; இன்றைக்கும் 
முதல்வர்களை  பெயர்சொல்லி அழைக்காமல் 
இதயதெய்வம், முத்தமிழ் அறிஞர், 
புரட்சி தலைவர், புரட்சி தலைவி 
என்றே அழைக்கின்றனர் !

அன்றைக்கும்  அரசசபையை எதிர்த்துப் 
பேசினால் கத்திப் பாயும்; இன்றைக்கும்  
சட்டசபையை எதிர்த்துப் பேசினால் 
குண்டாஸ் பாயும் ! 

அன்றைக்கும்  மன்னர்கள் ஓய்வெடுக்க 
அந்தபுரம் இருந்தது; இன்றைக்கும் 
முதல்வர்கள் ஓய்வெடுக்க கொடநாடுகள் 
இருக்கின்றன!

அன்றைக்கும் மன்னர்களின் புதல்வர்கள்
இளவரசர்களாக இருந்தார்கள்; இன்றைக்கும் 
முதல்வர்களின் புதல்வர்கள் துணை 
முதல்வர்களாக இருக்கிறார்கள் !

முடி அரசுக்கும், குடி அரசுக்கும் 
எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை;
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.....

(அடிப்படை : பாவலர் இன்குலாப் அவர்களின் 
"ஜனநாயகம் தூசு தட்டிய  போது... " 
கட்டுரைத் தொகுப்பு)

- அங்கனூர் தமிழன் வேலு 

சனி, 5 ஜனவரி, 2013

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம்

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம் என்ற வீரியமான முழக்கத்தோடு இன்று சென்னையில் (05.01.2013) இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாநிலை  அறப்போராட்டம் நடந்தது; இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் தலைமையில் கோவை சிறையில் 15 ஆண்டுகளாக வாடிவரும் அபுதாஹீரை விடுதலை செய்யக்கோரி நடந்த அறப்போராட்டத்தை  ஒரு உயிரைக் காக்கும் போராட்டமாக மட்டும் நான் கருதவில்லை, ஒரு உண்மையை உரத்து சொல்லும் கூட்டமாகத்தான் கருதினேன். அதாவது இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு அவதூறு பரப்பிவரும் நிலையில் எங்களுக்கு அறவழியிலும் போராட தெரியும் என்பதை தெளிவாக இந்துத்துவ சக்திகளின் செவுட்டில் அறைந்து கூறியிருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருப்பது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இசுலாமியர்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம் தான். இசுலாமிய மார்க்கப்படி ஏக இறைவன் அல்லாஹ் வை தவிர வேறு யாருக்காகவும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்பது இசுலாமிய மார்க்க சட்டம். அந்த சட்டத்தையும் மீறி, தனது சமுதாய எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் அறவழியில் போராடுபவர்கள் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார்கள். தம் சமூக மக்களின் மீது விழுந்துள்ள களங்கத்தை துடைக்க முனைந்திருக்கிறார்கள். மனிதநேயத்திற்காக மார்க்கத்தையும் மீறி வந்திருக்கிறார்கள். இதில் இன்னொரு உண்மையும் தெளிவாக புலப்பட்டது; அதாவது இசுலாமியர்கள் மார்க்க ரீதியாக ஒன்றுபடுவார்கள் ஆனால் அரசியல் ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள், அந்த உணர்வில் இருந்து இசுலாமியர்களை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சியில் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் முன்வந்திருப்பது வரவேற்ககதக்கது; இது ஒரு தொடக்கம், இன்னமும் இதுபோன்ற நீண்ட நெடிய பயணங்களை தடா.ஜெ.ரஹீம் அவர்களும், இந்திய தேசிய லீக் கட்சியும் முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்...

- அங்கனூர் தமிழன் வேலு   

வெள்ளி, 4 ஜனவரி, 2013

காந்தியை விமர்சிக்கலாமா?


கேள்வி - பதில் !

குமார், சென்னை : காந்தியடிகள் இறந்துவிட்டப் பின்பும் அவரை விமர்சிப்பது நேரத்தை வீணடிக்கும்  செயல்தானே? ஏன் அவரை விமர்சிக்க வேண்டும்?

பதில் : இது நல்ல கேள்வி! பெரும்பாலான தலித் இயக்கங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை வெறும் அடையாகங்களாக மட்டுமே பயன்படுத்துகிறார்களே ஒழிய, ஆயுதமாக பயன்படுத்தவில்லை; ஆனால் இந்துத்துவ சக்திகள் காந்தி போன்றவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்! காந்தி இறந்துவிட்டாலும் அவரது சொற்கள், அவரது எண்ணங்கள் இன்னமும் உயிர்ப்போடு  இருக்கின்றன; உதாரணமாக அவர் ஆடை விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்; காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது விவசாயி ஒருவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து இந்த மக்கள் நல்ல ஆடை அணியும் வரை நானும் நல்ல ஆடை அணியமாட்டேன் என்று சொன்னாராம்; ஆனால் இரண்டு நாளுக்கு முன்னர் ஒரு தினசரி நாளிதழதில் படித்தேன், கேரளா, திருச்சூர் மாவட்டம், திப்பிலசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஷ்,என்ற மரம் வெட்டும் தொழிலாளி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தம் பெயரை இணைக்க ஆடை அணியாமல் சென்றுள்ளார், அவர் ஆடை அணியாமல் வந்ததால்  திகாரிகள் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்; பிறகு அவர் நான் வழக்கு தொடுப்பேன் என்று கூறியப் பிறகு அதிகாரிகள் அவரதுப் பெயரை இணைத்துள்ளனர்; அதன் பிறகு செய்தியாளர்களிடம் அந்த விவசாயி கூறியது தான் காந்தி எதிர்பார்த்தது, அதாவது அவர்  நான் பல ஆண்டுகளாக, காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, எளிமையாக வாழ்ந்து வருகிறேன். அவரைப் போலவே, பல ஆண்டுகளாக, மேல் சட்டை அணியாமல் உள்ளேன். வேஷ்டியும், மார்பை மறைக்க, காவி துண்டையும் பயன்படுத்தி வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.இதைதான் காந்தி எதிர்பார்த்தார்?

ஏழைமக்கள் ஆடையின்றி இருப்பது காந்திக்கு வேதனையை உண்டாக்கி இருந்திருந்தால், ஒரு சமூகத்தின் மீது அக்கறை உள்ள தலைவராக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஏழைககளை  ஆடை அணிய வலியுறுத்தி இருக்கவேண்டும்; எல்லோருக்கும் ஆடை கிடைக்க வழிவகை செய்திருக்க வேண்டும்;  மக்கள் அனைவரும் சமமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ தடையாக இருக்கும் சாதியை எதிர்த்து களமாடி இருந்திருக்கவேண்டும்; மாறாக அவர் மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வர்ணாசிரமத்தை ஆதரித்தார் ! ஒரு தலைவன் நாட்டு மக்களுக்கு முன்னேக்கி வழிகாட்ட வேண்டுமே ஒழிய பின்னோக்கி வழிகாட்டக் கூடாது. காந்தியின் அரை நிர்வாணக் கோலம்  மக்களை பின்னோக்கி இழுக்கும்  செயல்.  மேலும் காந்தியம் இங்கே உயிர்ப்போடு இருப்பதால் காந்தியின் பெயரை சொல்லி இங்கே மக்களை ஏமாற்றும் கூட்டமும் நிறைய இருக்கிறது ஆகவே  காந்தி என்ற மாயையை உடைத்தெறியவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; அதற்காக காந்தியை விமர்சிப்பதில் தவறில்லை.

அங்கனூர் தமிழன் வேலு           

புதன், 2 ஜனவரி, 2013

விகடன் இதழுக்கு இதுதான் பெருமையா?


ஆனந்த விகடன் எப்படிப் பட்ட இதழாகவும் இருந்துவிட்டு போகட்டும்; அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை ! அதே மாதிரி நயன்தாரா தம் தனிப்பட்ட வாழ்வில் எப்படிப்பட்டவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதைப்பற்றியும்  நமக்கு கவலை இல்லை ! ஆனந்த விகடன் இதழுக்கு நடிகர்களை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம், அதேவேளையில் நடிகர் ஆர்யாவும், அவரின் தம்பி சத்யாவும் அந்தப் பேட்டியில் நிறைய பேசி இருக்கிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு நயன்தாரா யாருக்கு? என்று தலைப்பிட்டு, அதோடு மட்டுமில்லாமல் அதையே அட்டைப்படமாக வெளியிட்டு இருப்பதில் உள்நோக்கம் இருக்கவே செய்கிறது என்பது தெளிவாகிறது; இதைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று ஆனந்த விகடன் நினைக்கிறதா? இல்லை இதைத்தான் தமிழர்களுக்கு சொல்லவேண்டும் ஆனந்த விகடன் விரும்புகிறதா? இதழின் உள்ளே அவர்கள் எவ்வளவுதான் சமூக முன்னேற்றம் பற்றி பேசியிருந்தாலும் வளர் இளம் பருவத்தில் படிப்பதே மனதில் ஆழமாக பதியும் என்பதைப் போலஅட்டைப்படத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் இந்த இதழ் முக்கியமாக கருதுகிறது போலும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 75 ஆண்டுகாலம் தமிழின் நம்பர் 1 வார இதழ் என்றும், தமிழர்களின் நாடித்துடிப்பு என்றும் பெருமை பேசும் ஆனந்த விகடன் இதழுக்கு இதுதான் பெருமையா என்பதை ஆனந்த விகடனே  விளக்கட்டும். அதோடு மட்டுமில்லாமல் அரைகுறை ஆடைதான் வன்புணர்ச்சிக் குற்றங்களுக்கு காரணம் என்று பெரும்பாலானவர்கள் பேசிவரும் நிலையில், இதுபோன்ற மலிவான விளம்பரங்கள் ஏன் பெண்களை மோகப்பொருளாக எண்ணத் தூண்டாது! என்பதே என் கேள்வி !

- அங்கனூர் தமிழன் வேலு

சாதி ஏன் ஒழிய வேண்டும்?


                      அமெரிக்கர்களை  அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நான் அமெரிக்கன் என்று பெருமையோடு சொல்வார்கள் ;  ஆங்கிலேயர்களை  அழைத்து நீங்கள் யார் என்று கேட்டால் எல்லோரும் நான் ஆங்கிலேயர் என்று பெருமையோடு சொல்வார்கள்; ஆனால் இந்தியாவில் உள்ள 100 % சதவிகித மக்களும் நான் இந்தியன் என்று பெருமையோடு சொல்வார்களா? உலகில் அடிமைத்தலையில் இருந்து விடுதலையான எந்த நாட்டிலாவது, அந்த நாட்டின் மக்கள், அந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்தது உண்டா? என் இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் அப்படி ஒரு துர்பாக்கிய சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்றே நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இங்கே ஏற்றத்தாழ்வுகள் கற்ப்பிக்கப்பட்டு உள்ளது. என் வீடு எப்படி சிறந்த வீடாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேனோ, அப்படியே என் நாடும் சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்; அதே வேளையில் என் தந்தை சிறந்த தந்தையாக இல்லாத பட்சத்தில் நான் எப்படி என் தந்தை சிறந்த தந்தை  என்று சொல்ல முடியாதோ  அப்படித்தான் என் நாடு சிறந்த நாடாக இல்லாத பட்சத்தில் நான் எப்படி என் நாட்டை சிறந்த நாடு என்று  பெருமை கொள்ள முடியாது; ஒரு நாடு சிறந்த நாடாக அல்லது முன்னேறிய நாடாக  அல்லது மற்ற நாடுகளுக்கு முன்மாதிரி நாடாக இருக்க வேண்டுமானால் அந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாவிட்டாலும் நிரம்ப வேறுபாடுகள் இருக்க கூடாது; ஒட்டி உறவாட நெருங்கிய நெருக்கம் இல்லை என்றாலும், நெருங்கவே முடியாத அளவில் முரண்பாடு  இருக்க கூடாது !


               வேறுபாடுகள் எல்லாநாட்டிலும் இருந்தாலும், சாதி எல்லா மதங்களிலும் இருந்தாலும் இந்துமதத்தை தவிர  வேறு எந்த மதங்கள் சாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இந்தியா மதசார்பற்ற நாடு என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும், இந்தியாவை ஆள்வது இந்துமதமே; இந்தியாவின் பிரிவினைக்கு காரணமும் இந்துமதமே; ஆகவே இந்துமதத்தைப் பற்றியே இங்கே பார்ப்போம்...இந்தியாவில் மட்டுமே வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக நான் சொல்லவில்லை, எல்லா நாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, இந்தியாவிலும் இருக்கிறது; ஆனால் இந்தியா போன்ற நாடுகளை தவிர்த்து வளர்ந்த நாடுகளிலும், இன்னபிற வளரும் நாடுகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தொழிலை சார்ந்தது, வர்க்கத்தை சார்ந்தது; ஆனால் இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பு; அதாவது இந்தியாவில் சாதிதான் ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிக்கிறது ! பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது ! தொழில்  சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக இருக்கத்தான் வேண்டும்; வர்க்க முரண்பாட்டை அதாவது தொழில் ஏற்றத்தாழ்வுகளை கலையும் பொறுப்பு  ஒவ்வொரு தனிமனிதனுக்கெ உரியது அவன் விரும்பிய தொழிலை செய்யும் உரிமை அவனுக்கு இருந்தால்; அவன் விரும்பியத் தொழிலை செய்யும் உரிமை அவனுக்கு இருந்தால் வர்க்க முரண்பாட்டால் எந்தவித பிரச்சனையும் இங்கே எழாது; ஆனால் இந்தியா போன்ற நாடுகளில்  பிறப்பின் அடிப்படையில் சாதி தீர்மானிக்கப்படுவதால், சாதியின் அடிப்படையில் தொழில் வரையறுக்கப்படுவதால் தான் இங்கே ஏற்றதாழ்வுகள் களைய முடியாத காரணியாக வேர்விட்டு விருச்சமாக  வளர்ந்து நிற்கிறது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? அதற்கு கம்பர் சொல்வது....


"வன்மை இல்லை ஓர் வறுமை இல்லையாம்;
திண்மை இல்லையோர் செறுநர் இல்லையாம்;
உண்மை இல்லை பொய் உரை இல்லையாம் ;
ஒண்மை இல்லையல் கேள்வி ஒங்கலால் !" 

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கம்பர் பாடிய வரிகள் இது; ஆனால் இந்தியாவில் வன்மை, வறுமை, திண்மை, உண்மை, பொய் உரை, கேள்வி இவை அனைத்தையும் சாதியே தீர்மானிக்கிறது; அதைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம் ...

          இந்தியா மத சார்பற்ற நாடு என்று  பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்; என்னால் நம்ப முடியாது; இந்தியாவை வடிவமைத்ததும், இந்தியாவில் முரண்பாடுகளுக்கு  வழிகாட்டுவதும் இந்து மதமே ! இந்தியா மத சார்பற்ற நாடுதான் என்றால் இங்கே இசுலாமியர்கள் ஏன் சிறுபான்மையினர் பட்டியலுக்கு சென்றார்கள்? தலித்துகள் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலுக்கு சென்றார்கள்? வன்மையை இந்துமதம் எப்படி வளர்க்கிறது என்றால் இங்கே இந்து - முஸ்லிம்  கலவரம் நிகழாதவரை இந்துக்களுக்குள் எந்த ஓட்டும் இல்லை; உறவும் இல்லை ! ஒவ்வொரு இந்துவும் தத்தம் சாதியை உயர்ந்தது என்றும், மற்ற சாதிகளை தாழ்ந்தது என்றும் மலிவான செயல்பாடுகளில் செயல்பட்டு வருகிறார்கள் ! சாதிகளுக்குள் உயர்வு தாழ்வு பேசும் போது  வன்முறை நிகழ்கிறது; அந்த வன்முறையை இந்துமதம் ஊக்குவிக்கிறது ! உதாரணமாக தருமபுரியில்  300 தலித் குடிசைகள் தீக்கு இறையான சம்பவம். வறுமையை இந்துமதம் எப்படி உருவாக்குகிறது என்றால் இந்தியா போன்ற நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் எவரும் எந்த தொழிலையும் செய்யலாம்; அங்கெ வர்க்க முரண்பாடுகள் இருந்தாலும், அவை அந்தந்த காலகட்டங்களில் முறியடுக்கப்படுகின்றன; ஆனால் இந்துமதத்தில்  சாதியின் அடிப்படையில் தொழில் தீர்மானிக்கப்படுவதால் சாணி அள்ளியவன்  பிள்ளையும் சாணியே அள்ள வேண்டும் என்ற அவலமான சூழல் இங்கே இருக்கிறது; இது போன்ற சில தொழில்களை இழிவான தொழில்கள் என்று ஒதுக்கி தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது திணிப்பதால் அவர்களும் அந்த தொழில்களை செய்ய மறுக்கிறார்கள்; வேலை இல்லாததால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் வறுமை குடி கொள்கிறது; அந்த வறுமையை இந்துமதம் வேடிக்கைப் பார்த்து சிரிக்கிறது ! இந்து மதத்திலே உண்மை  பொய் உரை, கேள்வி ஆகியவைகள் என்பதே கேலிக் கூத்தானது ! வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது போல உயர்சாதிக்காரன் சொல்வதே உண்மையாக இங்கே நிலை நிறுத்தப்படுகிறது! எப்படி என்பீர்கலேயனால் இந்தியாவின் உயர் பதவிகளில் பெரும்பாலும் பிராமினர்களே இருக்கிறார்கள்; அது நீதித்துறையானாலும் சரி, ஆட்சி அதிகாரம் ஆனாலும் சரி ! ஆட்சி அதிகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் பங்கு கொள்ளத்தானே தனித் தொகுதி முறை இருக்கிறதே என்று நீங்கள் வாதிடுவீர்களேயானால், தனித்தொகுதியில் யார் நிற்க முடியும் என்றால் "தேவிக்கு பிரியமானவன் பூசாரி" ஆவதைப் போல சோனியாவுக்கும், அத்வானிக்கும், கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேண்டியவர்கள், ஆடுகளைப் போல தலையாட்டுபவர்கள் அங்கெ நின்று வெற்றி பெறலாம்! அவர்களால் தலித்துகளுக்கு எந்தவித பிரயோஜனமும் கிடையாது, அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை முறையை வலியுறுத்தினார். பத்திரிக்கைத் துறைகளில் செய்திகளை இறுதி செய்யும் இடங்களில் பிராமினர்களே இருக்கிறார்கள், எந்த செய்தியை உண்மையாக்க வேண்டும், எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்,  பொய்யான தகவல்களை அளித்தும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிட்டு பொய் உரை எழுதுகிறார்கள்.  அதனால் நாட்டிலே எந்தவித முன்னேற்றமோ, மக்களிடம் எந்தவித விழிப்புணர்வோ உருவாகவில்லை !  


         சாதியின் மூலம் இந்துமதம் வறுமை, வன்மையை மட்டும் தீர்மானிக்கவில்லை; தலித்துகளின் விருப்பங்களை, அடிப்படி உரிமைகளைக் கூட தடுக்கிறது, நல்ல உடை அணிய முடியவில்லை , விரும்பிய வாழ்க்கையை வாழ முடிவதில்லை,  விரும்பிய தொழிலை செய்ய முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடிவதில்லை ! தற்போது கூட ராமதாஸ் தலித் வாலிபர்கள் ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ், போட்டு வன்னியப் பெண்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்; அவருக்கு வன்னியப் பெண்கள் மீதோ, வன்னிய  சமூகத்தின் மீதோ அக்கறை இல்லை; தலித்துகள் நல்ல உடை உடுத்துவது அவரது கண்ணுக்கு உறுத்துகிறது, மேலும் தமிழருவி மணியன் இன்னமும் ஒருபடி மேலே சென்று தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் என்று வேதனைப் பட்டு இருக்கிறார் ( நக்கீரன் - 29.12.2012 ) தமிழருவி மணியனுக்கு தலித் தலைவர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு ஆடை அணிவதுப் பிரச்சனை இல்லை; அவர்களைப் பின்பற்றி தலித் மக்களும் நல்ல உடை அணிந்து விட்டால் என்ன செய்வது என்று தான் அவரது ஆதங்கம். மேலும் தருமபுரியில் நடந்த தீவைப்பு சம்பவத்திற்கு சாதி மறுப்பு திருமணம் தான் காரணம் என்று சொல்கிறார்கள்; ஆனால் அங்கெ இருந்த தலித்கள் எல்லோரும் நல்ல நிலைக்கு வளர்ந்தவர்கள்; அவர்களின் வாழும் வாழ்க்கையை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் சாதிக்காரர்கள் செய்த நயவஞ்சகமே இதற்க்கு காரணம் என்பதற்கு சாட்சி அங்கெ கொளுத்தப்பட்ட  வீடுகளில் கொள்ளைப்போன கோடிக்கணக்கான பணம், மற்றும் நகைகளே.

                அப்படியே கூட அங்கே நடந்த கலவரத்திற்கு சாதி மறுப்பு திருமணம் தான் காரணம் என்றால் இந்த கொடுமைக்கு காரணம் சாதியே; அதன் ஊடாக  இந்து மதமே! இந்துமதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறதா? என்றால் இசுலாமிய மதத்திலும் உள்ளது; சீக்கிய மதத்திலும் இருக்கிறது இன்னபிற மதங்களிலும் உள்ளது! ஆனால் இந்துக்கள் சாதிக்கு கொடுக்கும் முக்கியத்தை, மற்றவர்கள் கொடுப்பதில்லை! ஒரு இசுலாமியரிடம் நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நான் இசுலாமியர் என்று சொல்வார்; அதோடு நமக்கு மனநிறைவு கிடைத்துவிடும். மேலும் அவரிடம் நீ சன்னியா? ஷேக்கா? சையதா? காபுக்கா? பிஞ்சாரியா? என்று கேட்கமாட்டோம். ஒரு சீக்கியரிடம் நீ யார் என்று கேட்டால் வர் நான் சீக்கியர்  என்று சொல்வார்; அதற்க்கு மேலும் அவரிடம் நாம் நீ ஜாதா? ரோடாதா? ஜ்பியா? ராம்தாசியா? என்று கேட்கமாட்டோம்  ஆனால் ஒரு  இந்துவிடம் மட்டும் நான் இந்து என்று சொன்னாலும் அவன் என்ன சாதி என்று அறிய ஆசைப்படுகிறீர்கள்; அவன் சாதியை அறியாமல் அவன் எப்பேர்ப்பட்டவன் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள மாடீர்கள். மேலும் சாதிக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை இசுலாமிய மதமோ, சீக்கிய மதமோ சாதியை விட்டு ஒதுக்கி  வைப்பதில்லை; ஆனால் இந்து மதத்தில் சாதிக் கட்டுப்பாட்டை மீறினால் சாதியை விட்டு விளக்கி வைத்து விடுவார்கள். இதிலிருந் புரிந்த கொள்ளலாம் இந்துக்கள் சாதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை. இதைவிட இன்னொரு முக்கிய காரணம்  இருக்கிறது இந்துக்கள் அல்லாதோரின் சாதிக்கு மத ஆதரவு கிடையாது; இந்துக்களின் சாதிக்கு அடிப்படையே  மதம் தான்  ( புரட்சியாளரின் "சாதி ஒழிக்க வழி" நூல்)

           இந்து மதத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், குறிப்பாக ஓர் தலித் மற்றொரு உயர்சாதிப் பெண்ணை திருமணம் செய்வதை ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் இந்து மதத்திலே ரத்த சொந்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்து மதத்தில் சம்பந்தி உறவு என்பது ரொம்ப முக்கியமானது; சம்பந்தியை தவிர்த்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன்  தனக்கு சரி நிகராக அமர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்; அதற்க்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமாக இருக்கமாட்டார்கள் என்று. இதற்க்கு புரட்சியாளர் அவர்கள் மறு கேள்வியை எழுப்பி இருக்கிறார்; அவர் எழுப்பிய கேள்வி தாழ்த்தப்பட்டவர்கள் நாகரிகமற்றவர்கள் என்றால் அவர்களை நாகரிகப்படுத்த ஒரு பாதிரிமார் எடுக்கும் முயற்சியை ஏன் ஒரு இந்து எடுப்பதில்லை? அந்த முயற்சியை ஒரு  இந்து எடுத்தால் அவர்கள் நாகரிகம் அடைவார்களா? மாட்டார்களா? என்று கேட்டு இருக்கிறார். புரட்சியாளரின் கேள்விக்கு இன்றுவரை பதிலே இல்லை. எந்த ஒரு இந்துவும் இதற்க்கு பதில் சொல்லமாட்டான்; தாழ்த்தப்பட்டவர்கள் நாகிரிகமாக இருக்க வேண்டும் அவர்கள் விரும்பவில்லை; அப்படி அவர்களும் நாகரிகம் அடைந்து விட்டால் அது இந்துக்களுக்கு பெரிய ஆபாத்தாக முடியும் அல்லவா! அதனால் அவர்கள் இதற்க்கு பதில் சொல்ல மாட்டார்கள். பள்ளத்தில் விழுந்த ஒருவனை மேலே தூக்க வேண்டுமானால் அவனுக்கு நிகராக நாமும் வளைந்து கொடுத்து நம்முடையை கையை அவனுக்கு கொடுக்க வேண்டும். அப்படித்தான் நாகரிகம் இல்லாத தாழ்த்தப்பட்டவர்களை தூய்மைப் படுத்த வேண்டுமானால் இந்துக்களும் அவர்கள் இருக்கும் சேரிக்கு  செல்ல வேண்டும். அதை இந்துக்கள் விரும்பவில்லை.

              மேலும் இந்து மதத்திலே தான் அதிக சாதிக்கலவரங்கள் நிகழ்கின்றன; மேலும் இந்து மதத்திலே உயர்சாதி என்பது பிராமிணர்கள் என்று சொல்கிறாகள். ஆனால் இதுவரை பிராமிணருக்கும், வன்னியருக்கும் கலவரம் நடந்தது என்றோ, பிராமிணருக்கும், பறையர்க்கும்  கலவரம் நடந்தது என்றோ, கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? நான் கண்டதுமில்லை; கேள்விப்பட்டதும் இல்லை; காரணம் இடைநிலை சாதிகள் மோதிக்கொண்டு இருக்கும்வரை பிராமிணருக்கு எந்தவிதத் தொந்தரவோ, இந்துமதத்திற்கு எந்த ஆபத்தோ கிடையாது; அதனால் தான் ஊருக்கு ஊரு  சாதி; சாதிக்கு பல உபசாதி என்று உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். சாதியை உருவாக்கியது இந்துமதம் என்றாலும், சாதியை மனிதர்களிடம் புகித்தியது பிராமிணர்கள் என்றாலும், பிராமிணர்கள் நேரடியாக கலவரத்திலே ஈடுபடுவது கிடையாது; தம் மதத்திலே நடக்கும் கலவரத்தை எண்ணி வெட்கப்படுவதும் கிடையாது; மாறாக வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறார்கள்; பிராமிணர்கள் நலமுடன் இருக்க இடைநிலை சாதிகளை தூண்டிவிட்டு தாழ்ந்த சாதி மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நிகழ்த்துகிறார்கள்; அதனால்  தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று; பிராமிணர் ஒருவர் நலமுடன் இருக்க வன்னியரும், பறையரும் மோதிக்கொள்ளலாமா? அதனால்  தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று; தம்  மதம் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ, தம் நாடு சிறந்த நாடாக இருக்கவேண்டும் என்ற நோக்கமோ அவர்களுக்கு கிடையாது; தாம் நலமுடன் இருக்கவேண்டும், தம்முடைய ரத்த சொந்தங்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்ற சுயநலம் மட்டுமே அவர்களுக்கு உரியது ! ஒரு சிலருக்காக நாம் பலியாக்க முடியுமா? அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று !

       சாதி, சாதி கலவரங்களை மட்டும் உருவாக்கவில்லை, பரம்பரை பகையையும் உருவாக்குகிறது; எப்படி என்றால் பண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற "ரோஸ்" "கிராமவெல்" போர்களில் தற்கால ஆங்கிலேயர்களின் மூதாதைகள் இருபிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள்; ஆனால் அவ்வாறு போராடியவர்களின் சந்ததிகள், தற்கால ஆங்கிலேயர்கள் பழமைகால போரையே  மறந்துவிட்டார்கள்; பழம் பகையை பாராட்டிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருக்கிறார்கள்; ஆனால் இந்தியாவில் தற்கால பார்ப்பனார்களின் மூதாதைகள் இதர சாதியினருக்கு செய்த கொடுமைக்கு, தற்கால பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாதோரால் பகைமையோடு பார்க்கபடுகிரார்கள் ( புரட்சியாளரின் "சாதி ஒழிக்க வழி" நூல்) இன்னபிற உறர்சாதிக்காரர்களும் தாழ்த்தப்பட்ட மக்களால் பகமையோடு பார்க்கப்படுகிறார்கள் ! நேற்றைக்கு என் தந்தை பகைமை பாராட்டினார்; இன்று நானும் பகைமை பாராட்டுகிறேன்; நாளை என் மகனும் பகைமை பாராட்டுவான் ! இதை தான் சாதி விரும்புகிறது; இந்துமதம் விரும்புகிறது அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று ! பிராமினர்களும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்; தாழ்த்தப்பட்ட சாதியினரான பறையர்களும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்; இன்னபிற இடைநிலை சாதியினரும் தன்னை இந்து என்று சொல்கின்றனர்;ஆனால் இந்துமதம் எல்லோருக்குமான மதம் அல்ல; இந்துமதம் எல்லோருக்குமான மதமாக இருந்திருந்தால் ஒரு இந்து, இன்னொரு இந்து வீட்டிற்கு தீ வைப்பானா? ஒரு இந்துவின் வாயில் இன்னொரு இந்துவே  மலத்தை திணிப்பானா? இப்படிபட்ட அவலங்கள்  இசுலாமிய மதத்திலோ, சீக்கிய மதத்திலோ இன்னபிற மதங்களிலோ நடந்தது உண்டா? இந்துக்கள் அல்லாதோரின் மதங்களில் பிரிவினை இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமைக்கு, சகோதரத்துவக்கு வழி செய்ய அந்த மதங்கள் அடிப்படையாக இருக்கின்றன; ஆனால் இந்துமதத்தின் அடிப்படை வாதமே பிரிவினை தான் அதனால் தான் சொல்கிறேன் சாதி ஒழியவேண்டும் என்று !

         சாதி இன்று பல்வேறு பரிணாமங்களை தொட்டு வளர்ந்து வரும் விஷச்செடி! சாதி ஒழிப்பு இயக்கங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், சனநாயக சக்திகள், மனிதநேய விரும்பிகள் இப்படி எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் இருந்தாலும் சாதியத்தின் மீது இன்னமும் சின்ன சிராய்ப்புக் கூட விழவில்லையே ஏன்? இது ஒரு இயல்பான, எதார்த்தமான ஆதங்கமான கேள்வி! அதற்க்கான பதிலும் இருக்கத்தான் செய்கிறது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களின் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சாதியத்தை சாய்ப்பது அல்லது வேரறுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதே ! ஏற்றுக்கொள்கிறேன், சாயக்கமுடியாது, வேரறுக்க முடியாது ஆனால் வளராமல் தடுக்க முடியுமல்லவா? ஏன் வளர்கிறது? நவீன யுக்தியையும் பயன்படுத்தி  வளர்கிறதே எப்படி?ஏன்? செல்போன், இணையம், ஐ பேட், இவை எல்லாவற்றிலும்  சாதியம் இருக்கத்தானே செய்கிறது. எங்கிருந்து வளர்கிறது? தடுக்க என்ன வழிமுறை இருக்கிறது? என்பது தான் நம்முன் கிடக்கும் மிகப்பெரிய சவாலான கேள்வியும் கூட ! சாதியம் உயிர்ப்போடு இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மூன்று  காரணங்களை முக்கியமாக சொல்லலாம் ஒன்று சுயசாதிப் பற்று, மற்றொன்று மற்றவர்களை அல்லது தம்மை விட பலவீனமானவர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆதிக்க எண்ணம், இன்னொன்று மனிதன் வாயில் மனிதனே மலம் திணித்தாலும் அண்டைவீட்டார், எதிர்வீட்டார் என எல்லோரும் எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பது. இந்த எண்ணங்களை இந்துமதம் ஊக்குவிக்கிறது, பயிற்றுவிக்கிறது என்றுகூட சொல்லலாம். இந்துமதத்தின் வேதநூல்களில் சாதி மலிந்து கிடக்கிறது; அப்படிப்பட்ட வேதநூல்கள் இறைஅருள் பெற்ற முனிவர்களாலும், மகான்களாலும் எழுதப்பட்டது என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது! சாதியின் மீதான நம்பகத்தன்மையை உருவாக்க, அந்த நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்த்துப் போகாமல் இருக்க சாதி கடவுளின் கிருபை என்று இந்து மதம் புரளியை கிளப்புகிறது. அந்த நம்பிக்கையில், கடவுளின் மீதான பற்றினாலும், அச்சத்தினாலும்  இன்று பெரும்பான்மை மக்கள் சாதியை ஆதரிக்கவே செய்கிறார்கள், ஆகவே அவர்கள் பெரும்பான்மையினர் என்று வைத்துக் கொள்வோம், அந்த வகையில்  சாதியை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரே ! ஒருசாரார் நடுநிலை வகிக்கிறார்கள். சாதியை பற்றி பேசாமல் இருந்தாலே சாதி ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். சாதியை ஆதரிப்பவர்களை விட நடுநிலை என்ற போர்வையில் இருப்பவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள் அவர்களின் மவுனம் பெரும்பான்மை கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும்; ஏன் எனில் சாதியை விரும்பவில்லை என்றால் எதிர்க்கலாம்; ஆனால் சாதியை எதிர்ப்பவர்களிடமும் பலன் எதிர்பார்ப்பதால் தான்  அவர்கள் நடுநிலை வகுக்கிறார்கள் என்பதே பொருள்.

      சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன இந்தியாவில் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணற்றில் நீர் எடுக்க முடியவில்லை; பொது சாலையில் நடக்க முடிவதில்லை; நல்ல உடை அணியமுடிவதில்லை; நல்ல வாழ்க்கை வாழ முடிவதில்லை; விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை; அச்சில் ஏற்ற முடியா எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன; இவை அனைத்திற்கும் காரணம் சாதியே !அதோடு மட்டுமில்லாமல் நான் பாதிக்கப்படுகிறேன் என்பதாலோ, என் சாதியினர் பாதிக்கப்படுகின்றனர் என்பதாலோ நான் சாதி ஒழிப்பை பற்றி பேசவில்லை அப்படி பேசினால் அதற்குப் பெயர் சாதி ஒழிப்பும் அல்ல ! உலகில் பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது, ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு புரட்சி இதுவரை நடக்கவில்லை; அப்படியானால் இங்கே தூய்மையான ஆட்சி நடக்கிறதா? அப்படி ஒரு புரட்சி நடக்காத வரை இந்தியா எந்த விதத்திலும் முன்னேற வாய்ப்பே இல்லை, அதுபோலவே இங்கே புரட்சி நிகழவும் வாய்ப்பே இல்லை, ஏனெனில் இங்கே சாதி ரீதியாக ஒன்றுபாடுவார்கள், மத ரீதியாக ஒன்றுபாடுவார்கள் ஆனால் மனிதநேய ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள்; சாதியை வைத்தோ ஒருவனின் நம்பகத்தன்மையை அல்லது அவனது குணாதிசயங்களை தீர்மானிக்கிறார்கள். சாதி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கவில்லை, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது; ஒட்டுமொத்த நாட்டின் பிரிவினைக்கே வித்திடுகிறது; அதனால் தான் இந்தியா இன்னமும் ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தை அடைய கூட அருகதை அற்று கிடக்கிறது! சாதியின் முன் நீதியே மண்டியிடும்  அவலம் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் அரங்கேறா கொடிய நிகழ்வாக இருக்கிறது. இந்தியாவில் ஊழல், கொள்ளை, கொலை, வன்புணர்வு, தீண்டாமைக் கொடுமைகள் இவை அனைத்தும் அன்றாட நிகழ்வாகிவிட்டாலும் ஒட்டுமொத்த தேசமக்கள் ஏன் இதுவரை ஓரணியில் திரளவில்லை? அதற்க்கு காரணம் என்ன? அவர்களுக்கு இடையில் இருக்கும் தடுப்பு சுவர் எது? இவை எல்லாவற்றிற்கும் காரணம் சாதியும்  அந்த சாதியை ஆதரிக்கும் இந்துமதமுமே...ஆகவே ஒருநாட்டின் வளர்ச்சியை தடுக்கும், ஒரு நாட்டின் மக்களை பிரிவினைப்படுத்தும் சாதி வேண்டுமா?

இப்போது சொல்லுங்கள் ....சாதி ஒழிந்தால் நல்லதா?
ஒழியவில்லை என்றால் நல்லதா?

(உதவிய நூல் : புரட்சியாளர் அம்பேத்கரின் "சாதி ஒழிக்க வழி")

- அங்கனூர்  தமிழன் வேலு