செவ்வாய், 27 நவம்பர், 2012

இல்லையா தீக்குச்சி?


உன்னுடைய குடிசைகள்  
கொளுத்தப்படுவதும்,உன்னுடைய 
குரல்வளை  நசுக்கப்படுவதும்
உன்னாலே; உனக்குள் இருக்கும் 
உணர்வுகளை உணராத, ஆதிக்க 
வர்க்கத்திற்கு உணர்த்தாத 
அலட்சியத்தாலே; 

எரிகிற குடிசை எல்லாம் 
சேரியாய் இருக்கிறது; 
அழுது சிவக்கின்ற நிலமெல்லாம்  
சேரியாய் இருக்கிறது;
அழுது குமுறுவதும்  பின் எரிந்த 
சாம்பல் முன் புலம்புவதும் 
உன் வாடிக்கையானது !
அதுவே ஆத்துக்க வர்க்கத்திற்கு 
வேடிக்கையானது 

உன் உயிருக்கு உத்தரவாதம் 
இல்லையேல் வைத்துக்கொள்
இடுப்பில் கத்தி ! 
உன் குடிசையை கொளுத்த 
ஆதிக்க வர்க்கம் தீப்பந்தம் 
தூக்குமானால் உன்னிடம் 
இல்லையா ஒரு தீக்குச்சி?

- அங்கனூர் தமிழன் வேலு 

திங்கள், 26 நவம்பர், 2012

பெரியார் திடலில் சாதி மதங்களுக்கு எதிரான பெருநெருப்பு !



சாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண விலக்குப் பெற்றவர். மாற்றுத் திறனாளிகளுக்கான இணையர் தேடும் மன்றல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் இன்று காலை முதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. பிராமணாள் கபே, ஸ்பெலென்டர் அய்யர், போன்ற சாதி துவேஷங்கள் மீண்டும் வலுப்பெருகிறதே பெரியாரியவாதிகள், சனநாயக சக்திகள் என்ன செய்கிறார்கள் என்ற மனக்குமுறல் இருந்தது. அடுத்து காடுவெட்டி குரு, பொங்கலூர் மணிகண்டன், பழ கருப்பையா போன்ற சனநாயக தீய சக்திகள் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக வாள் சுழற்றுகிரார்களே என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சமும் எனக்கிருந்தது. ஆனால் "கருப்பு சட்டைக்காரர்கள் என்றைக்கும் சளைத்தவர்கள் அல்ல; சாதி மறுப்பு திருமணத்தை நீங்கள் எதிர்த்தால் நாங்கள் நடத்துவோம்" என்று முன்வந்து சவாலுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். 


நிகழ்ச்சிக்கு பிராமிணர் சமூக தோழர்களும் வந்திருந்தது பெரியாரின் சாதி ஒழிப்பு  பயணத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !  நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தது 82 வயதுள்ள சீனிவாசன் என்பவர் தனக்கு 50 மதிக்கத்தக்க துணைதேவை என்று வந்திருந்தார். அந்த பெரியவரின் வருகையில் தான் தந்தை பெரியார் வெற்றி கண்டுள்ளார். கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதல் திருமணத்தில் நம்பிக்கை இழந்து மறுமணம் புரிய வந்திருந்தவர்கள் என அத்தனைப் பேரின் வார்த்தைகளிலும் சாதி மதங்களுக்கு எதிரான நெருப்பு தெறித்தது. வந்திருந்தவர்கள் 99 சதவிகிதம் பேர் மணமகன் / மணமகள் பகுத்தறிவாளராக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை பதிவு செய்தார்கள். அதிக அளவில் மறுமணம் புரிய பெண்கள் வந்திருந்தனர். பெரியாரின் சுயமரியாதை திருமணம் அதன் அவசியம் இன்றைக்கு தேதியில் மக்களிடம் நல்ல எழுச்சியை பெற்று உள்ளது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வாக இன்றோடு நின்றுவிடாமல் தொடர்ந்து நடக்கவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் விரும்பினார்கள். நாமும் விரும்புவோம். சாதி மதங்களை கடந்து மணமகன், மணமகள் தேடி வந்திருந்த அத்தனைப் பேருக்கும் நாமும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே......

சனி, 24 நவம்பர், 2012

என்ன செய்ய போறீங்க?



Add caption
காக்கை குருவி 
எங்கள் சாதி !
மரங்களும் மலர்களும் 
மனிதர்களுள் பாதி !
நீரும், காற்றும் இன்னபிற 
இயற்கையும் மனிதரின் 
உயிர்நாடி ! - இது தமிழ் 
கூறும் நல்லுலகின் 
ஓயாத முழக்கங்கள் !

தருமபுரியில் 
பாதிக்கப்பட்டது 
காக்கையோ குருவியோ 
அல்ல; மரமோ மலரோ 
அல்ல; நீரோ காற்றோ 
இன்னபிற இயற்கையோ 
அல்ல!

மனித இனத்திலே 
பிறக்ககூடாத 
தீண்டத்தகாத இனம் !
இழிதொழிலை செய்தவன் 
இனி முடியாதென்பதா?
ஓலைக்குடிசையிலே 
உருண்டவன் ஓட்டு 
வீட்டிலே வாழ்வதா?
உழைத்து கொடுக்க 
மட்டுமே பிறந்தவன் 
உரிமை என்று 
முழங்குவதா?
ஊருக்கு வெளியே 
ஓரமாய் கிடந்தவன் 
ஊருக்குள் நடப்பதா?
அடிவாங்கவே பிறந்தவன் 
அடங்கமறுத்து, அத்துமீறி 
திமிறி எழுந்து திருப்பி 
அடிப்பதா?

அச்சச்சோ... 
அநியாயமாச்சே
இதுவும் தமிழ்பேசும் 
நல்மாந்தர் எனும் 
ஆதிக்கவர்க்கத்தின் 
எழுதப்படாத, ஏட்டில் 
வரையாத, சத்தமில்லாத 
சாக்கடைத்தனமான 
சர்வாதிகார 
முழக்கங்கள் தான் !

ஈழ வேடமிட்டு; போலி 
கோஷமிட்டு தமிழ்தேசம் 
எனும் சாதியதேசம் கட்டத்
துடிக்கும்  சாதிதமிழ்
தேசியவாதிகளின் ஆசிபெற்ற 
முழக்கங்கள் தான் போலும் ! 
அதனால் தானே இன்னமும் 
கள்ள மவுனம் காக்கின்றனர்?

தமிழன் இல்லாத நாடில்லை ! 
ஆனால் தமிழனுக்கென்று ஒரு 
நாடில்லை! தருமபுரி சாதி 
வெறியாட்டம் ஒட்டுமொத்த 
தமிழ்தேசியத்திற்கு எதிராக 
விடப்பட்ட சவால் அல்லவா?

தம் இறுதி மூச்சுவரை 
மூத்திரப்பையுடன் 
கிஞ்சிற்றும் சமரசம் இன்றி 
சாதி ஒழிப்புக் களத்திலே 
சுழன்றுக் கொண்டிருந்த 
பெரியாருக்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

பசியும் பட்டினியுமாய் 
உழைக்க மட்டுமே தெரிந்த 
பாமரனின் ஒரு நூற்றாண்டின் 
உழைப்பையே சுரண்டியுள்ளனரே;
இது மார்க்சியத்திற்கு விடப்பட்ட 
சவால் அல்லவா?

தமிழ்தேசியவாதிகள்;
பெரியாரியவாதிகள்;
மார்க்சியவாதிகள்;
இன்னபிற சனநாயக 
சக்திகள் தமிழகத்தில் 
நித்தம் அரங்கேறும் சாதி 
வெறியாட்டத்தை எப்படி 
எதிர்கொள்ளப் போகிறார்கள்?
என்ன செய்யப் போகிறார்கள்?
எப்படி தமிழ்தேசத்தை கட்டி 
எழுப்பப் போகிறார்கள்?

முடிவை அவர்களின் 
சிந்தனைக்கே விட்டு 
விடுகிறேன்.....

- அங்கனூர் தமிழன்வேலு

சனி, 17 நவம்பர், 2012

கலப்பு திருமணம் கூடாது !

ஒரு சமூகம் உயிர்ப்போடுத்தான் இருக்கிறது என்பதை இரண்டு விதங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ஒன்று கருத்து பரிமாற்றம் மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம்; அதே வேளையில் இந்த சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கருத்து பரிமாற்றம் மிகவு
ம் அவசியமாகிறது. ஆனால் அந்த கருத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள் எவரும் கவலைப்படுவதில்லை. ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார் "எனக்கு பூச்சரம் கட்டத்தெரியும் என்பதால் காகிகதப் பூவைக் கொண்டு பூச்சரம் கட்டினால் பூச்சரம் மணக்காது" என்று. அப்படித்தான் எனக்கு எழுதத்தெரியும் என்பதாலோ, எனக்குப் பேசத்தெரியும் என்பதாலோ எதை வேண்டுமானாலும் எழுதிவிடமுடியுமா? எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒரு கருத்தோ அல்லது ஒரு எழுத்தோ சமூக பொறுப்பு உள்ளவர்களின் மூலம் சமூகத்தின் பார்வைக்கு செல்லும் பட்சத்தில் அந்த சொல் தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த சொல் சமூகத்தில் எவ்வளவுப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு தவறை தான் இங்கே எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆம் ! சாதி மறுப்பு திருமணத்தை கலப்பு திருமணம் என்று எழுதியும், பேசியும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். கொச்சைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அது எதோ நடக்ககூடாத ஒன்று போலவும் பாவப்பட்ட செயல்போலவும் சித்தரிக்க முனைகிறார்கள்.

இதற்க்கு முதலில் கலப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள அவசியமாகிறது. கலப்பு என்பது இருவைக்கப்படும் ஒன்று இனக்கலப்பு மற்றொன்று பொருட்கலப்பு; இனக்கலப்பு என்பது ஒரு இனம் அதற்க்கு முற்றிலும் வேறுபட்ட இனத்தோடு சேர்ந்து கொள்வது அல்லது உறவை ஏற்ப்படுத்திக் கொள்வதே ஆகும். பொருட்கலப்பு என்பது ஒரு பொருள் அதன் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்ட பொருளுடன் இணைந்து கொள்வது (உதாரணமாக பாலுடன் நீரை கலப்பது) இதுவே கலப்பு ஆகும். அடுத்து இனம் என்றால் என்ன? இனம் எத்தனை வகைப்படும்? (உயிரியலில், இனம் என்பது உயிரியல் வகைப்பாடு மற்றும் பெயரீட்டுத் தரநிலை தொடர்பிலான அடிப்படை அலகுகளில் ஒன்றாகும். பொதுவாக இனம் என்பது, தங்களுக்குள் கலந்து இளம் உயிரினங்களை உருவாக்கக் கூடிய ஒரு தொகுதி உயிரினங்கள் என வரையறுக்கப்படுகின்றது. பெரும்பாலான தேவைகளுக்கு இந்த வரைவிலக்கணம் போதுமானது. எனினும், டிஎன்ஏ ஒப்புமை அல்லது உருவாக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான அல்லது வேறுபட்ட முறைகளிலும் இனம் என்பதற்கு வரைவிலக்கணம் தரப்படுவது உண்டு. இனங்களுக்குள் காணப்படும் சூழல் சார்ந்த இயல்பு வேறுபாடுகள், அவற்றைப் பல்வேறு துணையினங்களாகப் பிரிப்பதற்கு வழி வகுக்கின்றன. (நன்றி wikipedia) சுருக்கமாக சொல்வதேயானால் பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம். அந்த வகையில் அடிப்படையில் மூன்றே இனங்கள் தான் உண்டு. ஒன்று மனித இனம், இரண்டு விலங்கினம், மூன்று தாவரஇனம்.

ஆகவே தான் இனங்களுக்கான வகையறைகள் அல்லது வரையறைகள் இப்படி இருக்கும் பட்சத்தில் சாதி என்பது ஒரு இனமா? மதம் என்பது ஒரு இனமா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. சாதி என்பது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாத அல்லது பிரித்து வைத்து தான் நலமாக வாழ யாரோ ஒரு சிலரால் செய்யப்பட்ட ஒரு கயநெறியே ஆகும். இன்னும் சொல்வோமானால் தந்தை பெரியார் அவர்கள் இதை மனுதர்மம் எனும் தீரக்கருமத்தின் சூத்திரம் என்று சொல்வார். ஒரு சாதியை சேர்ந்த பெண் மற்றொரு சாதியை சேர்ந்த ஒரு ஆண்மகனையோ, ஒரு சாதியை சேர்ந்த ஆண்மகன் மற்றொரு சாதியை சேர்ந்த பெண்ணையோ திருமணம் செய்துகொண்டால் அது கலப்பு திருமணமா? அல்லது சாதி மறுப்பு திருமணமா? தன் குணநலன்களோடு ஒத்த சக மனிதனையே திருமணம் செய்து கொள்ளும்போது அது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து தான் சாதி மறுப்பு திருமணம் என்று பிரகடனம் செய்தார்கள். ஆனாலும் இன்னும் பெரும்பாலான எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள் கலப்பு திருமணம் என்றே எழுதுகிறார்கள். இது தவறான சிந்தனைக்கு இட்டு செல்லும் என்பதை அவர்கள் உணர்கிறார்களா? அல்லது சாதியும் ஒரு இனம் என்ற விஷத்தை மக்கள் மனதில் பதியவைக்க துடிக்கிறார்களா? என்று தெரியவில்லை !

சாதியின் மீது அதீத நாட்டம் கொண்டவர்கள் இதை ஒரு சூழ்ச்சியாகவே பயன்படுத்துகிறார்கள். எப்படியாவது சாதியை மக்கள் மனதில் தக்கவைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடு. சாதியை ஒழிக்கவேண்டும் என்று வலியப் பேசுவார்கள்; வாயடிப்பார்கள் ஆனால் சாதி மறுப்பு என்ற சொல்லைக்கூட உச்ச்சரிக்கமாட்டார்கலாம்; குறைந்தபட்சம் சாதிமறுப்பு என்ற சொல்லைக்கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முனைவார்கள்? ஒருப் பெண்ணோ அல்லது ஆணோ சாதியின் மீது நம்பிக்கை இழந்து சாதிகளை கடந்து திருமணம் செய்துக் கொள்ளும் போது அதை கலப்பு திருமணம் என்று எழுதிக் கொச்சைப்படுத்தி மக்கள் மனதில் அது எதோ வினோதமான செயல் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள். இதுதான் இந்துத்துவத்தின் சூழ்ச்சி, சூது, வெற்றி ! 

சாதியை வலியுறுத்த எப்படி எல்லாம் முயலமுடியுமோ அப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். இவர்கள் சொல்வதுப் போல கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரு ஆட்டை திருமணம் செய்துக் கொள்ளவில்லை; ஒரு கழுதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; எல்லா விதத்திலும் மனிதனுக்கே உரிய குண நலன்களை கொண்ட சகமனிதனைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் ! ஆனாலும் இவர்கள் பார்வையில் அது கலப்பு திருமணமாம். அப்படியானால் ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு கழுதையை திருமணம் செய்துகொண்டால் அதற்க்கு என்ன பெயர் சொல்வார்கள்? சாதி என்ற ஒரு இனமே இல்லாத பட்சத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது எப்படி கலப்பு திருமணம் ஆகும்? 

தங்கள் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மனதில் எப்படி பதியும், எந்த வித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை
அறிந்து கொண்டு எழுதுவதுதான் ஒரு முற்போக்கு சிந்தனையாளரின் சிறந்த பார்வையாக இருக்கமுடியும். இந்த சமூகத்தில் சிந்தனையாளர்கள் முற்போக்குவாதிகளால் தான் பெரும் மாற்றங்கள் நிகழ்த்து உள்ளன. அப்படி உள்ள வேளையில் சாதியை வேரோடு ஒழிக்க வேண்டிய பொறுப்பும் சிந்தனையும் சமூக சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்குமே உரியது. அதை விடுத்து இவர்களும் இப்படியே செய்வார்களேயானால் அது ஒரு பிற்போக்கு சிந்தனையாகவே மாறும். கலப்பு திருமணம் என்றே சொல்லிக் கொண்டு வருவோமானால் சாதியின் மசுரைக்கூட புடுங்க முடியாது. சாதியை ஒழிக்க வேண்டுமானால் முதலில் சாதி மறுப்பு என்ற சொல்லாடலை நடப்பில் கொண்டுவாருங்கள். சொல்லில் கூட சாதிமறுப்பை உறுதி செய்யவில்லை என்றால் சாதியை ஒழிப்பது என்பது இயலாத ஒன்றே.....

- அங்கனூர் தமிழன்வேலு

வெள்ளி, 9 நவம்பர், 2012

சர்வதேசப் பார்வை வேண்டும் !

தமிழகத்தில் இன்றைக்கு தேதியில் ஈழத்தமிழனுக்காக யார் வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டலாம்; கூடிப் பேசலாம்; கொள்கை என்று முழங்கலாம்! முந்தையக்காலங்களைப் போல ஈழம் என்றாலோ. பிரபாகரன் என்றாலோ பொடா, தடா என்ற ஆள்தூக்கி சட்டங்கள் அமுலில் இல்லை ஆகவே
 நாம் பேசலாம். அதனால் என்ன பிரயோஜனம்? பசியில் வாடிவதங்கி; வயிறு சுருங்கி வாழ்வே இருண்டு வாடிக்கிடக்கும் ஈழத்தமிழனின் வாழ்வில், தமிழகத்தில் நாம் போடும் கூட்டங்களோ, ஆயிரம் பேர் அல்ல 5 ஆயிரம் ேர்க் கூடி எழுப்பும் கோஷங்களோ எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிடாது; ஈழப்பிரச்சனை உள்ளூர் அல்லது உள்நாட்டுப் பிரச்சனையில் இருந்து உலக, சர்வதேசப் பிரச்சனையாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. 85 களில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடத்தில் பத்திரிக்கை நிரூபர் ஒருக் கேள்வி கேட்கிறார். அமேரிக்கா எந்த அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவுகிறது? அதற்க்கு தலைவரின் பதில் : இலங்கையில் உள்ள திரிகோண மலை அடிவாரத்தில் ஒரு நிலையான கப்பல்ப்படை தளத்தை அமைத்துக்கொள்ள அமேரிக்கா விரும்புகிறது; அப்படி அமைத்துக்கொண்டு தெற்காசிய நாடுகளையே தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமேரிக்கா விரும்புகிறது; அதற்க்கு இலங்கை அரசின் ஆதரவு தேவைப்படுகிறது; அதனால் அமேரிக்கா இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்று சொல்லி இருக்கிறார். தலைவரின் பதிலின் மூலமே ஈழம் 85 களிலே சர்வதேசப்பிரச்ச்சனையாக உருவெடுத்து இருப்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆகவேதான் சொல்கிறோம் ஈழத்தை சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாருங்கள்; உலக அரங்கில் ஈழப்பிரச்சனையை பேசுங்கள்; உலகத்தின் செவுட்டுக் காதுகளில் கேட்குமாறு உரத்துப் பேசுங்கள் என்று. அன்றி அப்படி இல்லையேல், சர்வதேசக் கண்ணோட்டத்தில் பாராமல் உள்ளூர் அரசியல் பகையை வைத்து அரசியல் செய்ய நினைத்துக்கொண்டு பேசுவோமானால் இங்கே நாம் போடுகிற கூட்டங்களும், கோஷங்களும், கொள்கை முழக்கங்களும், முத்துக்குமார், கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன், விஜயராஜ் போன்ற தியாகிகளின் தியாகங்களும் மண்ணுக்கு இரையாகுமே ஒழிய எம்மக்களின் நீண்டநெடிய லட்சியத்தை அடையவோ, பால்சுரக்காத தாயின் மார்பை சப்பி பால்...பால் என்று அழும் பிஞ்சுகளின் பசியைப் போக்கவோ உதவாது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

இங்கே சிலர் ஈழப்பிரச்சனையை வைத்து பகடி ஆடுகிறார்கள். தமிழர்களை பிரித்தாள நினைக்கிறார்கள்; அவர்கள் வேறு யாருமல்ல, அதிதீவிர தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் என்று தம்மைத்தாமே அடையாலப்படுத்துக் கொண்டு புகழ்ந்துக் கொள்ளும் கோமாளிகள். வேட்டிப் பேச்சிலும் வீண் பொழுதுப் போக்கிலும் நேரத்தை கழித்து தமிழர்களை திரையரங்க இருளில் மூழ்கடித்த காலி டப்பாக்கள். இவர்கள் தான் கனடாவில் விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கோமாளிகள், காலி டப்பாக்கள் நவம்பர் மாதம் துக்க மாதம் எனவே கொண்டாட்டங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மாவீரர்கள் தினம் துக்க தினமா? மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வதையே கேட்போமே... 1989 ஆம் ஆண்டு முதல் மாவீரர்கள் தின உரையில் தலைவர் பேசும் போது, கார்த்திகை திங்கள் நவம்பர் 27 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் சங்கர் என்ற போராளியின் நினைவுதினம் நவம்பர் 27, அந்த தினத்தை தான் நாம் மாவீரர்கள் தினமாக அறிவித்து உள்ளோம். இயக்கத்தின் முக்கியதளபதியாக இருந்தாலும் கடைசி வீரராக பணியாற்றிய போராளியாக இருந்தாலும் எல்லோரும் சமம் என்பதை உணர்த்தவே அனைத்து போராளிகளின் நினைவாக நவம்பர் 27 யை மாவீரர்கள் தினமாக கொண்டாடுகிறோம். எம் இனம் இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது அதற்க்கு இயக்கத்திற்கும், தமிழீழத்திற்கும் தம் இன்னுயிரை நீத்த 1207 போராளிகளின் தியாகமே காரணம். இந்த தியாகிகளின் தியாகத்தால் எம் இனம் உலக அரங்கில் பெருமை கொள்கிறது. இதை இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்று பிரகடனப்படுத்தினார். அடுத்து 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில், எம் இன சுதந்திரத்திற்காக எம் மக்களின் கவுரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை நீத்த இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எம் இதயக்கோவிலில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர்கள் என்று கூறினார். அடுத்து 1993 ஆம் ஆண்டு மாவீரர்கள் தின உரையில் தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.


எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே...
இன்று மாவீரர் நாள் !
நமது தேசவிடுதலை இயக்கத்தின் வரலாற்றுச் சிற்பிகலான, நம்மைவிட்டுப் பிரிந்த மாவீரர்களின் நினைவுநாள். இன்று அடிமைத்தளையும், எவலார்கலாயுமிருந்த நிலையையை மாற்றி நமது தேசத்தை விடுதலைப் பூமியாக்க ஒரு வீரமிக்க போரை இந்த மண்ணின் விடுதலைக்காக ஆற்றிய அம்மாவீரர்களின் நினைவை நெஞ்சிற் சுமந்து போற்றுகின்றோம். பராதீனம் செய்ய முடியாத நமது தாய் மண்ணிற்கான உரிமையை " எங்கள் நாடு எமக்கே உரியது" என்ற கோட்பாட்டுடன் சர்வதேச அளவில் அந்தப் போராளிகள். மாவீரர் நாள் என்பது ஒரு துக்கநாளோ, அழுதுப் புலம்பும் நாளோ அல்ல. அந்நாள் ஒரு புத்துயிர்க்கும் நாள்.பிரதிக்ஞ்சையும் உறுதிப்பாடும் கொண்ட நமது தேசிய எழுச்சி நாள்!
(நன்றி: மாவீரர் உரைகள் நேர்காணல்கள் புத்தகம்)


மாவீரர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அல்லது நியாயத்தை தலைவரின் சொல்லில் இருந்தே பார்த்தோம். அப்படித்தான் மாவீரர்கள் தினம் உருவாக்கப்பட்டது. தமிழ்தேசத்திர்க்கு விலைமதிப்பில்லாத தம் இன்னுயிரை துறந்து மண்ணின் விடுதலைக்கு களமாடிய, இன்னமும் களமாடிக்கொண்டிருக்கிற தியாகிகளை நினைவுகூர்ந்து, எந்த லட்சியத்தை தம் நெஞ்சில் சுமந்தார்களோ, எந்த கொள்கைகாக்க தம் உயிரை நீத்தார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று சூளுரைக்கும் அல்லது உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் நாளே மாவீரர்கள் நாள். மாவீரகள் சாவிற்கு அஞ்சக்கூடியவர்கள் அல்ல. அவர்களின் இறப்பு சாதாரண நிகழ்வும் அல்ல. கண்ணீர் சிந்தி, அழுது புலம்பி அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் கோமாளிகள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

நாம் ஏன் இளையராஜாவை ஆதரிக்கிறோம்? உலகில் பத்துக்கோடிக்கும் மேல் தமிழர்கள் இருக்கிறார்கள்; அந்த பத்துக்கோடிக்கும் அதிகமான தமிழர்கள் அனைவருக்கும் ஈழ விவகாரம் சென்றடைந்ததா? ஈழத்தமிழர்கள் ஆடும் இன்னல்களை கண்டும், கேட்டும் அதனால் அவன் மனம் வெந்து வீதிக்கு வந்தானா? என்பது ஆயிரம் மில்லியன் கேள்விதான்; ஆனால் அந்த பத்துக்கோடிக்கும் மேலான தமிழர்கள் மட்டுமில்லாது தமிழர்கள் அல்லாத பிற மொழித் தோழர்களும் இளையராஜாவின் இசைக்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவேதான் இளையராஜா அங்கெ சென்று இசைநிகழ்ச்சி நடத்தும் போது அது அவரது ரசிகர்கலானவர்களின் கவனத்தில் நிச்சயம் பதியும். எதற்க்காக அந்த நிகழ்ச்சி என்று அவர்கள் ஆராயும் வேளையில் தமிழீழத்தின் நோக்கமும் புலிகளின் நோக்கமும் அவர்களை சென்றடைந்து அது ஒரு பேரெழுச்சியாகவும் மாற வாய்ப்புள்ளது. எனவே தான் இளையராஜாவின் கனடா நிகழ்ச்சியை நாம் வரவேற்கிறோம்; ஆதரிக்கிறோம்.

அடுத்ததாக இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சுதந்திரமான நீதி விசாதரனையை ஐ.நா மேற்கொள்ள வலியுறுத்தியும் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்தில் ‘பிரித்தானியா தமிழர் பேரவை’ சார்பில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை பிரிட்டன் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழுவும் இணைந்து நடத்துகின்றன. இந்த மாநாட்டில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து தி.மு.க வின் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. எம்.பி.கள் தி.ஆர்பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வழக்கறிஞர் கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு லண்டன் சென்று உள்ளனர்.ஆனாலும் தமிழ்தேசியக் களத்தில் நிற்கும் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொது செயலர் வைகோ, கொளத்தூர் மணி, சீமான் போன்ற சிலர் இம்மாநாட்டை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்டால் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்வதனால் அங்கெ நாங்கள் கலந்து கொள்ளமுடியாது என்றும், வழக்கம் போலவே சேற்றை வாரி இறைக்கும் செயலில் முனைப்பு காட்டி உள்ளனர். உலகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய சர்வதேசப் பிரச்சனையை உள்ளூர் அரசியல் பகையை காரணம் காட்டி புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும்...
முனைவர் அ .ப.அறவாணன் அவர்கள் சொல்வதைப்போல இதுநாள் வரையில் தமிழர்கள் மத்தியில் உள்ளது கூட்ட உணர்ச்சியே ஒழிய கூட்டு உணர்ச்சி அல்ல என்பது நூறு சதவிகிதம் பொருத்தமே... தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் கூட்டு உணர்ச்சியை உருவாக்க முன்வரவேண்டும்

தமிழினத்தை ஒடுக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க ஏன் முழு உலகமும் முனைப்பு பெற்று நின்றது? நம் கண்முன் கிடக்கும் இருபெரும் கேள்விகள். அதைப் பற்றி யோசிக்க மறுக்கிறோம்... உடனே நம்மிடம் இருந்து பதில் காங்கிரஸ் காரணம், கருணாநிதி காரணம் என்று மிக எளிதாக சொல்லிவிட்டு அரசியல் செய்ய போய்விடுகிறோம்...

அங்கே தமிழினம் அழிவதற்கு காங்கிரசும் ஒரு காரணம். ஆனால் காங்கிரஸ் மட்டும் தான் காரணம் அல்ல... 30ஆண்டுகால ஆயதப் போராட்டக் காலத்தில் எந்த நாடு புலிகளை ஆதரித்தது. ஈழத்தை அங்கீகரித்து... புலிகள் இயக்கம் என்பது வெகுமக்கள் இயக்கம் தான் என்பதை இதுநாள் வரையில் நம்மால் உலக குருட்டுக் கண்களுக்கு நிருபிக்க முடிந்ததா? குறைந்தபட்சம் இந்திய அளவிலாவது எடுத்து செல்ல முடிந்ததா?

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் - பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து - உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நாட்டிருக்கும் எதிரான இயக்கம் இல்லை என்றபோதிலும் பெரும்பாலான நாடுகளில் இயக்கத்திற்கு தடை உள்ளதே ஏன்? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் போராளிக்குழுக்கள் ஆயுதத்துடன் கிளம்பிவிடுவார்களோ? அதற்க்கு புலிகள் இயக்கம் முன்மாதிரியாக இருந்துவிடுமோ என்று அச்சப்படுகின்றன! எனவே தான் உலக நாடுகளில் தமிழன் எங்கு சென்றாலும் அடிக்கின்றான். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்னமும் இலங்கையில் புலிகள் இயக்கத்திற்கு தடையே கிடையாது. தற்போதுதான் தடை விதிக்கலாமா என்பதையே விவாதித்து கொண்டு இருப்பதாக கேள்வி பட்டேன்... எனவே தான் சொல்கிறேன் நம் பிரச்சனையை மெதுவாகவோ அல்லது உள்ளூரில் வைத்தோ பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் தமிழீழத்தின் அவசியத்தை, தமிழர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை, விடுதலைப் புலிகள் உருவாக நேரிட்ட சூழ்நிலையை உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்துதான் செய்யவேண்டும். ஒன்றுபடவேண்டிய காலம் வந்துவிட்டது; அவசியம் இருக்கிறது. புலிகள் வலுவாக இருந்த காலத்தில் நாம் செய்திருக்க வேண்டிய பணிகள் தான் இவை. ஆனால் அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். உலகில் எந்த ஒரு போராளிக்குழுக்களுக்கும் இல்லாத சிறப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு என்றால், பிரபாகரனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அவரை தாண்டியும் வளர்ந்தது என்பதுதான்; அப்படி ஒரு சிறப்பான கட்டுமானப் பணியை செய்து முடித்த மாவீரன் தான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன். அவரை தாண்டியும் வெற்றிகளை குவிக்க வல்ல மாவீரர்களை உருவாக்கினார். ஆனால் இன்று புலிகள் சிதறிக்கிடக்கிறார்கள்; இல்லை, இல்லை தாயக விடுதலைக்காக வெடித்து சிதறி இருக்கிறார்கள்! மீண்டும் புலிகளே எழுந்து வந்து போராடவேண்டும் என்று விரும்புவது அல்லது வலியுறுத்துவது தவறான கருத்தியல். தமிழீழப் போராட்டம் என்பது இரண்டு கட்டங்களை தாண்டிவிட்டது, அதாவது ஈழத்தந்தை செல்வா தலைமையிலான அமைதிப் போராட்டம் அது நிறைவேறாமல் போகவே தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார் எம் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியும் போராடுவார்கள் என்று. அந்தப் பிரகடனத்தை உள்வாங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம் நடந்தது. மீண்டும் ஆயுதப்போராட்டம் என்பது கடினமான ஒன்றாகவே பார்க்கமுடிகிறது. எனவே அடுத்தக்கட்டமான அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை முன்னெடுத்து அரசியல் போராட்டம் செய்யவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். தெற்கு சூடானுக்கு ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி விடுதலைப் பெற்று தந்ததைப் போல தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்க்கு உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை களத்தில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. தமிழீழம் என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய விடுதலை கோட்பாடு. இருப்பினும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவேண்டிய தலையாய கடமையும் நம் தலையிலே விழுந்திருக்கிறது. அதுதான் இன்றைய அதிமுக்கிய கோரிக்கையாகவும் உள்ளது. திட்டமிட்டு நடைபெறும் இனக்கலப்பை தடுக்கவும் கலாசார சீரழிவை தடுக்கவும் உலக நாடுகளின் கதவை தட்டவேண்டிய கடமை நம்முன் கிடக்கிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்ககூடிய நாம் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஏன் ஆதரித்தோம்? முரண்பாடுகள் இருந்தாலும் உலகப்பார்வைக்கு தமிழீழம் செல்லும் என்ற நம்பிக்கையில் தானே; அதே கொட்ப்பட்டுடன் தான் இன்று பிரித்தானியா தமிழர் பேரவை நடத்தும் மாநாட்டையும் ஆதரிக்கிறோம்; வரவேற்கிறோம்....

எழுச்சித் தமிழர் திருமா சொல்வதைப் போல


"உத்திகளும் செயல்தந்திரங்களும் மாறலாம்;
பாதைகளும் கூட மாறலாம்; ஆனால் ஈழ
விடுதலைக்கான நோக்கமும், இலக்கும்
மாறாது! காலம் தள்ளிப் போகலாம் ;
ஆனால் கடமை மறந்துப் போகாது !
புலிகள் மீண்டும் எழுவார்கள் !
இந்த நம்பிக்கையை வளர்ப்பதும்
தமிழீழ அரசியலை அடைகாப்பதும்
தமிழகத்தின் கடமையாகும் - குறிப்பாக
விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் !
கனவை நிறைவேற்றப் போராடுவோம் !
புலிகளின் கனவை நனவாக்கக் களமாடுவோம் !!


இந்தக் கருத்தியலை விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்லாது தமிழீழத்தை எதிர்நோக்கும் ஒவ்வொருத் தமிழனும் நெஞ்சில் நிறுத்திக் களமாட வேண்டியது கடமையாகிறது.

ஒன்றுப் பட்டு உலக கதவுகளை தட்டுவோம் !!
மாவீரர்களின் ரத்தத்தில் வரையப்பட்ட
தமிழீழத்தை கட்டி எழுப்போவோம் !!


தாயக விடுதலைக்கு தன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு ஆயுதம் ஏந்தாத விடுதலைப் புலியாக, விடுதலை சிறுத்தையாக எம் செம்மாந்த வீரவணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன்...
தமிழர்களின் தாகம் ...தமிழீழ தாயகம்...

-----------------------------
என்றும் அன்புடன்
அங்கனூர் தமிழன்வேலு

எப்படி வந்தது சாதி? ஏன் வேண்டும் சாதி?


எனதருமை நண்பர்களே! 
வன்னியன் என்று சொல்லி 
என்னிடம் இருந்து உன்னையும் 
உன்னிடம் இருந்து என்னையும் 
அன்னியனாக்க விரும்பவில்லை 

வீசும் காற்றிலும்,
பெய்யும் மழையிலும்,
சாதியில்லை!
நாம் சார்ந்து இருக்கும்
இயற்கை யாவும்
பேதம் பார்ப்பதில்லை;
உனக்கென்று தனியாகவும்
எனக்கென்று வேறாகவும்
மழையோ, காற்றோ
அடிப்பதில்லையே!
பிறகென்ன சாதி?
பிறகென்ன மதம்?

ஆண்டுபலவாய் ஆதிக்கம்
செய்பவனுக்கு நாம் அடிமை
சாசனமா எழுதிக் கொடுத்தோம்?
ஏன் இந்த கொலைவெறி?
சாதி இல்லாத இடம்
சொல்கிறேன் பாரய்யா;
உன் நெஞ்சிலும் சமத்துவம்
இருக்கு கேளய்யா!

உன் தாயின் மடியில்;
உன் பசியாற தம்
ரத்தத்தை பாலாக்கிய
அவளது மார்பில்;
தவழ்ந்து வந்த உன்
குழந்தை சிரிப்பில்;
கள்ளமில்லாமல் நாம்
கபடி ஆடிய அந்த
மைதானத்தில்;
உயிரை காக்க உணவாய்
கொள்ளும் நெல்மணியில்
உயிரை விட பெரிதாம்
மானத்தை காக்க உடுத்தும்
துணிமணியில்; உனக்கே
உனக்கான உன் உரிமையில்!
உயிர்ப்பிரியும் வேளையில்
உனக்கு வேண்டிய
செங்குருதியில் உன்னை
சுற்றி எங்கும் சாதியில்லை
எதிலும் சாதியில்லை !

எப்படி வந்தது சாதி?
ஏன் வேண்டும் சாதி?
திரும்ப திரும்ப கேள்
பதில் உனக்கே உன்னிடம்
பிறக்கும்; சமத்துவமாய்
இருந்த நம்மை பிரிக்க
சாதியை கட்டினான்;
அவன் சந்தோஷமாய் வாழ
நமக்குள் சண்டை மூட்டினான்;
சிந்தித்து பாராமல் உன்னை விட
நானே பெரியவன் என்னைவிட
நீ தாழ்ந்தவன் என்று மோதிக்
கொள்வது நியாயமா? சிந்தித்து
பாரடா- உன் சிந்தையில் பதியடா
உனக்கு நானும், எனக்கு நீயும்
தாழ்ந்தவன் அல்ல ; உழைக்கும்
நம்மை விட உயர்ந்தவன்
வேறு யாரும் அல்ல சிந்தையில்
செலுத்து; சீக்கிரம் செலுத்து!

உன் முன்னொன்று பேசுவார்
புறம் உன்னை வீழ்த்துவார்
உனக்குள் இருந்தே உன்
உத்திரங்களை உறுஞ்சுவார்!
போலி வேஷங்களை கட்டுவார்
சாதி கோஷங்களை எழுப்புவார்
பேதம் என்பதை புகுத்துவார்
நம்மை பைத்தியம் என்றே
சொல்லுவார் - தருமபுரி
திரும்புமா? - அங்கெ புது
வசந்தம் பிறக்குமா?
எரிந்தது குடிசையா?
எரிந்தது உன் எதிரியா?
எரிந்தது உன் மானமும்
உரிமையும் அல்லவா ;
எரிந்தது உன் தோழனும்;
உனக்கு தொள்கொடுப்பவனும்
அல்லவா?

எதிரிகளை கவனி - அவன்
எண்ணங்களை கவனி
கள்ளசிரிப்பில் உன்னை
மயக்குவான் காகித உரையில்
உன்னை உசுப்புவான் !
சாதியாய் பிரிந்தது போதும்
நம் பிழைப்பு சாந்தி சிரித்ததும்
போதும் - உழைக்கும் நம் படையை
பெருக்கு - நமக்குள் இருக்கும்
தடையை அடித்து நொறுக்கு !!
------------------------------------------------
தோழமையுடன்.....
அங்கனூர் தமிழன்வேலு