திங்கள், 9 ஏப்ரல், 2012

உலகத் தமிழர்களின் மனசாட்சிக்கும் , தமிழ்நாட்டு தமிழ்தேசியவாதிகளின் மனசாட்சிக்கும் பல கேள்விகளை முன்வைக்கிறார் திருமாவளவன்.....

உலகத் தமிழர்களின் மனசாட்சிக்கும் , தமிழ்நாட்டு தமிழ்தேசியவாதிகளின் மனசாட்சிக்கும் பல கேள்விகளை முன்வைக்கிறார் திருமாவளவன்..................... 

2009யில் அ.தி.மு.க. அணிக்கு திருமாவளவன் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ.தி.மு.க. அணிக்கு திருமாவளவன் சென்றிருந்தால் ஈழத்தில் நம் மீது திணிக்கப்பட்ட போரை தடுத்து நிறுத்தியுருக்க முடியுமா?

அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால் உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்குமா?

அந்த நேரத்தில் அய்யா நெடுமாறன் அண்ணன் வைகோ அவர்களின் வற்புறுத்தலாலும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் திடீரென ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதன் பிறகு என்றைக்காவது ஒரு நாள் அ.தி.மு.க. பொதுக் க்குழுவிலோ, அல்லது செயற்க்குழுவிலோ, ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் போட்டதுண்டா? அல்லது பேசியதுண்டா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காணமல் அ.தி.மு.க. வை ஆதரிக்க வலியுறுத்தியது எது?

1983 முதல் 2012வரை ஈழத்தமிழர்களுக்காக கையில் கிடைப்பதையெல்லாம் கருவியாக்கி களமாடிவரும் திருமாவளவன் தி.மு.க. கூட்டணிக்கு போனதால் துரோகி ஆகிவிட்டார்... ஒரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததால் ஜெயலலிதா ஆதரவாளராகி விட்டாரா?

கம்யுனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்தார் அம்மையார். காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதை எந்த தமிழ் தேசிய சிந்தனையாளரும் கண்டிக்கவில்லை. ஏன்?

புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்ன சொன்னவரோடு , பிரபாகரனை கைது பண்ணிவந்து இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவரோடு, போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவரோடு, அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு, அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு கூட்டணி அமைத்து ஈழத்தை வென்றெடுக்கவேண்டும் என்ற நிபந்தனை வரும் போது அதற்க்கு திருமாவளவன் உடன்படவில்லை என்றால் ஈழத்தமிழர்களுக்கு திருமாவளவன் துரோகம் இழைத்து விட்டதாக பொருளாகுமா?

அந்த அணியில் இருந்தாலும் வைகோ பேசுவார் என்று நம்புகிற நீங்கள், அந்த அணியில் இருந்தாலும் பழ நெடுமாறன் பேசுவார் என்று நம்புகிற நீங்கள், அந்த அணியில் இருந்தாலும் ராமதாஸ் பேசுவார் என்று நம்புகிற நீங்கள்.... இந்த அணியில் இருந்தாலும் திருமாவளவன் பேசுவார் என்று ஏன் நம்பவில்லை?

ஆக பா.ம.க. என்ன முடிவெடுத்தாலும் ஆதரிப்பீர்கள்...... ம.தி.மு.க என்ன முடிவெடுத்தாலும் ஆதரிப்பீர்கள்.......... பழ. நெடுமாறன் என்ன முடிவெடுத்தாலும் ஆதரிப்பீர்கள்............ விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணிக்கு போய்விட்டதால் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பொருளாகுமா?

உங்கள் சிந்தனையில் இருப்பது எது? உங்களை வழிநடத்துவது எது?

அ.தி.மு.க. அணியில் இருக்கிற கம்யுனிஸ்ட் கட்சியோடு, அ.தி.மு.க. அணியில் இருக்கிற ம.தி.மு.க வோடு, அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க. வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம். நடராசனோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் ஆறு மாதம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றிய திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் துரோகி ஆகிவிட்டாரா?

எதிர்க் கூட்டணியில் உள்ளவர்களை நேருக்கு நேர் பார்ப்பதற்கே பயப்படுவார்கள்... ஈழம் என்ற சொல்லைக்கூட கம்யுனிஸ்ட் கட்சியினர் விரும்பாதவர்கள். முதலில் அதற்க்கு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என திருமா வலியுறுத்தினார். ஆனால் தா.பாண்டியன் எதிர்த்ததால் அது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆக ஆனது.

ஈழத்தை வென்றெடுக்க வேண்டும், ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தால் ஈழ ஆதரவாளர்கள் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கலாம். தோற்றால் என்ன? வெற்றி பெறுவது மட்டும்தான் நோக்கமா? மூன்றாவது அணி அமைவதை தடுத்தது எது?

பிரபாகரன் உயிருக்கே ஆபத்து நேரிடும் போலிருக்கிறது என்னால் தேர்தல் வேலை செய்ய முடியாது. நான் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறியவர் திருமாவளவன். பதவி மட்டும் தான் குறியாக இருக்குமானால் இதையெல்லாம் விவாதிருக்க வேண்டியதில்லையே?

2009 இல் தேர்தலின் போது ஈழ ஆதரவாளர்கள் எல்லாரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆனால் திருமாவளவன் பிரச்சாரம் செய்தது வெறும் ஆறு நாட்கள் மட்டும்தான்.

ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே, ஆளும் கட்சிக்கு நெருக்கடியை கொடுப்போம், ஆளும் கட்சியை எதிர்த்து களமாடுவோம் வாருங்கள் இணைந்து போராடுவோம், சேர்ந்து போராடுவோம் என்று கத்தி கதறி பார்த்து விட்டு தானே மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தேன் அங்கு எந்த நெடுமாறனும் வரவில்லையே? அங்கு எந்த வைகோவும் வரவில்லையே? அங்கு எந்த தா.பாண்டியனும் வரவில்லையே? அங்கு எந்த சீமானும் வரவில்லையே? அந்த போராட்டத்தில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே இருக்கிறார்கள்... ஏன் அங்கு வந்து ஆதரவை பதிவு செய்தால் என்ன? அதை பயன்படுத்தி தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கலாமே? முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கேள்வி கேட்க முடிந்த வைகோவால் ஜெயலலிதாவை எதிர்க்க முடியவில்லையே.... அந்த மேடைக்கு வந்தால் ஜெயலலிதா உங்களை அரசியலை விட்டே விரட்டிவிடுவாரா? இல்லை உங்கள் சொத்தை எல்லாம் பிடுங்கி கொள்வாரா?

தமிழ்நாட்டில் ஈழத்தை கூட அரசியலுக்காக பகடைக் காயாக பயன்படுத்தி கொண்டார்களே தவிர உண்மையில் ஈழைத்தை மீட்க்க வேண்டும் என்ற உணர்வு இல்லை என்பது தான் கடந்த காலங்களில் நம்மால் உணர முடிகிறது.....
......................................

உங்களிடம் கேட்டால் நீங்கள் பதில் சொல்லமாட்டீர்கள் என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டார். மனசாட்சி இருக்குமேயானால் சிந்தித்து பாருங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் துரோகி என்று சொல்லி விட்டு போங்கள்..........