வெள்ளி, 22 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 2


"அரசியலில் நேர்மை ! பொதுவாழ்வில் தூய்மை ! லட்சியத்தில் உறுதி !" என்ற முழக்கங்களை கட்சியின் அதிகாரப்பூர்வ முழக்கமாகவே வைகோ அறிவித்திருக்கிறார். அதுபோக வைகோ பற்றி பொதுவாகவே நடுநிலை பேசுபவர்கள் மத்தியில் அவர் நேர்மையானவர், சிறந்த தலைவர், ஊழல் கரை படியாதவர் என்ற பொதுக் கருத்து ஒன்றும் இருக்கிறது. ஆகவே தான் அவரது நேர்மை, தூய்மை, உறுதிகளை நாம் உரசிப் பார்த்ததில் அனைத்துமுமே போலி கோஷங்களாகவே அம்பலப் பட்டு நிற்கின்றன. 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஐந்து உயிர்களை காவு வாங்கி கொண்டுதான் உதயமானது என்பது வரலாறு. தி.மு.க-வில் இருந்து வை.கோபால்சாமி என்கிற வைகோ மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தி.மு.கழகக் உடன்பிறப்புகள் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐந்து பேரும் தீக்குளித்து மாண்டார்கள். அவர்களின் வெந்த உடல்களை பார்த்த வைகோ இனி 'தி.மு.க.வோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை' என்று கர்ஜித்தார், ஆனால் அதே வைகோ தான் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தம் உறவை புதிப்பித்துக் கொண்டார். அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொடா வழக்கில் சிறைபடுத்தபட்ட வைகோவை கலைஞர் சென்று சந்தித்தார். இதற்காகவே காத்திருந்தவர் போல, சிறையில் இருந்து வெளியேறி 28.09.2003 அன்று ஆனந்த விகடனில் "என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரே மனிதர் கலைஞர் தான். அவரால் தான் வார்க்கப்பட்டேன், வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையில் இருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர், அவர் வந்து என்னைப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்து போனது, அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கவே மாட்டேன். காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பக்குவம் இது" என்று மிகவும் உணர்ச்சி பொங்க பேட்டி அளித்திருந்தார். அன்றிலிருந்து இவருக்காக தீக்குளித்து இறந்து போன அந்த ஐந்து பேரின் ஆன்மா இன்றும் கேவிக் கொண்டே இருக்கிறது. அந்த ஐந்து பேரின் மரணம் சொல்லும் செய்தி அரசியல்வாதிகள் நேர்மையானவர்கள் கிடையாது; இனி எந்த அரசியல்வாதிக்காகவும், எந்த தொண்டனும் எந்த தியாகத்தையும் செய்யக்கூடாது என்பதே. 

யாருடையை செயல்பாடுகளை எதிர்த்து யாருக்காக ஐந்து பேரும் உயிர் நீத்தார்களோ, அவர்கள் இருவரும் மீண்டும் ஒட்டிக் கொண்டார்கள். ஆனால் இறந்துப்போன ஐந்து பேரின் குடும்பத்தின் நிலை என்னவானது? இவையெல்லாம் வைகோவின் நேர்மையை பறைசாற்றுகிறதா? 

வைகோவின் நேர்மை கோஷம் போலியானது என்பதற்கு இன்னொரு தகவல் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலே கிடைத்தது. 05.02.1989 அன்று கலைஞருக்கு வைகோ எழுதிய கடிதத்தில் "13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல்" என்று குறிப்பிட்டிருக்கும் வைகோ அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில்  "1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கருணாநிதியின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது வைகோ கருணாநிதிக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கி மேடையில் கர்ஜித்தார் என்பதை தமிழகம் அறியும். தேர்தல் அரசியலுக்காக முதல் நாள் ஒன்று பேசி, மறுநாளே அதற்கு முரணான நடப்பது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால் வைகோ அதற்கும் ஒருபடி மேல்சென்று தன்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்தின் மீதே சேற்றை வாரி இறைக்கிறார். மேலும் அவரது இணையதளத்தில் "சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார். கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார்" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கருணாநிதி கைப்பற்றிக்கொண்ட போதும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய போதும், தமது குடும்பத்திற்காக கலைஞர் சொத்துக்களை குவித்துக் கொண்டிருந்த போதும் வைகோ எங்கிருந்தார்? யாரோடு உறவு வைத்திருந்தார்? யாருக்காக மேடைகளில் கர்ஜித்தார்? என்ற கேள்விகளை நீங்களே எழுப்பிக் கொள்ளுங்கள் வைகோவின் நேர்மை புலப்படும். 

அவரே 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது என்கிறார். ஊழல்கறை படிந்த (?) கருணாநிதியை விழுந்து, விழுந்து 1993 வரை ஆதரித்து கொண்டிருந்த வைகோ ஊழல் கறைபடியாதவர் என்ற கூற்றுக்கு பொருத்தமானவரா? 90களுக்கு முந்தையை தி.மு.க.வின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் வைகோவுக்கும் பங்குண்டு என்பதே உண்மை.

- தொடரும்...        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக