புதன், 20 நவம்பர், 2013

வைகோ நேர்மையானவரா? - குறுந்தொடர் 1


அண்ணன் ஒருவர் இப்படி எழுதி இருந்தார்...

"பாராளுமன்ற தேர்தலில் மதிமுக தனித்து போட்டி - வைகோ 

ஒரு நேர்மையான தமிழின போராளியை மதவாத கட்சியான பாஜக வோடு இணைத்து அவரின் போராட்ட குணத்தை கூர் மழுங்க செய்யும் சதிவலையை விரித்த தமிழருவிமணியணின் கள்ள நாடகத்தை முறியடித்தார் வைகோ"
--------------

முற்றிலும் முரணான கருத்து இது. நேர்மை என்ற பேச்சுக்கெல்லாம் வைகோவின் தேர்தல் அரசியலில் இடமே கிடையாது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல் அரசியலில் வைகோவின் நிலைப்பாடுகளே அதற்கு சாட்சி. தனித்துப் போட்டி என்று இன்றைக்கு நீட்டி முழங்குகிறார் வைகோ. ஆனால் இதே தமிழருவி மணியன் வைகோவை மேடையில் வைத்துக் கொண்டுதான் பா.ஜ.க.வோடு மதிமுக - தே.மு.தி.க. கூட்டணி என்ற திட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்காக பக்கம் பக்கமாக வார ஏடுகளில் கட்டுரை வரைந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் வாதாடினார். கோயம்பேடு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் பேரம் பேசினார். அப்போதெல்லாம் உள்ளூர வைகோ அதை ரசித்துக் கொண்டிருந்தார். உண்மையில் வைகோவின் திட்டம் தான் அது. வைகோ தமிழர்களை கோமாளிகள் என்று நினைத்திருப்பார் போலும், காங்கிரஸ் எதிர்ப்பலையில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் தமிழர்கள் துடுப்பு போடுவார்கள் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. தனித்து தான் போட்டி என்று இன்றைக்கு சொன்னதை தமிழருவி மணியன் தன் திட்டத்தை வெளிப்படுத்திய அன்றே சொல்லி இருந்தால் இத்தனை வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்காது. இத்தனை விமர்சனங்கள் எழுந்திருக்காது. விமர்சனங்கள் கடுமையாக எழவே மணியனை வசதியாக மாட்டிவிட்டுவிட்டு வைகோ தப்பிக்கப் பார்க்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்சமயம் தன் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறார். தன்மீதான விமர்சனங்களுக்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முற்றுப்புள்ளி அருகில் கமா போட்டு மீண்டும் அவரே துவங்கி வைப்பார். அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பி.ஜே.பி. படகில் வைகோ ஏறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமே கிடையாது. பி.ஜே.பியையும், வாஜ்பாயையும் புகழ்ந்து பேசி, பி.ஜே.புயுடன் கூட்டணிக்கான சிக்னலை காட்டியவரே வைகோ தான் என்பதை நினைவுப் படுத்துகிறேன்...

- தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக