செவ்வாய், 26 நவம்பர், 2013

ஏற்காடு - எச்சரிக்கை !

மலைப்பகுதியான ஏற்காடு தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தால் அனலாய் தகிக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோடு, தி.மு.க. நேருக்கு நேர் மோதுகிறது. 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுப்படி ஏற்காடு அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி தான். ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க.வின் வேட்பாளராக சரோஜாவும், தி.மு.க.வின் வேட்பாளராக மாறனும் களத்தில் நிற்கிறார்கள். 

ஏற்காட்டில் தி.மு.க. வெற்றி பெற்றால் கூட அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. அது போலவே மீண்டும் அ.தி.மு.க. வே வென்றாலும் கூட அ.தி.மு.க. வுக்கு கூடுதல் பலம் கிடைத்துவிடப் போவதில்லை. தன்னுடைய பழைய உறுப்பினர் பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதுபோலவே தி.மு.க. வென்றாலும் தி.மு.க.வுக்கு கூடுதலாக ஒரு உறுப்பினர் கிடைப்பதை தாண்டி வேறெந்த பயனும் கிடையாது. ஒருவேளை தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. க்கள் ஆறுபேரையும் விஜயகாந்த் கட்சியை விட்டு நீக்கினால், அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 ஆக குறையும். அந்த சூழ்நிலையில் ஏற்காட்டில் தி.மு.க. வென்றால் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 23 லிருந்து 24 ஆக உயரும். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விஜயகாந்த் அதிருப்தி எம்.எல்.எ.க்கள் ஆறுபேரையும் நீக்குவாரா? என்பது கேள்விக்குறி. 

அப்படி விஜயகாந்த் அதிருப்தி உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்காத பட்சத்தில் தி.மு.க.வுக்கு இந்த வெற்றியால் கூடுதல் உறுப்பினர் கிடைப்பதை தவிர வேறெந்த பயனும் இல்லை. கூடுதலாக உறுப்பினர் கிடைத்தாலும் ஏற்கனவே இருக்கும் 23 உறுப்பினர்களோடு 24வது உறுப்பினராக அவரும் அவைக்கு குந்தகம் விளைவித்தார் என்று அவையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பது ஒருபுறமிருக்கட்டும்... 

நிலவரம் இப்படியிருக்க, ஆளும் அ.தி.மு.க. வுக்கு நேரடியாக எவ்வித கூடுதல் லாபமும் இல்லாத சூழலில் ஏற்காட்டில் அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், என்று என்று படை பரிவாரங்களோடு மல்லுகட்டுகிறது.போதாக்குறைக்கு ஜெயலலிதா வரும் 28ஆம் தேதி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஏன்? வெற்றி பெற்றால் தான் ஆட்சி நீடிக்கும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. 150 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.

இருந்தாலும் ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்வி நீள்கிறது ...

உண்மையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் விரும்பும் ஆட்சியை அவர்கள் நடத்தி இருந்தால் ஏற்காட்டில் படை பரிவாரங்களோடு மல்லுகட்ட வேண்டிய அவசியமே கிடையாது. ஏற்காடு இடைதேர்தல் வெற்றி சான்றிதழ் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகாலம் நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தி இருக்கிறோம். அதற்கு சாட்சி இந்த ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, ஏற்காடு மக்களின் அமோக ஆதரவு" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே அவர்களுக்கு இந்த வெற்றி அவசியமாகிறது. மேலும் அவர்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை தந்திருந்தால் பறக்கும் குதிரையின் இறக்கைக்கும், மூலிகை இலைகளுக்கும் கூட அவசியம் வந்திருக்காது என்பது தனிக்கதை... 

மேலும் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஏற்காட்டில் மீண்டும் அ. தி.மு.க.வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளின் பேரம் பேசும் ஆற்றலை குறைக்க முடியும் என்பதும் அவர்களின் வியூகமாக இருக்கலாம்...

ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றியை காட்டி, வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்க முடியும் என்பதும் அவர்களின் நோக்கமாக இருக்கலாம். "இதோ பாருங்கள் நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறோம் என்று ஏற்காடு மக்களே சொல்லிவிட்டார்கள்" என்று வெற்றி சான்றிதழை காட்டுவார்கள்..! எச்சரிக்கை..!

- தமிழன் வேலு

26.11.2013 அன்று Fesbook யில் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக