குரலற்றவள் தான்
மங்கம்மாள்; ஒட்டுமொத்த
எம் சமூகத்தின் குரலாய்
ஓங்கி ஒலித்திருக்கிறாள் !
தான் விரும்பியதை
விரும்பியபடியே
வினவ முடியாதவள்
தான் மங்கம்மாள்;
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
கொஞ்சம் கூட கூச்சமின்றி
கொளுத்தப்படும் சேரிகளுக்காக
கொதித்து எழுந்திருக்கிறாள் !
வாய்ப் பேச முடியா
மாற்றுத் திறனாளி தான்
மங்கம்மாள்; ஆனால்
மாற்றமே நிலையான
இப்பூவுலகில், மாறாத
கொடுமையாய் எரியும்
ஏழைக் குடிசைககளை
கண்டு கோபம் கொண்டிருக்கிறாள் !
ஊமையின் குரலாய்
ஓங்கி ஒலிக்கிறாள்
மங்கம்மாள்; செவுட்டுத்
தமிழகம் நட்சத்திர
கொண்டாட்டத்தில்
மிதக்குது ; நாயக
பிறந்தநாளை போட்டிப்
போட்டு கொண்டாடுது;
அரிதாரம் பூசியவருக்கு
இன்று தலைப்பு செய்தி;
அநியாயம் கண்டு துடித்த
போராளி மங்கம்மாவுக்கு
கடைசிப்பக்கத்தில் பெட்டி செய்தி !
இதை விட வெட்கம்
உண்டா? இதை விட
கேடு உண்டா?
வீரமங்கை மங்கம்மாவே...
மன்னித்துக் கொள்வாயாக !
அநியாயம் கண்டும் வாய்
பேசா மடந்தைகளும்,
அலறித் துடித்தாலும் காதில்
வாங்கா செவிடர்களும்
நிறைந்த ஊனமுற்றவர்கள்
இங்கே பலர்; அவர்களை
விடுத்து ஊமையின்
குரலாய் ஓங்கி ஒலித்த
உம்மை ஊனமுற்றவள்
என்று அழைத்தமைக்கு !
வீரவணக்கம் சொல்லுகிறேன்
உந்தன் விழித்திரையில்
விழித்துக் கொள்ளட்டும்
எம் சமூகம்; மௌன
குரலாய் ஓங்கி ஒலித்த
உம் பறை முழக்கம்
இந்த மௌன தமிழகத்தை
தட்டி எழுப்பட்டும்!
------------------------
வீரவணக்கத்துடன்
அங்கனூர் தமிழன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக