சனி, 30 மார்ச், 2013

பச்சையான சந்தர்ப்பவாதி தமிழருவி மணியனுக்கு ..!


           
மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் அவர்களே வணக்கம் !
03.04.2013 தேதியிட்ட இந்த வார ஜூனியர் விகடன் இதழில் "இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது" என்ற தலைப்பில் வெளிவந்திருந்த தங்களது கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். அவை வெற்று புலம்பல்களாக மட்டுமில்லாமல் உங்களது பார்ப்பன ஆதரவு மனநிலையை அப்படியே படம் பிடித்து காண்பித்தது. வருணாசிரம தத்துவத்தை ஏற்றுக்கொண்ட காந்தி பேசிய சாதி ஒழிப்பு எவ்வளவு முரண்பாடானதோ, எவ்வளவு பச்சையான சந்தர்ப்பவாதமானதோ   அதைவிட ஒருபடி மேலான முரண்பாடானது, பச்சையான சந்தர்ப்பவாதமானது  நீங்கள் பேசும் தமிழ்தேசியம். பெரியார் எதிர்ப்பு என்று சொல்ல துணிவில்லாத அரைவேக்காடுகள், அறிவுஜீவிகள் திராவிட எதிர்ப்பு என்று சொல்வதைப் போல அல்லது , கருணாநிதி - ஜெயலலிதா எதிர்ப்பை திராவிட எதிர்ப்பு என்று சொல்லும் அடி முட்டாள்களின் புலம்பல்கள்  போன்றது நீங்கள் பேசும் தமிழ் தேசியம். ... சரி கட்டுரைக்கான விஷயத்தை பற்றி பேசுவோம்...

(1) ராஜாஜி 1937 யில் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965 யில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. (2) பள்ளிகளில் இந்தியை புகுத்த தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில் "இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசமைப்பு  சட்டத்தின்  17 வது பகுதியை பசுபிக் கடலில் வீசி எறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்". (3) தி.மு.கழகத்தை 1967 க்குப் பிறகு பெரியாருக்கு பிடிக்கவில்லை அதனால் தி.மு. கழகத்தின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தை பெரியார் எதிர்த்தார். (4) ராஜாஜிக்கு நேருவையும் காமராஜரையும், காங்கிரசையும்  பிடிக்கவில்லை, அதனால் மாணவர் போராட்டத்தை ஆதரித்தார். (5) மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தி அண்ணா ஆட்சியை கைப்பற்றினார். (6) ராஜாஜி பழி தீர்த்து கொண்டார்.என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆகவே உங்கள் வரிகளில் இருந்து எனக்கு சில கேள்விகள் எழுகிறது. அதாவது...  

1965 யில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை என்றால் எதிர்த்தாரா? அதற்க்கு எதிராக இயக்கம் நடத்தி பிரச்சாரம் செய்தாரா? ஆதாரங்களோடு விளக்க முடியுமா? பள்ளிகளில் இந்தியை புகுத்த நினைத்த ராஜாஜி ஏன் இந்தி ஆட்சி மொழி என்ற அரசபைப்பு சட்டத்தை பசுபிக் கடலில் வீசுங்கள் என்று சொன்னார்? ராஜாஜிக்கு ஏன் நேருவையும், காமராஜரையும், காங்கிரசையும் பிடிக்கவில்லை? பெரியாருக்கு ஏன் தி.மு.க. வை பிடிக்கவில்லை? இதுதான் எமக்கு எழுந்த  கேள்விகள். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டால் அங்கே தெரியும் ராஜாஜியின் வருணாசிரம பற்றும், பார்ப்பன மேலாதிக்கமும். ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். அதாவது மலம் அள்ளியவன் பிள்ளை மலம் தான் அள்ள வேண்டும் என்பதுதான் குலக்கல்வியின் நோக்கம். அந்த குலக்கல்வி திட்டத்தை குழி தோண்டி புதைத்தவர் காமராஜர். அதனால் காமராஜரை ராஜாஜிக்கு பிடிக்காமல் போனதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது? அடுத்து 1967 க்குப் பிறகு பெரியாருக்கு தி.மு.கழகத்தை பிடிக்காமல் போனது என்பது விஷமத்தனமான பிரச்சாரம். அதாவது பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெரியாருக்கு தி.மு.கழகத்தை பிடிக்காமல் போனது என்பது போன்ற மாயையை உருவாக்க முயலாதீர்கள்.உங்களுக்கு  தி.மு.க. மீது காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, நம்பிக்கையின்மை  அல்லது பேரறிஞர் அண்ணா மீது  காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இருக்கலாம். அதை நேரடியாக சொல்லாமல் ஒரு மக்கள் இயக்கம், மக்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?  1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா அவர்கள்  திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தவுடன் தி.மு.க. மீதான முதல் விமர்சனமே தந்தை பெரியாருடையது. "கண்ணீர் துளிகள்" என்று கடுமையாக விமர்சித்தார். 1967 மற்றும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வை எதிர்த்து, குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தமைக்காகவே பச்சைத்தமிழர் காமராஜரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதுநாள் வரை தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாதவர்  தந்தை பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஆரியம் தன்னுடைய கோரமுகத்தை வெளிப்படுத்தி கொடி நாட்ட முயன்றமையால் அன்றைக்கு தி.மு.க.வை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். 1967தேர்தலிலே வெற்றிபெற்றவுடன் நேராக அண்ணா பெரியாரை சந்திக்கப் புறப் பட்டார். அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோர் ஒரு காரில் சென்னையிலிருந்து புறப்பட்டனர். அதில்கூட போகவேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு கருத்து வந்தது. இல்லை, கட்டாயம் பெரியாரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னார்.

அண்ணா அவர்கள் முதலில் எங்கே போகிறோம் என்று ஓட்டுநருக்குக்கூட சொல்லவில்லை. திருச்சிக்கு அன்பில்தர்மலிங்கம் அவர்களிடம் மட்டும் தகவல் சொல்லிவிட்டார்கள்.

அண்ணா, வேகமாக விடு காரை! என்றார். அண்ணா அவர்களுடைய ஓட்டுநர் சண்முகம் என்பது பலருக்குத் தெரியும். அவர் மன்னார்குடி உள்ளிக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரே பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதான் முதல்வர் என்று ஆகிவிட்டது. அப்பொழுது அரசு கார் இவருக்குக் கிடையாது. இன்னும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் செங்கல்பட்டைத் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்கிறது. எங்கே போகிறோம் என்று டிரைவருக்குத் தெரியாது. அண்ணா திருச்சிக்குப் போய் சேருகிறவரையிலே அது யாருக்கும் தெரியாது. தன்னுடைய தொண்டரான அண்ணாவை பெரியார் சந்திக்கிறார். அண்ணா அவர்கள் வந்தவுடனே, வாங்க! வாங்க!! என்று அழைக்கின்றார். அய்யா அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் சொல்லுவார். எழுந்து நின்று எல்லோரையும் வரவேற்றுவிட்டு உடனே உட்கார வைத்தார்.அண்ணா அய்யா அவர்களைப் பார்த்து, அய்யா எங்களை வழிநடத்த வேண்டும் என்று சொன்னார். அதற்கென்னங்க, அதற்கென்னங்க என்றே பெரியார் சொல்லுகிறார். வாயில்வேறு வார்த்தையே வரவில்லை. (Source - Viduthalai .in)

பெரியாருக்கும் - தி.மு.க வுக்குமான மனக்கசப்பு என்பது குடும்ப பிரச்சனை போன்றதே ஒழிய பரம்பரை சண்டை அல்ல; இதை பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக ஆன பின்பு தந்தை பெரியாரின் தலைமையில் நடந்த ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவில் பேசும் போது " நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தான்" என்று அப்பன் - பிள்ளை உறவை மிகதெளிவாக உணர்த்தினார். இதில் பெரியாருக்கு தி.மு.க.வை எங்கே பிடிக்காமல் போனது? ராஜாஜிக்கு காமராஜரையும், காங்கிரசையும் பிடிக்காமல் போனதற்கு வேண்டுமானால் பச்சை சந்தர்ப்பவாதமாக இருக்கலாம். ஆனால் பெரியாருக்கும், தி.மு.க. விற்குமான மனக்கசப்பு அப்படி பட்டதல்ல. பெரியாரை விமர்சிக்கும் முன்பாக, மாணவர்களின் இந்தி எதிர்ப்பில் ராஜாஜிக்கு பல்லக்கு தூக்குவதற்கு முன்பாக  "சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றத்தில் தொல் தமிழர்களின் தமிழுணர்வைப் பகடி செய்தார் என்பதையும் . இதையே "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலமைச்சர் இராசாசி கேவலப்படுத்தினார் என்பதையும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ...தி.மு.க வின் பின்புலத்தில் மாணவர் போராட்டம் நடந்ததால் தந்தை பெரியார் அதை எதிர்த்தார் என்று அண்டப் புளுகை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறீர்களே... 1938 ஆம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தான், தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு கொள்கைக்கு மூலம், 1938 ஆம் தந்தை பெரியார் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோர்களின் தியாகம்  தான் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்து. தந்தை பெரியார் அவர்களை எதிர்க்க திராணி அற்றவர்கள், திராவிட எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு கொல்லைப் புறத்தில் பெரியாரை வசைபாடுகிறார்கள். இதன் நீட்சி தான் பெரியாரை தலித் விரோதி என்று சித்தரிக்கும் மனோபாவம். இது பெரியாரை எதிர்ப்பதன் மூலம் பார்ப்பான்களிடம் பொரிக்கி திங்க துடிக்கும் எச்ச புத்தியே. இதை தான் தந்தை பெரியார் சொன்ன விளக்கம்.  "இனப்பற்றோ, மொழியுணர்வோ சமூக பிரஞ்ஞையோ சிறிதுமின்றி பதவி பல்லக்கில் பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதையாகிவிட்டார்கள்" என்று சொல்லும் நீங்களும் அதே பல்லக்கில் தான் பவனி வந்தீர்கள் என்பது நினைவில்லையா? மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வானாளவில் புகழும் நீங்கள், பெரியாரை கொல்லைப்புறத்தில் நின்று வசைபாடும் நீங்கள், இந்தியை வலுக்கட்டாயமாக திணித்த ராஜாஜிக்கு பல்லக்கு தூக்கும் நீங்கள் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப்பற்றி பேச தகுதி ஆனவர் தானா?

அடுத்து ... "தமிழீழ கோரிக்கையோடு தனி தமிழ்நாடு கோஷம் கலந்து விட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்க கூடாது. இந்திய தமிழர்களாக இருப்பதே எல்லா வகையிலும் உயர்ந்தது" என்று கூறும் உங்களுக்கு கடைசி மனிதனின் கேள்வியாக சிலவற்றை கேட்கிறேன். எம் அப்பாவி தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் சுட்டுக் கொள்ளப்படும் போதும்  வாய் மூடி மவுனியாக இருக்கும் இந்திய அரசின் அங்கமாக அதாவது இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வஞ்சிக்கப்பட்டும் இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? காவிரி நீர் மறுக்கப்பட்டு 22 விவசாயிகளை  தற்கொலை செய்ய தூண்டிய இந்திய தமிழர்களாக இருப்பது தான் உயர்ந்ததா? ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் எவ்வளவு அவசியமோ, அப்படிப்பட்ட அவசியம் தமிழக தமிழர்களாகிய எங்களுக்கும் தனி தமிழ்நாடு வேண்டும் என்பதில் இருக்கிறது. அதற்கான அவசியத்தை எங்களை விட இந்தியாவே அதிகமாக உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணைந்து வாழ விரும்பியதால் தான் நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொண்டோம். தமிழர்களுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் செயல்படுகிறது என்றால், நரேந்திர மோடியை பிரதமராக்கிவிடுவோமா? மம்தா பானர்ஜியை பிரதமராக்கிவிடுவோமா? முலாயம் சிங்கை பிரதமராக்கிவிடுவோமா? ஏனெனில் அவர்கள் தான் தமிழீழத்தை தங்கத் தாம்புலத்தில் வைத்து வழங்கப் போகிறவர்கள் (?) தமிழக தமிழர்களாகிய எங்களை தங்கத் தட்டில் வைத்து தாங்கப் போகிறவர்கள் (?) ஆளும் காங்கிரஸ் மட்டுமல்ல, இதுவரை, இதற்கு முன்னர் ஆண்ட காங்கிரசும் தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டது என்பது அரசியல் அறிவுஜீவியான உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி? சேற்றில் பூத்த செந்தாமரையாக வாழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். அவர் ஒருவரை நாங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம். நாங்கள் இனிமேலும்  இந்திய தமிழர்கள் என்று கூட தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. 1983 ஆம் ஆண்டில் இருந்தே ஈழத்தமிழர்களுக்கு இரண்டகத்தை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லையே. அப்போதெல்லாம் அதாவது 2009 பிப்ரவரி 23  ஆம் தேதி வரை காங்கிரசில் நீங்கள் சொன்னது போல "இனப்பற்றோ, மொழியுணர்வோ சமூக பிரஞ்ஞையோ சிறிதுமின்றி பதவி பல்லக்கில் பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரராக தானே இருந்தீர்கள். திடீர் என்று ஈழப்பற்று எங்கிருந்து வந்தது? இது குறித்து தமிழருவி மணியன் இப்படி எழுதி இருக்கிறாரே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் தோழர் வே.மதிமாறன் அவர்களிடத்தில் கேட்டேன். அவர் ஒற்றை வரியில் சொன்னார். " தமிழர்கள் உரிமை  போராட்டங்கள் குறித்து ஆதரிக்கவோ, எதிர்க்கவோ தமிழருவி மணியன் அவர்களுக்கு  சிறிதும் யோக்கிதை இல்லை; காங்கிரசில் இருக்கும் பிற்போக்கு கருத்து உடையவர்களை கூட விமர்சிக்க தகுதி அற்றவர். பச்சை சந்தர்ப்பவாதி" என்று கூறி முடித்து கொண்டார். தமிழீழத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள். கடைசியாக " இன்று மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் அப்பழுக்கற்ற காந்திய போராட்டம் என்று இரண்டகம் செய்ய முனையாதீர்கள். ஏனெனில் எங்கள் அகராதியில் காந்தி என்றாலோ இரண்டகம் என்றுதான் பொருள்.

இன்று மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம்...
ஆதிக்கத்தை அதன் எதிரில் நின்று எதிர்த்த 
தந்தை பெரியாரின் போராட்டம்;
நடராசன் - தாளமுத்து அவர்கள் உயிர் தியாகம் செய்து 
ஊட்டிய விடுதலைப் போராட்டம் ..!

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்;
காங்கிரசின் துரோகத்தை மன்னிக்கவும் மாட்டோம் ..!


நன்றி வணக்கம் !

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக