சனி, 9 மார்ச், 2013

நல்லிணக்கம் என்பதே நச்சு சொல் ..!

எல்லாவற்றையும் மறந்து விடுவோம்;
சகோதரத்துவத்துடன் பழகுவோம்,
சமத்துவமாய் வாழ்வோம்,
நல்லிணக்கத்தைப் பேணுவோம் !

ஊர்த்தெருவில் இருந்து வந்து, 
வாய் இனிக்க இனிக்க இப்படித்தான்
பேசினான் அவன்...

என்னையாடா... நல்லிணக்கத்திற்கு
அழைத்தாய்; கொஞ்சம் பொறு...
அதற்கு முன்...

பாய்ந்து வந்த கல்லுக்கும்,
பட்டென்று சிதறிய கண்ணாடிக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

அடித்த கைகளுக்கும்,
அழுது சிவந்த கண்களுக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

கிழிந்த இதயத்துக்கும்
கிழித்த ஈட்டிக்கும்
நல்லிணக்கம் பேச முடியுமா?

கொளுத்தப்பட்ட சேரியில்
இன்னும் குழந்தை கூட
சிரிக்கவில்லை அதற்குள்
நல்லிணக்கமா?

எப்படி???

சிவந்த கண்களோடு
கிழிந்த இதயத்தோடு,
பசித்த உடல்களோடு
இரண்டகத்தின் வலிகளோடு
அவதூறுகளை நெஞ்சில்
சுமந்து கொண்டு, அவமானங்களால்
அனுதினமும் நொந்துகொண்டு...
அத்தனையும் மறந்துவிட்டு
உம்மோடு கரம் பற்றவேண்டுமா?

அழுகின்ற எங்கள் கண்களை
துடைக்க உன்னிடம் என்ன இருக்கு?
கிழிந்த இதயத்திற்கு மருந்திட
உன்னிடம் என்ன இருக்கு?

கொளுத்தப்பட்ட சேரியின் கோர
வடிவை கண்டு கதறி அழும் எங்களை
ஆற்றுப்படுத்த உன்னிடம் என்ன இருக்கு?
எல்ல்லாவற்றிற்கும் மேலாக சமத்துவம்
பேச உனக்கு என்ன யோக்கிதை இருக்கு?

இன்றைக்கு நல்லிணக்கம் என்பது
நாளைக்கு நயவஞ்சமாய் மாறாது
என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கு?

இன்றைக்கு புரிந்துணர்வு என்பது
நாளைக்கு பச்ச துரோகமாய் மாறாது
என்பதை உன்னால் எப்படி உறுதியாய்
சொல்ல முடியும்?

நம்பிக்கை என்பாயா?
காந்தியை நம்பினோம்; காந்தி
பூமி என்று சொல்லும் இந்த தேசத்தை
நம்பினோம்..இரண்டகத்தை தவிர வேறேதும்
மிஞ்சவில்லை; இழிவுகளை சுமந்து
அவமதிப்புகளில் உழன்று, உழன்று நம்பிக்கை
என்பதையே இழந்துவிட்டோம் !

நல்லிணக்கம் என்பதே நச்சு சொல்
என்பதை உணர்ந்துகொண்டோம் !

சாதிகளுக்குள் நல்லிணக்கம்
உண்டாக்க முடியாது; வேண்டுமானால்
மனிதர்களுக்குள் நல்லிணக்கம்
உண்டாகலாம்; அதற்கு நீங்கள்
மனிதர்களாய் மாற வேண்டும்;
எங்களை மனிதர்களாய் மதிக்க வேண்டும் !

சாதி உடையாமல்...
இங்கே நல்லிணக்கமும் இல்லை;
உங்களிடம் நல்ல மனமும் இல்லை !

சாதி உடையாமல்...
இங்கே சமத்துவமும் இல்லை;
எங்களிடம் சமாதானமும் இல்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக