சனி, 9 மார்ச், 2013

என்ன "மசுருக்குடா"... உங்களுக்கு கோபம் வரவேண்டும்?

ஒரே தேசத்தில் பிறந்திருந்தாலும்,
அருகருகே வாழ்ந்து வந்தாலும் நமக்குள்ளான 
நட்பு அவ்வளவு சுகமானதாக இருக்கவில்லை ! 

சுகமாக இல்லை என்றபோதும் வலியின் 
வேதனையை அது என்றைக்கும் மறைத்ததில்லை; 
அந்த பிளவுக்கும், வலி நிறைந்த வாழ்வுக்குமான 
காரணத்தை எண்ணி என்றைக்காவது ஒரு கணம் 
வருந்தியதுண்டா? 

நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாய், ஊருக்கு
ஓரத்தில் சேரியில் இருக்கும் காட்சி என்றைக்காவது
உங்கள் மனசாட்சியை உறுத்தியிருக்கிறதா?

எம் பாட்டன்கள், தீண்டப்படாதவர்கள் என்று
உங்களை போன்றோராலே இழிக்கப்பட்டனர்;
அதை பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்;
அதனால் உங்கள் நெஞ்சங்களில் கொஞ்சமாவது
சலனம் உண்டாகி இருக்கிறதா?

எம் தகப்பன்களுக்கு கசையடி கொடுத்த
உங்கள் தகப்பன்களை மனதிற்குள்ளாவது
எதிர்த்து பேசியிருக்கிறீர்களா? அல்லது
கனவிலாவது உங்கள் தகப்பன்களை
எதிர்த்து வாதம் செய்திருக்கிறீர்களா?

கசையடி என்கிறேனே, அதன் வலியை
உங்களால் உணரமுடிகிறதா? ஒருவேளை
உங்களைவிட வலியவர்கள் உங்களை வதைக்கும்
போது அந்த வலியில் எங்களை கண்டதுண்டா?

பொதுக்குளத்தில் நீர் அருந்திய குற்றத்திற்கு
உங்கள் கைகள் வெட்டப்ட்டதுண்டா? பொது
சாலையில் செருப்பு அணிந்து சென்றமைக்கு
உங்கள் கால்கள் துண்டிக்கபட்டதுண்டா?

கையளவு அறையில் கால்நீட்டி படுக்க
முடியாமல் அவதிப் பட்டதுண்டா? - பலரும்
சூழ்ந்து நிற்க, நீங்கள் அமர்ந்த நாற்காலியில் இருந்து
எழச்சொல்லி துன்புறுத்திய அவமதிப்பின் வலியை
உணர முடிகிறதா?

வயது முதிர்ந்த உங்கள் தந்தையை,
வயது இளைய சிறுவன் பெயர்சொல்லி
ஒருமையில் அழைக்கும்போது உண்டாகும்
வேதனையை எண்ணிப் பார்க்க முடிகிறதா?

சாணிப்பாலின் சுவையை எண்ணிப்பார்க்க
முடிகிறதா? - மனித மலத்தின் சுவையை
கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

மேற்சொன்ன எதிலும் நீங்கள் பங்கெடுக்கவில்லை;
எண்ணியதில்லை, வருத்தப்படவில்லை;
கோபப்படவில்லை; உணரவில்லை என்கிறபோது
இந்த இழிவுகளுக்கெல்லாம் பெயர்தான் சாதி
என்கிறபோது...

சாக்கடையிலும் அசுத்தமான சாதி அமைப்பினால்
நாங்கள் துன்பட்டிருக்கிறோம் என்கிறபோது,
அந்த அமைப்பை உடைத்தெறிவோம் என்று
சொல்லும் போது மட்டும் "என்ன மசுருக்குடா"...
உங்களுக்கு கோபம் வரவேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக