புதன், 29 அக்டோபர், 2014

அரசியலும்... அரசியல் பண்பாடும் ...

கடந்த மாதம் தன் பேரன் – பேத்திகளின் திருமண அழைப்பிதழை திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, மருத்துவர் ராமதாஸ் நேரில் சந்தித்து கொடுத்தார். தேர்தல் அரசியலில் வெவ்வேறு அணிகளில் அவர்கள் இருப்பதால், அந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பாமக திமுக அணிக்கு வரலாம் என்றும் செய்திகள் வெளியாயின. இருப்பினும், அரசியல் நாகரிகம் கருதியே, இந்த சந்திப்பு நடந்தது என்று கூறிய ராமதாஸ், கலைஞர் “அரசியல் நாகரிகம் தெரிந்தவர்” என்று புகழுரை வழங்கினார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ராமதாஸ் குறித்த கேள்விக்கு, “மருத்துவர் ராமதாஸ் அரசியல் பண்பாடு மிக்கவர்” என்று பதில் கூறியுள்ளார். இவர்கள் பேசும் அரசியல் பண்பாடு எந்த அளவிற்கு நேர்மையானது என்பதை பார்ப்பதற்கு முன்பாக தமிழகத்தில் அரசியல் ஒழுக்கமோ, பண்பாடோ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.  


மேற்குலக நாடுகளில் எதிர் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் கொள்கை ரீதியாக மிக காரசாரமாக விவாதித்து கொண்டாலும், அவர்களிடையே நட்புறவு இருக்கிறது. எதிர்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெற்றி பெற்றுவிட்டால் வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறி கொள்கிறார்கள். இந்தியாவை பொருத்தமட்டில் வடநாட்டில் அந்த பண்பாடு குறைந்தபட்சமேனும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொருத்தமட்டில் அரசியல் நாகரிகம் சிறிதளவு கூட கிடையாது. உறவினர்களாக இருக்கின்றவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்றால் அத்தோடு அவர்கள் உறவை மறந்துவிட வேண்டியது தான். எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் நிரந்தர எதிரிகளாகி போகிறார்கள். தலைவர்களை பொருத்தமட்டில் தேர்தலுக்காகவும், பதவிக்காகவும் “அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர பகைவனும் கிடையாது” என்று வாய் ஜம்பம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் தலைவர்களின் பேச்சை கேட்கின்ற தொண்டர்கள் தான் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாற்றுக் கட்சியினரோடு அரசியல் கடந்த உறவை தொடர்வது என்பது முடியாததாகவும், கட்சிக்கு இழைக்கும் துரோகமாகவும் பார்க்கப்படுகிறது. அதுமாத்திரமல்லாமல், கொள்கை சார்ந்த விவாதங்கள் அறவே அற்றுப்போய்விட்டு, தனிநபர் தாக்குதலும், வெறுப்பு பிரச்சாரமும் மிக தீவிரமாக  முன்னெடுக்கப்படுகின்றன.


அதன் நீட்சியாக கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரால் நடத்தப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்கள், அதனால் தர்மபுரியில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் வரலாற்றில் மறையாத அவல சாட்சியங்கள். இன்றைக்கு அரசியல் நாகரிகம் என்றெல்லாம் வாய்ஜாலம் அடிக்கும் ராமதாஸ், தாழ்த்தப்பட்ட மக்களை பற்றியும், விடுதலை சிறுத்தைகளை பற்றியும் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களை பற்றியும் பரப்பிய அவதூறுகள் ஏட்டில் எழுதமுடியாதவைகள். அதோடு, இன்று ராமதாஸ் யாரை அரசியல் நாகரிகம் தெரிந்தவர் என்று சொல்கிறாரோ, அதே கலைஞரையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும் மிக கேவலமாக திட்டி பேச வைத்தவர். சாதி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று காடுவெட்டி குருவை பேசவைத்து புளங்காகிதம் அடைந்தவர். தனிநபர் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு சிறிதும் பொருத்தமில்லாத மனிதராக, சினிமா ரவுடியை போல பேசிக்கொண்டு திரிந்தார். செல்லும் இடமெல்லாம் வெறுப்பு பிரச்சாரங்களை விதைத்து அதன்மூலம் தனது சாதிய அரிப்புக்கு சொரிந்து கொண்டார். அவர்களின் வன்முறை பேச்சுக்களால் அன்றைக்கு தமிழகம் அசாதாரண சூழலை சந்தித்தது.

கொள்கையை கடந்து, தனிப்பட்ட முறையில் கலைஞர் மீதும், திருமாவளவன் மீதும் வன்மம் கொண்டு விமர்சனங்களை வீசிய, ராமதாஸ் இன்று திமுகவோடு குசலம் கொஞ்சுவது சந்தர்ப்பவாதமா? அரசியல் நாகரிகமா? என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். திமுகவோடு, பாமக கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்கிற பொறாமையில் நான் இப்படி எழுதுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் நடுநிலை பண்போடு, அரசியல் ஒழுக்கத்தை விரும்புகிற எவருக்கும் என் எழுத்திலும், எண்ணத்திலும் இருக்கின்ற நேர்மை புலப்படும் என்று நம்புகிறேன். செல்லும் இடமெல்லாம் தரம் தாழ்ந்த ரவுடியை போல, எழுச்சி தமிழரை விமர்சனம் செய்தபோது கூட, ஏட்டிக்குப் போட்டி, லாவணி பாடாமல் ஜனநாயக சக்திகளின் துணைகொண்டு சாதியவாதிகளின் சதிகளை முறித்தவர் திருமாவளவன். தன்னை மிக கேவலமாக விமர்சித்த போதும் கூட “இனநலன், மொழிநலனுக்காக ராமதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்ற தயார்” என்று அறிவித்து அரசியல் நாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றவர்.

பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்த அரசியல் நாகரிகம் கொஞ்சமும் தற்போதைய தமிழக அரசியலில் கிடையாது. கொள்கைசார்ந்து ராஜாஜியை மிக கடுமையாக விமர்சனம் செய்த தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் ராஜாஜியோடு நட்புறவை கொண்டிருந்தார். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்றார் பேரறிஞர் அண்ணா. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை விமர்சனம் செய்த பேரறிஞர் அண்ணா, தேர்தல் வெற்றிக்கு பின்னர், தன் அமைச்சரவை சகாக்களை அழைத்துக்கொண்டு காமராஜரை சந்தித்து, தம் அரசுக்கு ஆலோசனை வழங்க கேட்டுக் கொண்டார். முந்தைய காலத்தின் அரசியல் நாகரித்தை எடுத்துக்காட்டும் இதுபோன்ற ஏராளமான சான்றுகளை காட்டலாம். ஆனால் தற்போதைய அரசியலில் ராமதாஸ் போன்ற பதவி மோகம் பிடித்தவர்களால் அரசியல் நாகரிகமும், பண்பாடும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வெகுகாலம் ஆகிறது. பெரியாரிடமும், அண்ணாவிடமும், காமராஜரிடமும் இருந்த அரசியல் பண்புகளை இன்று அண்ணன் எழுச்சி தமிழரிடம் காண்கிறேன்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்திருகிறார். திமுகவோடு இருக்கின்ற காரணத்தினால், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீதோ, அதிமுக வோடு இருக்கின்ற காரணத்திற்காக கலைஞர் மீதோ, தனிநபர் விமர்சனங்களில் என்றைக்கும் ஈடுபட்டத்தில்லை. அதேநேரத்தில் கொள்கை ரீதியாக அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறோம். "ஜெயலலிதா ஒரு அதிதீவிர இந்துத்துவ அடிப்படைவாதி" என்று வெளிப்படையாக எழுச்சிதமிழர் விமர்சித்தார். பின்னாளில் அவரது பேச்சுக்கள் நூலாக தொகுக்கப்பட்ட போது, அந்தநூலை அவரிடம் வழங்கி, அவரை பற்றி குறிப்பிட்டிருக்கும் அந்த பக்கத்தையும் பிரித்து காண்பித்த மாண்பாளர் அண்ணன் திருமாவளவன். அதேபோல கலைஞர் அவர்களோடும் கொள்கை ரீதியாக முரண்பட்டிருக்கிறோம். தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்றதும், திமுக அணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டுயிட்டு வென்ற தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் எவ்வித வெறுப்பு விமர்சனங்களையும்  முன்வைக்கவில்லை. தமிழக அரசியலில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல்வாதியையும் தரம் தாழ்ந்து விமர்சிக்காத நிகழ்கால தலைவராக அண்ணன் எழுச்சி தமிழர் இருக்கிறார். அதனாலே ஜனநாயக சக்திகளின் அன்புக்கு உரியவராக திகழ்கிறார். தேர்தல் அரசியலுக்காக முன்னொன்றும், பின்னொன்றும் பேசித் திரியும் சராசரி அரசியல்வாதிகளை போல அல்லாமல், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களின் வழிநின்று கொள்கை சார்ந்து வழி நடத்தி வருகிறார். தேர்தல் அரசியலுக்காக எப்படிப்பட்ட இழிவான அரசியலையும் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகள் இருக்கின்ற இன்றைய சூழலில், உள்ளதை உள்ளபடி, பட்டவர்த்தனமாக பேசும் பக்குவத்தை அவரும் பெற்றிருக்கிறார். அவரது தம்பிகளுக்கும் அந்த பண்பை கற்றுக் கொடுத்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ஈழப்படுகொலை, உச்சகட்டத்தில் இருந்த சூழலில், திமுக அணியில் இருந்துகொண்டே,  அதிமுக அணியில் இருந்த மதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகளோடு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். கூட்டணியை பற்றி கவலைப்படாமல், தேர்தலை பற்றி கவலைப்படாமல் ஈழ மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்ற அதீத உந்துதலில் எடுக்கப்பட்ட  துணிச்சலான முடிவு அது. தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தனி அணி கட்டவும் துணிந்தவர். அணித்தலைவராக யாராவது இருந்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கு பின்னால் நிற்கிறேன் என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார். தலைமை பதவியின் மீது மோகம் இல்லாத தலைவராக எழுச்சி தமிழர் இருக்கிறார். அரசியல் நேர்மையும், கொள்கை பிடிப்பும் உள்ள தலைவராக திருமாவளவன்  இருந்தாலும், அதை அங்கீகரிக்கவோ, பாராட்டவோ யாரும் முன்வராத மோசமான அரசியல் சூழலே நிலவிவருகிறது. 

அரசியல் நாகரிகம் என்பது தன்மானத்தையும், சுயமரியாதையையும் உள்ளடக்கியது தான். ஆனால் இன்றைய சூழலில் அது தன்மானத்தையும், சுய மரியாதையையும் இழந்துவிட்டு, ஓட்டரசியலையும், சந்தர்ப்பவாதத்தையும் பிரதானமாக கொண்டிருக்கிறது என்பது தான் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. ராமாதாஸ், கலைஞரை பாராட்டியதும், ஸ்டாலின், ராமதாசை பாராட்டியதும் ஓட்டரசியல் மற்றும் சந்தர்ப்பவாத நோக்கம் கொண்டது தான். இதில் அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இருப்பதாக நான் கருதவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக