வெள்ளி, 10 அக்டோபர், 2014

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : சிறையில் ஜெ.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதோடு ஊழல் செய்தவருக்கு ஆதரவாக அனுதாப அலையை உருவாக்கும் முயற்சியும் சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் நடந்துகொண்டு வருகிறது. இந்த தீர்ப்பு ராஜபக்சேவின் சதி என்கிறார்கள், கன்னடர்களின் பழிவாங்கும் நோக்கம் என்கிறார்கள். மக்கள் சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு உலகில் எல்லா நாடுகளிலும் தண்டனை தான் வழங்குவார்கள். அதே நடைமுறைதான் இப்போதும் நடந்திருக்கிறது. இதில் சதி செய்வதற்கோ, பழிவாங்குவதற்கோ என்ன இருக்கிறது? தவறு செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது, தான் நிரபராதி என்று நிரூபிப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரியும் ஓலமும்? படிப்பறிவற்ற, ஆர்வக்கோளாறு தொண்டர்கள் அன்புமிகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம். படித்த அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்காரர்கள் செய்யும் அலப்பரைகள் தமிழர்களை உலகளவில் கோமாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி வழங்கினார், தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார் என்பன போன்ற சப்பை வாதங்களை முன்வைக்கிறார்கள். நல்லாட்சி செய்வதற்கும், தமிழர்களின் உரிமைகளை பெற்று தருவதற்கும் தானே அவருக்கு முதல் அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை ஏழு கோடி தமிழர்களும் கொடுத்தார்கள். "நல்லாட்சி செய்வதும், உரிமைகளுக்காக போராடுவதும் ஒரு மாநில முதல்வரின் தலையாய கடமை தானே ஒழிய, வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கான சிறப்பு தகுதிகள் அல்ல" என்பதை அந்த அபத்தவாதிகள் எப்போது புரிந்து கொள்வார்கள்? மிக்சி கொடுத்தார், பேன் கொடுத்தார், கிரைண்டர் கொடுத்தார், லேப்டாப் கொடுத்தார் என்கிறார்கள். எல்லாம் கொடுத்தார். யார் பணத்தில் இருந்து கொடுத்தார். மக்கள் வரிப்பணத்தில் இருந்துதானே. இப்படி அபத்தங்களை எல்லாம் கேட்கும் போது சதுரங்கவேட்டை படத்தில் வரும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது. “ஏழையாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும், பணக்காரனாக இருந்து நல்லவனாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு சார். மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் கருப்பு கண்ணாடியும், தையல் மிஷினும் நானும் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லி தன் தரப்பு குற்றங்களை நியாயப்படுத்துவார் கதாநாயகன்.

நூறு கோடியை கொள்ளையடித்த ஒருவன் பத்து கோடியில் மக்களுக்கு வேட்டி சேலை வாங்கி கொடுத்துவிட்டால், கொள்ளையடித்தவனை மன்னித்து விடுவோமா?

 ******
ஒரு ஊழல்வாதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் தீக்குளிக்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்றால் இந்த நாட்டின் கல்வித்தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

******

தீர்ப்பை படிச்சி பார்த்த சட்ட வல்லுனர்கள் எல்லாம் மிரண்டு போய் கிடக்காங்க. "நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி, மூளை இதுல எல்லாத்துலயும் 'நீதி தாகம்' கொண்ட ஒருவரால் மட்டும் தான் இப்படி ஒரு தீர்ப்பை சொல்ல முடியும்"...

******

உண்மையில், ஜெயலலிதாவுக்கு இந்த தண்டனை ஏன் வழங்கப்பட்து என்ற விவரம் கிராமப்புற மக்களில் பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை. எதோ அநியாயம் நடந்துவிட்டதை போல முழிக்கிறார்கள். அந்த அளவுக்கு கடந்த ஒருவாரமாக ஊடகங்கள் அவர்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. "பத்திரிக்கைகாரன் எல்லோரும் கவர் வாங்கமாட்டேன்" என்று உறுதியை எடுத்துக்கொண்டாலே போதும், நேர்மையான செய்திகள் மக்களை சென்றடைவதற்கு எந்த தடையும் இருக்காது....

ஏன் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய எதிர்கட்சிகள் எல்லோரும் தொடை நடுங்கி கிடக்கிறார்கள்...

- தீர்ப்புக்குப் பின் முகநூளில் எழுதியது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக