வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பேருந்து பயணமும்.. பக்கத்து சீட்டில் தேவதையும்... (தொடர்ச்சி)

இந்த இடத்திலே சுத்த சைவர்களை பற்றிய என் அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நீங்கள் என்னோடு வர சம்மதித்தால் உங்களை நான் மைலாப்பூருக்கு அழைத்து செல்வேன். பேருந்து திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருக்க, நாம் மட்டும் மைலாப்பூருக்கு சென்று வரலாம். எனக்கிருக்கும் பறக்கும் சக்திமூலம் உங்களை என்னால் தூக்கி செல்ல முடியும். கபாலீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு தான் நாம் செல்லப்போகிறோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த சம்பவம் இது. மாங்கொல்லையில் அம்பேத்கர் பிறந்ததினம் கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்த காலம் அது. “அங்கிருக்கும் மக்களின் (பார்ப்பனர்கள்) பழக்க வழக்கங்களும், நிகழ்ச்சிக்காக வரப்போகும் மக்களின் பழக்க வழக்கமும் வேறு வேறானவை. அவர்கள் மதுப்பழக்கம் உடையவர்கள், ஒழுக்கமாக இருக்கமாட்டார்கள்” என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திலே சொல்லி இருந்தார். பிறகு நீதிமன்ற அனுமதியோடு விழா நடந்தது என்பது தனிக்கதை. அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் கழித்து நண்பர் ஒருவரை சந்திக்க மைலாப்பூர் செல்ல வேண்டியிருந்தது. என்னிடம் டூவீலர் இல்லாததால் நண்பரின் தம்பியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எங்களை கபாலீஸ்வரர் கோயில் அருகே நண்பர் நிற்க சொல்லி இருந்தார். சாயங்கால நேரம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்துக் கொண்டும் போயிக்கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்தில் நண்பர் வந்துவிட்டார். ஒரு வேலை விஷயமாக அவரை சந்திக்க போயிருந்தேன். அரைமணி நேரத்திற்கு பிறகு அவரிடம் இருந்து நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். கிளம்பும் போது நண்பரின் தம்பி என்னிடம், மச்சி... ஒரே தலைவலியா இருக்கு, பீர் சாப்பிடலாமா? என்றார். வேனாம்யா முகப்பேர் போயிடலாம் என்றேன். இல்ல வா... இங்க எதிர்லயே டாஸ்மாக் இருக்கு. ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம், சும்மா பீர்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். யோவ் டூவீலர் ல போகவேண்டி இருக்கு, போலீஸ் புடிச்சா வம்புயா என்று என் கவலையை சொன்னேன். சாதா பீர்தானே, சாப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடா போட்டா சுத்தமா வாசனையே இருக்காது என்றார். சரி வா... என்று சொல்லி டாஸ்மாக் கடைக்கு போனோம். அங்கு ஒரு குடிமகன், ‘தலைவா வண்டியை இங்க நிறுத்தாதீங்க, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நிறுத்துங்க’ என்றார். ஏன் தலைவா என்றேன். இல்ல உங்க வண்டி நம்பரை மப்டில நிக்கிற போலீஸ் காரங்க நோட் பண்ணிக்குவாங்க, பக்கத்து சிக்னல்ல போலீஸ் நிப்பாங்க, அவங்க கரெக்டா உங்களை பிடிச்சு பில்லு போட்டுடுவாங்க என்றார். நம்மூரு போலீஸ்காரங்க திருடனை புடிக்க இப்டிலாம் யோசிச்சிருந்தா நாடு எப்பயோ முன்னேறி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, வண்டியை கோயில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு வந்தேன். உள்ளே சென்றால் பார் அவ்வளவு சுத்தமாக இல்லை. நின்றுகொண்டு தான் குடிக்க வேண்டும். சுவத்துல எல்லாம் பான்பராக் கரை, ஒரு மூலையில் யாரோ வாந்தி வேறு எடுத்திருந்தார்கள். ஆங்காங்கே குடித்த பாட்டில்களும், கிளாஸ்களும், பீடி, சிகரெட்களும் எக்கச்சக்கமா சிதறி கிடந்தன. அந்த இடமே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இங்கு குடிக்க வேண்டாம் என்று நினைக்கையில் பீர் பாட்டிலை திறந்து கையில் நீட்டிவிட்டார் நண்பரின் தம்பி. நிறைய பிராமினர்களும் அங்கு குடிக்க வந்திருந்தார்கள். தொட்டதிற்கெல்லாம் ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூச்சல் போடும் அவர்கள், ஆச்சாரத்தை அற்ப போதைக்காக மார்வாடி கடையில் அடகு வைத்துவிட்டு வந்திருந்தார்கள் போலும். பாதிக்கு மேல் பிராமினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேச்சு மொழியை வைத்து நானாக அனுமானித்துக் கொண்டது அது. அதில் மூன்று நான்கு பேர் உச்சிக் குடுமியோடு இருந்தார்கள். மதுபானக்கடை படத்தில் ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஒரு முடக்கு பீரை குடித்துவிட்டு சைடிஷ் வாங்க சென்றேன். அங்கே குடுமி வைத்த சுத்த சைவர் ‘போட்டி(குடல்)’யை போட்டியே இல்லாமலும், ஆசாரமே இல்லாமலும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தார். அதையும் கடந்து மீன் வறுவல் வாங்க சென்றேன். அங்கே சுத்த சைவர் ஒருவர் ‘அம்பி நன்னா மீனை பொறிச்சி குடுடா’ நேத்தைக்கு கொடுத்தது சுத்தமா நன்னால்ல அடிச்ச சரக்க அதுவே கொடுத்துடுச்சு’ என்று ஆச்சாரம் பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் சுத்த சைவர்களோ, பார்ப்பான்களோ தங்கள் தனி ஒழுக்கத்தின் மீது ஆச்சாரம் பேணுவதில்லை. ஒடுக்கப்பட்ட,விளிம்புநிலை மக்கள் மீது, வலிய திணிக்கிறார்கள் என்பது வெளிச்சம். அவர்களின் ஆச்சாரம் என்பது அடக்குமுறையின், தீண்டாமையின், சாதிக்கொடுமையின் உச்சமே ஒழிய, ஒழுக்கம் அல்ல என்பது அன்றைக்கு நான் தெரிந்து கொண்ட உண்மை. இப்போது நாம் மீண்டும் பேருந்துக்கே செல்லலாமா? டாஸ்மாக் கடை வரை அழைத்து வந்து, சரக்கு ஏதும் வாங்கி கொடுக்காமலே இழுத்துட்டு போறியேடா பாவி என்ற உங்களின் பொருமல் எனக்கு கேட்காமல் இல்லை. இருந்தாலும் பேருந்து பயணத்துக்கு சரக்கு அடிச்சா சரிவராது என்பதால் நாம் பேருந்துக்கு செல்வது தான் சரியாக இருக்கும். 

நெஞ்செல்லாம் நிறைந்த கருவாட்டு வாசனையில் தேவதையை மறந்தே விட்டேன். அவள் இருக்கையை பார்க்கையில் கண்ணயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறாள். எழுந்து பார்க்கையில் அவள் என்னை தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு நானும் தூங்க தயாரானேன். நான் அமர்ந்திருந்த சீட்டு அசவுகரியமாக இருக்க தூக்கமின்றி அவதிப்பட்டேன். அருகில் பெருசாவும் இல்லாமல், சிறுசாவும் ஒரு தினுசாக இருந்த ஆசாமி ஆலமரம் அடியோடு சாய்ந்து மேலே விழுவது போல தூங்கி தூங்கி மேலே விழுகிறார். அவர் மேலே விழும் வேகத்தில், நானும் தூக்க கலக்கத்தில் இருக்க, தடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துவிடுவேனோ என்ற பயம் வேற அடிக்கடி வந்து தொலைக்கிறது. போதாக்குறைக்கு படிக்கட்டுக்கு நேரெதிர் சீட்டு என்பதால் பேருந்து செல்லும் வேகத்தில் ஊதக்காற்று வேறு என்னை கட்டிக் கொண்டு விலக மறுக்கிறது. குளிருக்கும், தூக்கதிற்குமான போராட்டத்தில் குளிரே வென்றது. அதோடு விக்கிரவாண்டி அருகில் இருக்கும் மோட்டலும் வந்தது. மோட்டல் ஊழியர் பேருந்தை தட்டி, தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பினார். ‘மரிக்கொழுந்தே என் மல்லிகப்பூவே’ என்ற பாடல் உச்சஸ்தாயில் ஸ்பீக்கரில் அலறிக்கொண்டிருந்தது. ஆண்கள் எல்லோரும் வேகமாக கீழே இறங்குகிறார்கள் நானும்தான். நேராக சென்று குளிருக்கு இதமாக சூடாக ஒரு பால் குடித்துவிட்டு பாத்ரூம் செல்ல கிளம்புகையில், ஆண்கள் எல்லாம் சாரை, சாரையாக ரோட்டோரமாக சென்று கொண்டிருந்தார்கள். பாத்ரூம் வசதி இருந்தாலும் கண்ட இடத்தில் ஜிப்பை திறந்து கொண்டு ஒண்ணுக்கு போவதில் ஆண்களுக்கு அலாதி பிரியம் போல. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று பாத்ரூம் அவ்வளவு சுத்தமாக இருக்காது. சில நேரங்களில் தண்ணீர் வசதி கூட இருக்காது. கோயம்பேடு பாத்ரூமில் மலம் கழித்துவிட்டு தண்ணீர் கூட ஊற்றாமல் அப்படியே காய்ந்துபோய் கிடக்கும் காட்சியை காணலாம். அந்த கழிவறைக்குள் செல்வதற்கு திடமான மன தைரியம் வேண்டும். அப்படித்தான் நெடுஞ்சாலை மோட்டல்களிலும் இருக்கும். இரண்டாவது அதிகபட்சம் பதினைந்து நிமிடம் பேருந்து நிற்கும் அதற்குள் பாத்ரூம் செல்வது, டீக்குடிப்பது, தம் அடிப்பது எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறிவிட வேண்டும். பேருந்து கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமாக கூட இருக்கலாம். அங்கிருக்கும் கழிவறையில் ஒரே நேரத்தில் அதிகமாக இருபது பேர் யூரின் போகலாம். மோட்டல்களில் ஒரே நேரத்தில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நிற்கும். ஒரு பேருந்துக்கு 50 பேர் என்று கணக்கு வைத்தால் கூட 500 பேர் அங்கு கூடுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் ரொம்ப அவசரம் இல்லையெனில் கீழே இறங்குவதில்லை. ஆனால் பெரும்பாலான ஆண்கள் கீழே இறங்கி டீ குடிப்பது, தம் அடிப்பது போன்ற காரியங்களால் பயணக் களைப்பில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். 200 பேர் என்றே வைத்துக் கொள்வோம். கிடைக்கும் பதினைந்து நிமிடத்தில் எல்லோரும் குறித்த நேரத்தில் தங்கள் வேலைகளை முடித்து கொண்டு வர முடியாது. ஆகவே ஆண்கள் ரோட்டோரத்தில் ஜிப்பை திறந்து கொண்டு அவசர அவசரமாக நிற்கிறார்கள். பாத்ரூம் அசவுகரியமாக இருந்தால் கூட பெண்கள் பாத்ரூமுக்குள் தான் சென்றாக வேண்டும். காமுகர்களின் கழுகுப்பார்வைக்கு அப்போது கூட ஓய்வில்லை என்பதாலே. பெரும்பாலான பெண்கள் மோட்டல்களில் இருக்கும் கழிவறையை பயன்படுத்த விரும்புவதில்லை. வீடு சென்றுசேரும் வரை அடக்கி கொள்கிறார்கள் என்பது மிகுந்த கவலை தரக்கூடிய ஒன்று. அங்கு விற்பனைக்கு இருக்கும் பொருட்களின் விலையெல்லாம் இரண்டு மடங்கு அதிகம். யூரினுக்கு 3 ரூபாயும், டூ பாத்ரூம் செல்ல 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். இருப்பினும் போதுமான அளவில் தரமான கழிப்பறை வசதியை அவர்கள் செய்து கொடுப்பதில்லை. எல்லாம் முடிந்து பேருந்தில் ஏறியவுடன், பஸ் கிளம்ப போகிறது, எல்லாரும் வந்தாச்சா, பக்கத்து சீட்டு ஆளுங்க எல்லாம் சரியா இருக்காங்களா? பாருங்க என்று கண்டக்டர் சொல்லவும் நான் தேவதையை பார்க்கிறேன் அழகே சாட்சியாக அமர்ந்திருக்கிறாள். கீழே இறங்காத அவள் தான் வைத்திருந்த தண்ணீரை குடித்தாள். இவ்வளவு நேர பயணத்தில் நாம் கிழிந்த கந்தல் துணிப்போல் ஆகிவிட்டேன். அவள் மட்டும் பேருந்து ஏறுவதற்கு முன்பு பார்த்த அதே அழகில் அப்படியே இருக்கிறாளே என்ற ஆச்சர்யம் இலைய்பாகவே வந்து போனது. அந்த நடுநிசியில் கூட அவள் இதழ்கள் சிரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இதற்கு முன்னர் எந்த தேவதையும் இவ்வளவு நேர காட்சியை எனக்கு கொடுத்ததில்லை. மோட்டலில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து பேருந்து ரோட்டில் ஏறும் போது வெளியே எட்டிப்பார்க்கிறேன். குற்றால ஐந்தருவி என்னங்க, அம்பது அறுபது அருவிகளை ஒரே நேரத்தில் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீரையெல்லாம் சுத்திகரிச்சி, தஞ்சாவூர் பக்கம் திருப்பிவிட்டால் முப்போகம் அமோகமா விளையும். ரோட்டில் ஏறிய பேருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்ட, விலகி சென்றிருந்த ஊதக்காற்றும் மீண்டும் என்னை தேடி வந்து கட்டிக்கொண்டுவிட்டது. தேவதையை பார்க்க ஆசைப்பட்டு குளிரில் நடுங்கும் கொடுமையை எங்கு சொல்ல...

கடுமையான போராட்டத்திற்கு பிறகு என்னையும் அறியாமல் முன்சீட்டு கம்பியில் தலைவைத்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பின் நடந்தவை எல்லாம் அந்த தேவதைக்கே வெளிச்சம். கண்விழித்து பார்க்கையில் விருத்தாசலம் தாண்டி பெண்ணாடம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. செல்போனை எடுத்து மணிப் பார்த்தால் மணி 3.45. கடுமையான கழுத்துவலியில் கழுத்தை திருகி தூர எறிந்துவிடலாம் என்று கூட நினைக்கிறேன். கோமாவில் இருந்து மீண்டவன் எதையோ தேடுவது போல நான் என் தேவதையை தேடுகிறேன். அவள் அமர்ந்திருந்த முன் சீட்டில் பார்த்தால் தேமேவென பொக்கைவாய் கிழவி ஒன்று வெத்தலை போட்டுக் கொண்டிருக்கிறது. தேவதைகளுக்கு உருமாறும் சக்தி இருக்குமா? என்று நினைத்தேன். ச்சே.. ச்சே... இது கலியுகம் அப்படி எல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை. உளுந்தூர் பேட்டையிலோ அல்லது விருத்தாச்சலதிலோ இறங்கி இருக்கணும். அதுதான் உண்மையாக கூட இருக்கும். அதற்கப்புறம் விருத்தாச்சலத்தில் கிழவி ஏறி இருக்கும் என்று நினைக்கிறேன். நாலு மணிநேரம் என்கூட அவள் பயனித்திருக்கிறாள், அவளின் கவனத்தை என் பக்கம் திருப்ப இயலவில்லை. எப்போதும் சிரிப்பது போல சிரித்தாலே ஒழிய பிரித்யோகமாக எனக்காகவே சிரிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவளிடம் ஒரே ஒரு வார்த்தைக் கூட பேச துணிவில்லை. அவ்வளவு பயந்தாங்கொள்ளியா நான் என்று யோசிக்கிறேன். டீக்கடையில் திரும்பி திரும்பி பார்த்தவள், தனிமையில் இருக்கும் போது ஏன் என்னை கவனிக்கவில்லை? டீக்கடையில் நிற்கும் போது ஓஓஓ வென நண்பன் ஒருவன் சத்தம் எழுப்பினான். அதனால் அவள் திரும்பி பார்த்திருக்கலாம். அப்போதும் கூட அவள் எனக்காக திரும்பி பார்த்திருக்கமாட்டாளோ? என்று யோசித்துக் கொண்டே கிழவி அருகில் சென்று அமர்ந்தேன். பாட்டி எங்க போறீங்க? என்றேன். இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் ஒருவேளை அவள் பதில் சொல்லி இருக்கலாம். இளமங்கலம் போறேன் ராசா... ஏன் கேக்குற? ஒண்ணுமில்ல இதுக்குமுன்ன இந்த சீட்டுல உக்கார்ந்திருந்த பொண்ணு எங்க இறங்கிச்சி தெரியுமா பாட்டி என்றேன். போடா ராஸ்கோல் அத கேக்கத்தான் இங்க வந்தியா? அது இல்ல பாட்டி என்று இழுத்தேன். கொலைவெறியோடு கிழவி முறைப்பது தெரிந்ததும் மறுபடி என் சீட்டுக்கே வந்துட்டேன். கவலைப்படாதடா வேலு... என்னைக்காவது ஒருநாள் டீக்கடை பக்கம் வராமலா போய்டுவா என்று மனசை தேற்றிக் கொண்டிருக்கையில் கண்டக்டர் விசில் ஊதி திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... திட்டக்குடி கடைசி எல்லாரும் இறங்குங்க... என்று சத்தமாக கத்தினார். அவரருகே சென்று சார் ஒரு டவுட்டு என்றேன். சொல்லுப்பா என்றார். என் சீட்டுக்கு முன்னாடி சீட்டுல ஒரு பொண்ணு இருந்துச்சுல என்று இழுத்தேன். ஆமா அதுக்கு என்ன? என்று படாரென பதில் வந்துச்சு அவரிடம் இருந்து. எங்க இறங்குச்சி ன்னு கேட்டா கிழவி மாதிரி இவரும் முறைப்பாரோ? என்று டவுட்டு வந்தாலும் என்ன செஞ்சிடுவாரு இது நம்ம ஏரியா என்ற தைரியத்தில் கேட்டேன். யோவ் போய்யா போ ... வேற வேலை எனக்கில்லையா? என்று அடிக்காத குறையா முறைக்கிறார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக