வெள்ளி, 10 அக்டோபர், 2014

கருத்தியல் ஆலோசனை

நம் ஒவ்வொரு சொல்லும், கருத்தும் வலிமை வாய்ந்தது. வலிமை வாய்ந்த நம் கருத்தை எந்த நேரத்தில், எங்கே பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்தே அந்த கருத்தின் வலிமை கூடுகிறது. அதேபோல எல்லா மனிதர்களுக்கும் சுயமான சிந்தனையும், அதனையொட்டிய கருத்தும் இருக்கவே செய்கிறது. அடிமுட்டாள் என்று நம்மால் சொல்லப்படுகிறவர்கள் கூட சுயசிந்தனை உடையவர்களே. ஆனால் அவர்களின் சிந்தனை எதனை அடிப்படையாக கொண்டது என்பதிலே அது நல்லவை என்றும், தீயவை என்றும் உருவை பெறுகிறது. எல்லா மனிதர்களும், தனக்கு ஒரு சிக்கல் அல்லது நெருக்கடி ஏற்படும் போது மற்றவர்களிடத்தில் கருத்தியல் ஆலோசனை கேட்க எத்தனிக்கிறார்கள். முந்தைய காலத்தில் நம் தாத்தா, பாட்டி உருவங்களில் வீட்டுக்கொரு ஆலோசகர்கள் இருந்தார்கள். அவர்கள் நம் நலன்களில் அக்கறை கொண்டவர்கள். ஆனால் நகரமயமாதல் விரிந்துவிட்ட இன்றைய சூழலில் நல்லது, கெட்டதுகளை பரிந்துரைப்பது கூட வணிகமாகிவிட்டது என்பது தனிக்கதை. ஆலோசனை கேட்பவர்கள் தம்மைவிட அறிவில், அனுபவத்தில், வயதில் மூத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். அப்படி மற்றவர்களின் ஆலோசனையை பெறுகிற எல்லோரும், அந்த ஆலோசனையை செயல்படுத்துகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும், நம் ஆன்மா தீவிரமான யோசனையில் ஆழ்ந்துவிடும். தீவிர யோசனைக்குப் பின்னர் நம் மனம் ஒரு முடிவையும் கண்டறிந்துவிடும். நமக்கு ஏற்பட்ட பிரச்சனையால் குழப்பத்தில் இருக்கும் நாம், நாம் தேர்ந்தெடுத்திருக்கும் முடிவு சரியா? தவறா? என்பதில் குழப்பமடைந்துவிடும் போதுதான் மற்றவர்களின் குறிப்பாக நம் நண்பர்களின் கருத்தை நாடி செல்கிறோம். நமக்கு கருத்து சொல்லும் ஒருவர் தம், சொந்த வாழ்வின் அனுபவத்தின் மூலமாகவே அல்லது தான் நேரிடையாக கண்ட அனுபவத்தின் மூலமாகவோ ஒரு கருத்தை நமக்கு சொல்வார். நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் முடிவையும், நம் நண்பர் நமக்கு சொன்ன கருத்தையும் பொருத்தி பார்த்து அதிலிருந்து நமக்கு உடனடியாக சாதகமான ஒன்றை செயல்படுத்த நாம் எத்தனிக்க தயாராகிவிடுகிறோம். இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று எதுவென்றால், நாம் யாரிடம் ஆலோசனை பெறலாம் என்பதும், நாம் யாருக்கு ஆலோசனை சொல்லலாம் என்பதும் தான்...

நாம் ஆலோசனை கேட்கும் நபர் நேர்மையான, நமக்கு நம்பிக்கையான ஒருவராக இருத்தல் அவசியம். மற்றவர்கள் மீது விருப்பு, வெறுப்பற்ற அன்பை செலுத்தக்கூடியவராகவும், சமூகத்தின் மீது நல்ல பார்வை கொண்டவராகவும், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவரின் நேர்மை பாராட்ட தக்கதாகவும் இருக்க வேண்டும். இறுதியாக நம் நலனில் பெறாமை கொள்ளாதவராக இல்லாமல், அக்கறை செலுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். அடுத்ததாக நாம் யாருக்கு ஆலோசனைகளை சொல்லலாம் என்பதில் மிகுந்த கவனம் தேவை. நாம் எல்லோரும் தினந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறோம். யாரோ ஒருவருக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது சரியென்றோ, தவறென்றே நாம் பார்ப்பதில்லை நம் மனதிற்கு சரியென்று பட்டதை சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரச்சனை என்று நம்மிடம் வருபவர்களுக்கு, நம் வாழ்வின் ஊடாக நமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நாம் சந்தித்த மனிதர்கள் சொன்ன நிகழ்வுகளையும் தொகுத்து சரியான ஒன்றை பரிசீலிப்போம். நம்மிடம் அறிவுரை கேட்பவர் நம்மீது மதிப்பு கொண்டவரா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மனம் நிறைய அழுக்கு சிந்தனை உடையவர்களும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்கத்தான் செய்கிறார்கள். சமூக ஒற்றுமையை சிதைக்கும் அழுக்கு சிந்தனை உடையவர்கள், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் கூட, தம் மனம் முழுக்க நிறைந்திருக்கும் அழுக்கு சிந்தனைகளையே செயல்படுத்த முனைவார்கள். ஏனெனில் அவர்களின் சிந்தனை முழுவதும் அழுக்காகவே இருக்கும், மற்றவர்களின் அழிவை பற்றியே எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அப்படி நம் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத நபர்களிடம் விவாதம் செய்வதை கூட தவிர்ப்பது நலம். முட்டாள்களோடு விவாதிக்கும் போது நாம் எப்போதும் தோற்றே போவோம். ஏனெனில் அவர்கள் ‘அறிவுப்பூர்வமாக, முட்டாள்தனமான கருத்து ஒன்றை சரியென்று மிக ஆழமாக நம்பிக் கொண்டிருப்பார்கள்’. என்ன விளக்கம் கொடுத்தும் அவர்களின் முடிவை நம்மால் மாற்றவே முடியாது. எல்லாம் எனக்கு தெரியும் என்று மமதையோடு அவர்கள் இருப்பார்கள். மற்றவர்கள் மீது எப்போதும் அலட்சியமான பார்வையை செலுத்துவார்கள். மற்ற எல்லோரை விடவும் நான் தான் உயர்வானவன் என்ற நினைப்போடு எல்லோரையும் அணுகுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் கருத்து சொல்வதையோ, அறிவுரை சொல்வதையே தவிர்த்துவிடுவது நல்லது. அவர்களின் முடிவு எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் கூட, மற்றவர்களின் ஆலோசனையை கேட்பார்களே ஒழிய, அதை செயல்படுத்த துளியும் நினைக்கமாட்டார்கள். அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களோடு நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கிணற்றில் வீசப்பட்ட கல்லுக்கு நிகரானது. அப்படிப்பட்ட மனிதர்களை தவிர்த்து, நம்மை முழுமையாக நம்பி, நம் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பற்ற அன்போடு, சரியான வாழ்வியல் பாதையை காட்டிடுவோம்....

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக