புதன், 31 ஜூலை, 2013

சாதியே வென்றது !

காதல் துளிரும் போது ஆயிரமாயிரம்
கனவுகளோடு துளிர்கிறது - அதற்கு
சாதியெல்லாம் தெரியாது

அவனுக்கும், அவளுக்கும் சாதியில்
எவ்வித நாட்டமுமில்லை  - மனம் நேராய்
இருந்தது; இணைந்து வாழவே விரும்பினார்கள்
அவர்களுக்கு நடுவே கோடொன்று போட்டார்கள்
அதற்கு பெயர் சாதியென்று  சொன்னார்கள் ...    

சாதி அவர்களை  மிரட்டியது
முதலில் அவர்கள் பயந்தார்கள்
தொடர்ந்து அச்சுறுத்தியது
இப்போது அவர்களின் அச்சம்
விலகியது துணிவு துளிர்விட்டது ...

மீண்டும் அது  மிரட்டியது
இப்போது அவர்களிடம் பயமில்லை
சாதிக்கு சவால் விட்டார்கள்

சாதி தன் கோரப்பல்லை கூர்தீட்டி கொண்டது
பல குடிகளில் கோரதாண்டவம் ஆடியது ...

துரத்தலும், ஓட்டமுமாய் நகர்ந்தது வாழ்வு
ஆனாலும் வானத்து நட்சத்திரங்களோடு
இணைந்து மின்னிக் கொண்டிருந்தார்கள்

திடீரென ஒருநாள்

வானத்தை கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது போல
அவர்களையும்   கறுத்த நெஞ்சுடையோர் சூழ்ந்து
கொண்டார்கள்  - வானத்தையே இரண்டாக பிளப்பது
போன்ற இடி ஒன்று விழுந்தது

ஆம் ! பிளந்தே விட்டது...
இரு நட்சத்திரங்களையும் பிரித்தே விட்டது

வானத்தின் சோகம் மண்ணை ஈரமாக்குவது போல
இவர்களின் பிரிவு கண்ணை ஈரமாக்கியது      
கனவுகளில் கடப்பாறையை சொருகினார்கள்
காதல் கலங்கி நின்றது

இரண்டும் எதிரெதிர் துருவங்களில் நின்றன
ஒன்றை வீட்டுச்சிறையில் அடைத்தார்கள்
மற்றொன்றை ஈட்டிக் கொண்டு மிரட்டினார்கள்
நம்பிக்கையில்  நச்சுரம் பாய்ச்சினார்கள்
நியாயம் வெல்லும் என்பார்கள் - ஆனால்
இங்கே சாதியே வென்றது
நீதி குடை சாய்ந்தது ...

ரயில் அவனை கொன்றது என்றார்கள் - ஆனால்
ரயிலுக்கும் அவனுக்கும் யாதொரு பகையுமில்லை    
அவனை கொன்றே விட்டார்கள்  - அவளை
கொன்று கொண்டிருக்கிறார்கள் ...

இப்போது கனவுகள் களைந்து விட்டன
வாழ்வை அவநம்பிக்கை சூழ்ந்து கொண்டது
காதல் மட்டும் நிலாக்குருவி போல
கேவிக் கொண்டிருக்கிறது ...

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக