திங்கள், 29 ஜூலை, 2013

இறையாண்மை

சகதியில் நசுக்கப்பட்ட புழுவைப் போல
அவர்கள் எங்களை நசுக்கும் போது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
தடுத்து நிறுத்திட துணியவில்லை

சாக்கடை ஓரங்களில் வீசப்படும்
குப்பைக் கழிவைப் போல அவர்கள்
எங்களை சேரிக்குள் வீசி எரியும் போது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
எங்களை தாங்கிப் பிடிக்கவில்லை

சாணிப்பாலையும், மனிதச்சாணத்தையும்
உணவாய் அவர்கள் எங்களுக்கு ஊட்டியபோது
எந்தவொரு தேசிய இறையாண்மையும்
வெட்கப்படவில்லை

எங்கள் குடிசையை கொளுத்தி குளிர்காய்கிறான்;
அவனுக்கு இறையாண்மையை பற்றி எந்த
கவலையும் இல்லை

எங்களை கொன்றுபோட்டு குதூகலிக்கிறான்
அவனுக்கு இறையாண்மை மீது எந்த
அச்சமும் இல்லை
 
ஆணவமும், அடக்குமுறையும்
எப்போதும் இறையாண்மையை
மதித்ததே இல்லை

இறையாண்மையை மதிக்காத
ஆணவத்தின் மீதும், அடக்குமுறையின் மீதும்
இறையாண்மை சட்டம் எப்போதும்
பாய்ந்ததே இல்லை

நீதிகேட்டுப் போராடும் நாங்கள்
மட்டும் இறையாண்மைக்குட்பட்டு
போராட வேண்டுமென்று நீதிமன்றம்
சொல்கிறது ..!

- தமிழன் வேலு        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக