செவ்வாய், 9 ஏப்ரல், 2013

நாங்கள் யாருக்கும் அடிமையில்லை

நாங்கள் தலை நிமிர்வதை 
அவர்கள் விரும்பவில்லை !

நாங்கள் தன்னெழுச்சிப் பெறுவது 
அவர்களுக்கு பிடிக்கவில்லை !

நாங்கள் தன்மானம் பெறுவது 
அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது !

நாங்கள் கல்வியறிவு பெறுவது
அவர்களுக்கு கடுப்பை உண்டாக்கியது !

எங்களை நாகரிகம் அற்றவர்கள் என்றார்கள் - பிறகு 
நாங்கள் நாகரிகம் அடைவதில் அவர்கள் 
தொல்லை கொடுத்தார்கள்

எங்களிடம் தட்டுமுட்டு சாமான்
நாலு கூடுதலா இருந்தாலே
அவர்கள் கொதித்து விடுகிறார்கள்

நாங்கள் அரசு வேலைக்கு செல்வது
அவர்களின் அரிப்பை அதிகமாக்கியது 

எங்களை இந்துக்களோடு சரி சமமாக
நடத்தமாட்டார்கள் - ஆனால் 

நாங்கள் இந்துக்கள் இல்லை என்றால்
எங்கள் மீது கோபம் கொள்வார்கள் 

அவர்கள், எங்களோடு இணைந்து 
வாழ்வதை விரும்பவில்லை - ஆனாலும் 

நாங்கள் அவர்களை விட்டு பிரிந்து 
செல்வதையும் விரும்பவில்லை

எங்களை தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை
செருப்பு போட தடை போட்டார்கள்
ஊருக்கு ஓரமாய் ஒதுக்கி வைத்தார்கள்
கோவிலுக்குள் விட மறுத்தார்கள் 

உரிமைகள் அனைத்தையும் பறித்தார்கள் 
எங்களை கொத்தடிமையாய் நடத்தினார்கள்
எதிர்த்துப் பேசக்கூடாது என்றார்கள், மீறி 
பேசினால் சவுக்கடி கொடுத்தார்கள்

இனியும் பொறுக்க இயலாது,
இளிச்சவாயர்களாகவும் இருக்க முடியாது
என்ற நிலை வந்தது - அந்த அளவுக்கு
அவர்களின் கொடுமை எல்லை மீறியது 

புரட்சியாளர் வந்தார், புதிய 
வழியை தந்தார் - தந்தை பெரியார்
வந்தார் தன்னெழுச்சியை தந்தார் 

அடங்க மறுத்தோம் ... அத்து மீறினோம் ...
அவர்கள் இட்ட அத்துனை தடைகளையும்
உடைக்க துணிந்துவிட்டோம்... 

அதனால் தான்...

எங்கள் குடிசையை கொளுத்துகிறார்கள்
அது கொழுந்துவிட்டு எரியும் போது 
கொள்ளை அடிக்கிறார்கள் 

நாங்கள் கௌரவமாக வாழ விரும்பினால் 
எங்கள் மீது கௌரவ கொலைகளை 
கட்டவிழ்த்து விடுகிறார்கள்

இன்றைக்கும் அவர்களின் வாழ்வை
சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை
ஆனால் என்றைக்கும் அவர்கள் எங்களை
வாழவிட மாட்டார்கள்

காரணம் ...

"நாங்கள் யாருக்கும் அடிமையில்லை"
என்பதை உணர்ந்து கொண்டோம் ..!

- தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக