வியாழன், 11 ஏப்ரல், 2013

தீண்டப்படாதவன் பேசுகிறேன் ...

சுதந்திர தினத்துக்கு தேசப் பற்றாளன் ...
ரமலான் நோன்புக்கு இசுலாமிய தோழன் ...
கிறிஸ்து பிறப்பு அன்று கிருஸ்துவ சகோ ...
புரட்சியாளர் பிறந்தநாளுக்கு 
தாழ்த்தப்பட்டவர்களின் ரட்சகன் ...

எத்தனை, எத்தனை வேடமடா உங்களுக்கு...
உங்களின் முகத்திரையை கிழிக்கிறான் 
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 
என் அன்பு நண்பன் ... 

****** ****** ******
தீண்டப்படாதவன் பேசுகிறேன் கேளுங்கள் ...

நாங்கள் நாகரிகமற்றவர்கள் - அதனால்
நாங்கள் கேவலமானவர்களா?

அப்படியானால் நீங்கள் ???

பார்ப்பானின் காலைக் கழுவிக் குடிக்கும்
உங்கள் கரங்கள் எங்கள் கரங்களை கூட
பற்ற மறுக்கிறதே ...

எங்கள் வசிப்பிடத்தை கடக்கும் போது
உங்கள் கால்கள் நுனிக்காலில் நடக்கிறதே ...

உங்களை நாங்கள் வேகமாக கடக்கும்
போதே உங்கள் உடம்பில் கம்பளிப் பூச்சி
ஊர்வதாய் உணருகிறீர்களே ...

எங்களோடு பேசுவதற்கு கூட
உங்களின் நா கூசுகிறதே ...

எங்களை கண்டதும் உங்கள் முகம்
அருவருப்பாய் மாறுவதை
காண்கிறோமே ...

எங்கள் பெண்கள் கழிவறை செல்லக்
கூட பாதுகாப்பு இல்லையே ...

எங்கள் கண்ணீரை துடைக்க இவ்வுலகில்
நாதியே இல்லையே ...

****** ****** ******
இப்பெல்லாம் எங்கங்க தீண்டாமை
இருக்கு என்று கேட்கும் மேதாவிகளிடம்
கேட்கிறேன் ... அப்ப நீங்க எல்லோரும்
இவர்களை தொட்டுக்கொண்டும், ஒட்டிக்
கொண்டுமா வாழ்கிறீர்கள்?

நாகரிக சமூகத்தில் தீண்டப்படாத
சமூகத்தின் சாட்சியமாக விளங்கும்
இவர்களின் குரலும் வெளியே
கேட்கவில்லை; இவர்களுக்காக
குரல் கொடுக்கவும் யாரும் தயாராக
இல்லை ..!

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக