புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் !

அந்நிய ஆதிக்கம் வேண்டாம் என்று
எதிர்த்ததால் தான் சுதந்திரம் பெற்றோம்
என்று சொல்கிறார்கள் ..!

அதனாலே தான் நானும் சொல்கிறேன்

வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல சுதந்திரம்
வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம் !

தொழில்வளம் பெருக வேண்டும் என்பதற்கு
மட்டுமல்ல சுதந்திரம் - அந்நிய முதலீடு
வேண்டாம் என்பதற்கும் தான் சுதந்திரம் !

மின்சாரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல
சுதந்திரம் - அணு உலை வேண்டாம் என்பதற்கும்
தான் சுதந்திரம் !

மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து
இறையாண்மை கொண்ட ஒரு தேசம் வேண்டும்
என்பதற்கு மட்டுமல்ல  சுதந்திரம்

எந்த மொழியையும் எவர்மீதும் திணிக்கவேண்டாம்
எந்த இனமும், இன்னொரு இனத்தை அடக்க வேண்டாம்
எந்த பண்பாடு- கலாச்சாரத்தை கொண்டும்  மற்றையவர்
பண்பாடு - கலாச்சாரத்தை அழிக்க வேண்டாம்
என்பதற்கும் தான் சுதந்திரம் !

சரி அதுக்கு என்னா  இப்ப?

செங்கோட்டையை வண்ண விளக்குகளால்
அலங்கரிச்சாச்சு - வந்தே மாதரம் ஒலிநாடாவை
தூசுதட்டி எடுத்து வைத்தாச்சு

விழா கொண்டாட்டத்திற்கு நடன ஒத்திகைகள்
பார்த்தாச்சு - மக்கள்  கூடுமிடமெல்லாம்
காவல்துறையினர் கூடி நிற்கிறார்கள்

மூவர்ண கொடியும்  தயார் நிலையில்,
பிள்ளைகளுக்கு கொடுக்க இனிப்புகளும்
தயார் நிலையில் ...

பிரதம மந்திரியும், முதல் மந்திரிகளும்
வாழ்த்துரை வாசிக்க ஒத்திகை பார்த்து
விட்டார்கள் - விழா நடக்குமிடம்
ராணுவ கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு

என்ன விசேஷம் என்று கேட்டால்,
நாளை இந்திய சுதந்திர தினமென்று
சொன்னார்கள் ...

எல்லாம் சரிதான் ...

ரங்கநாதர் கோவில் வாசலில் கால்வயிறு
கஞ்சிக்காக தோல் சுருங்கிய கைகளை நீட்டி நிற்கும்
முனியம்மா கிழவிக்கு சொல்லிவிட்டீர்களா
நாளை நம் சுதந்திர தினமென்று?

- தமிழன் வேலு            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக