ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? மகளின் காதலை எதிர்க்கும் இயக்குனர் சேரன் !

எத்தனையோ காதல் படங்களை இயக்கிய இயக்குனர் சேரன், தன் மகளின் காதலுக்கு எதிராக நிற்கிறார். ஆனால் அவரோ "மகளின் காதலை எதிர்க்கவில்லை, மகளை காதலிக்கும் நபர் நல்லவர் அல்ல, என் மகளுக்கு கணவராக வரக்கூடியவர், எனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? என்று பேட்டி அளித்திருக்கிறார். அவருக்கு துணையாக சரத்குமார், ராதாரவி, அமீர், சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். இது குறித்து என் முகநூல் பக்கத்தில் நான் எழுதி இருந்த இரு விஷயங்கள்...

சேரன் மகளை காதலிக்கும் சந்துரு "நல்ல பழக்கம் உள்ள நபர் அல்ல" என்று சொல்கிறார்கள்.

ஆனால்

குடிகாரர், கஞ்சா விரும்பி, அடிதடி பேர்வழி, பொம்பள பொறிக்கி இவனுங்கள ஹீரோயின் காதலிப்பாங்க, பிறகு தன்னோட அன்பால அவங்கள திருத்துவாங்க. பிறகு வாழ்க்கையில சந்தோஷமா வாழ்வாங்க" இப்படி எத்தனையோ சினிமாவை நமக்கு படமாக காட்டி நம்மை நம்பவைத்து கல்லா கட்டி இருக்கிறார்கள் நம் அருமை சினிமாக்காரர்கள் என்பதை இங்கே நினைவுப் படுத்துகிறேன்..

அதே டைலாக்கை திருப்பி சொல்றேன் " வலியும், வேதனையும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்" என்று எழுதி இருந்தேன்.

சேரனுக்கு ஆதரவாக நிற்கும் "அமீர்" இயக்கிய "பருத்திவீரன்" திரைப்படத்தில் கதாநாயகன் "கார்த்திக்" சமூக சேவகர் வேடத்திலா நடித்தார்? பச்சையான பொம்பள பொரிக்கியாகவும், ரவுடியாகவும் காட்டி, கதாநாயகியாக தோன்றிய பிரியாமணி அவரை உருகி, உருகி காதலிப்பது போல காட்சி அமைத்திருந்தார். அவர் இன்று சேரனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வருகிறார்..

அடுத்து "நாடக காதல் புகழ்" மருத்துவர் ராமதாசும் சேரனுக்கு வக்காலத்துக்கு வந்திறங்கி இருக்கிறார். இரண்டொரு நாளுக்கு முன் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது நண்பர் சொன்னார். " ராமதாசுக்கு இது நிச்சயம் தெம்பூட்டும்" என்றார். சொன்னது போலவே அறிக்கை கொடுத்திருக்கிறார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது "சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.என்றும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம்.
எங்களின் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள்." என்றும் தெரிவித்து இருக்கிறார்.

முன்னாடி ராமதாஸ் என்னவெல்லாம் சொல்லி வெறுப்பு பிரச்சாரம் செய்தாரோ, அதையே தான் இன்று சேரன் சொல்லுகிறார். இந்த நிலைமையில் ராமதாஸ் சேரனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..  

இன்னொரு பதிவில் ...

"மீண்டும், மீண்டும் அதே விஷயத்தைப் பேசுவதற்கு விருப்பமில்லை என்றாலும் இறுதியாக இரண்டு விஷயங்களை தெளிவுப் படுத்திவிட விரும்புகிறேன்...

20 வயதுக்குள் காதலிப்பவர்களிடம் முதிர்ச்சி இருக்காது. ஒரு தந்தையாக தன் மகளுக்கு அறிவுரை சொல்ல சேரனுக்கு உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். சேரனுக்கு ஆதரவாக அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி, சரத்குமார் போன்றவர்கள் துணை நிற்கிறார்கள்.

ஆனால் 15, 16 வயது பெண்களோடு டூயட் பாடும் போது இவர்களின் முதிர்ச்சி எங்கே சென்றது என்று கேட்க விரும்புகிறேன். 16 வயது பெண் லக்ஷ்மி மேனனோடு டூயட் பாடிய சசிகுமார் தான் இன்று சேரனுக்கு ஆதரவாக நிற்கிறார். 14 வயது பெண்ணாக இருக்கும் போதே பானுவை தாமிரபரணி படத்தில் நடிக்க வைத்தனர்.10வது படிக்கும் பெண்ணாக ஓவியா நடித்த களவாணி படம் "சூப்பர் ஹிட்" ஆனது. அப்போதெல்லாம் முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு பாலியல் உணர்வை தூண்டுவதாக இவர்களுக்கு தோன்றவில்லையா? என்று கேட்க விருபுகிறேன்...

அடுத்ததாக "சினிமாக்காரன் குடும்பக்கதையை அவன் எடுக்கிற சினிமா படத்தை விமர்சிக்கிற மாதிரியே விமர்சிக்கிறார்கள். மற்றவர்களை விமர்சிக்கும் முன் நம்மை அவர்களின் இடத்தில் நிறுத்தி பார்த்தால் புரியும் வலியும் வேதனையும்" என்று சொல்கிறார்கள்

சினிமா பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருந்திருந்தாலோ, அல்லது சினிமாக்காரன், சினிமாக்காரனாக மட்டும் இருந்திருந்தால் யாரும் அவர்களைப் பற்றி பேசப் போவதில்லை. ஆனால் சினிமா மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவே சமூகத்தில் தவிர்க்க இயலாத இடத்தை பிடித்து விட்டது. அது எதோ ஒருவிதத்தில் சமூகத்தின் தேவை, தேடல் ஆகியவற்றோடும் தொடர்பில் இருக்கிறது. அதுபோக இன்று விடிந்தாலே சினிமாக்காரர்கள் முகத்தில் தான் விழிக்கக் கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது ஊடகம். பொங்கல், தீபாவளி, சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கூட சினிமாக்காரர்களே ஊடகங்களில் கருத்து சொல்கிறார்கள். அவர்கள் தம்மை பொது சேவை செய்வதாக விளம்பரம் செய்கிறார்கள். அதுவே நம்பவைக்கவும் பட்டிருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் இருந்தே சமூக ஒழுக்கமும் பிறக்கிறது என்ற அடிப்படையில் மக்களுக்கு அறிவுரை சொல்லும் அவர்கள் அதன்படி நடக்காத பட்சத்தில் அவர்களை விமர்சிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது?

இதற்கு மேல் இவ்விஷயத்தைப் பற்றி பேசப் போவதில்லை முற்றும்." என்றும் எழுதி இருந்தேன். இது ஒருபக்கம் இருந்தாலும் அவர் பெரிய இயக்குனர், சினிமாக்காரர் என்பதாலே ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையை நாம் அவருக்கு கொடுப்போம், அவரின் மனதை காயப்படுத்த வேண்டாம்." தன் சுய வாழ்க்கை சிக்கலுக்கும் நிச்சயமாக நல்ல முடிவைதான் எடுப்பார், எடுக்கவேண்டும். அதுவரை நண்பர் சேரன் அவர்களை காயப்படுத்த வேண்டாம்" அவரின் செயல்பாட்டை சிலர் வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள். இதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர்களே "தன் மகளுக்கு அறிவுரை சொல்ல சேரனுக்கு உரிமை இல்லையா?" என்று கேட்கிறார்கள்? அவர்களுக்கு 'திருமணம் என்பது வயதுவந்த, அறிவு வந்த ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் எந்த கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல’’ - என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்றை நினைவுபடுத்துகிறேன்..

#அது சரி... சினிமாவில் காதலை சேர்த்து வைத்தால் துட்டு கிடைக்கும்... நிஜவாழ்வில் காதலர்களை சேர்த்து வைத்தால் மசுரா கிடைக்கும்?
காசு,  பணம், துட்டு, Money...Money...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக