திங்கள், 30 செப்டம்பர், 2013

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? - ஜெயமோகர் கவலை


தன் கவலையை ஜெயமோகர் இப்படி தொடங்குகிறார் "இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள்.அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள். ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்."

அங்கு நடந்த நிகழ்வுகளை ஜெயமொகரே சொல்லி இருப்பதால் நம்மால் ஓரளவு அந்த சூழலை உணர்ந்து  முடிகிறது. மணப்பெண் சிறந்த பாடகியில்லை என்று தெரிந்து தான் அங்கிருந்தவர்கள் பாட சொல்கிறார்கள். அதுவும் மிகுந்த கூச்ச்சப்பட்டவரை கட்டாயப்படுத்தி பாட சொல்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதல்ல நோக்கம், அந்த சூழலின் மகிழ்ச்சியை அவர்களின் குரலால் ரசிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சிறந்த சங்கீதத்தை கேட்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்பதாக இருந்திருக்குமானால் நல்லதொரு  வித்வானை வரவழைத்து கச்சேரி நடத்தி ரசிச்சிருப்பார்கள். பெரிய இடத்து குடும்பம் என்பதால் பணப்பிரச்ச்சனையும்  வர வாய்ப்பில்லை. அடுத்ததாக கமுகறை புருஷோத்தமன் என்ற மகா கலைஞன் அவமானப்படுத்தப் பட்டதாக வருந்துகிறார். அங்கிருந்த யாருக்கும் கமுகறை புருஷோத்தமன் அவர்களின் சங்கீதத்தை கேட்கவேண்டும் என்ற விருப்பமே இல்லை. மணப்பெண்ணின் அப்பாவின் விருப்பத்திற்கு இணங்கவே அவரும் பாடினார். அவர்கள் எல்லோரும் மணப்பெண்ணை  பாட சொல்லும்போதே மணி 9ஐ கடந்துவிட்டதாக ஜெயமொகரே சொல்கிறார். அவர்கள் பாடி, ஆடி மகிழ்ந்ததில் எப்படியும் ஒரு ஒருமணிநேரம் கடந்திருக்கலாம் என்ற தோராயமாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பிக்கும் போது மணி 10 க்கு மேலிருக்கும். அவர் பாடி கொஞ்சநேரத்திற்கு பிறகு தான் கூட்டம் கலைந்ததாகவும், சிறுவர்கள் தூங்கிவிட்டதாகவும் சொல்கிறார். அந்நேரத்திற்கு மேல் இயல்பாகவே சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தூக்கம் வருவது இயல்புதானே. இதில் மகா கலைஞன் எங்கே அவமானப்படுத்தபட்டார்? ஒரு மிகப்பெரிய பாடகரின் பாடல் சிறுமைப் படுத்தப்பட்டதற்கு 'அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்' காரணம் என்கிறார் ஜெயமோகர். இந்த கோவம் பாடுவதில் எந்த நிபுணத்துவமும் இல்லாத ரஜினிகாந்தின் மருமகன் பாடுகிறேன் என்று 'கொலைவெறி'யோடு கத்தியபோது வந்திருக்கணும். அப்போது கோவப்பட்டிருந்தால் ரஜினிகாந்த் என்ற மகா நடிகரின் மருமகனையே கேவலப்படுத்தியமையால் ஜெயமோகருக்கு சினிமாப்படத்திற்கு கதை எழுத வாய்ப்பு கிடைக்காது. என்பதால் இங்கே வந்து சாமான்யன்கள் மீது பாய்கிறார்.

அடுத்ததாக தனக்கே உரிய ஆற்றாமையோடு சாமான்யன் எழுதலாமா? சாமான்யன் பாடலாமா? சாமான்யன் பேசலாமா? என்றல்லாம் அபத்தமாக எழுதியிருக்கார். சாமான்யனுக்காக மாடி வீட்டு கோமான் எழுதும்போது, பேசும் போது சாமான்யனுக்காக சாமான்யனே எழுதுவதிலும், பேசுவதிலும் என்ன தவறு இருந்துவிடப் போகிறது? தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு அடக்குமுறையையும் அவரவரே எதிர்த்துப் பேசவும், எழுதவும், போரிடவும் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் ஒரு சமூகம் வளர்ந்த, முன்னேறிய அறிவார்ந்த சமூகமாக இருக்கமுடியும். ஆனால் ஜெயமோகரோ ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்' என்கிறார். இது கிட்டத்தட்ட ராஜாஜி சொன்ன குலக்கல்வி திட்டத்தை போன்றது தான். 'எழுத்தாளனின் வாரிசு, எழுத்தாளன், செருப்பு தைத்தவனின் வாரிசு செருப்பு தைப்பவன்' என்கிற தொனியில் தான் 'அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும்' என்கிறார். யாரும் இல்லை என்றாலும் இந்த சமூகம் வாழும் என்பதுதான் எதார்த்தம். அப்படி இருக்கையில் ஏன் ஒருவனையே சார்ந்திருக்க வேண்டும்? அடுத்தபடியாக 'பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்' எந்தவொரு  சமூகத்திலும்  எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு. அதுவே சமூகநீதி. ஆனால் ஜெயமோகரோ ஒரு சிலர்  மட்டும் தான்  சமூகத்தின் மையப்புள்ளி என்றும் அவர்களை பெருவாரியான பலர்  வெறும் பார்வையாளராக இருந்து அவர்களின் பல்லவிக்கு வாயசைக்க சொல்கிறார். இதைதான் மநுவும் சொல்கிறது. பிராமிணர்கள் தான் வேதம் எழுத வேண்டும், பிராமிணர்கள் வேதம் படிக்க வேண்டும், அவர்கள் தான் சத்திரியர்களுக்கு வேதம் சொல்லிகொடுக்கவேண்டும். தப்பு தவறிக்கூட சூத்திரர்கள் வேதம் படிக்கவோ, படிப்பதை காதால் கேட்கவோ கூடாது. அப்படி கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுங்கள் என்றது. அதைதான் நம்ம ஜெயமோகர் ரொம்ப சாப்டாக, மறைமுகமாக  சொல்கிறார்.

அடுத்ததாக 'இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்' என்கிறார்.  எழுத்தாளருக்கும், வாசகனுக்கும் உள்ள இடைவெளி இன்றைக்கும் அப்படியே  இருக்கிறது. வாசகர்களை எழுத்தாளர்கள் குறைந்தபட்ச அறிவுடையவர்கள் என்றளவில்  கூட மதிப்பதில்லை. ஆனால் வாசகர்களோ எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். பேஸ்புக்  போன்ற சமூக வலைதளங்கள் எழுத்தாளர்களோடு வாசகர்களை நெருங்க வைத்திருக்கிறது. அதுதான் ஜெயமோகர் போன்ற எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை.அவர்கள் வாசகர்கள் தங்களை தேவ தூதர்களைப் போல் கொண்டாடவேண்டும், அவர்களுக்கு எளிதில் காட்சி அளிக்கக்கூடாது என்பதிலும், தம்மைப் பற்றி  வாசகர்கள் மத்தியில் உள்ள உயர்ந்த பிம்பம் கரைந்துவிடக்கூடாது என்பதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் கல்லெறிந்து விட்டன. அதனால் தான் ஜெயமோகருக்கு இதன் ஜனநாயத்தில் சந்தேகம் வந்துவிட்டது. சமூக வலைதளங்கள் ஜனநாயக களமாக இருக்கவேண்டும் என்பதோ, இந்த சமூகம் ஜனநாயக சமூகமாக இருக்கவேண்டும் என்பதோ ஜெயமோகரின் கவலை அல்ல, அப்படி நினைத்தால் நம்மைவிட அதிசிறந்த முட்டாள்கள் வேறு எவருமில்லை. இந்த சமூகம் தன்னையும், தன்னைப் போன்றவர்களையும் மட்டுமே கொண்டாடவேண்டும் என்பது தான் அவரின் நோக்கம். அதில் சமூக வலைதளங்கள் கல்லெறிந்துவிட்டதால் தான் சமூக வலைதளங்களின் ஜனநாயகத்தைப் பற்றி கவலை கொள்கிறார். இதைதான் 'நம்ம ஊரில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது' என்று சொல்வார்கள்.  சாமான்யன் நிபுணனை பார்த்து பொறாமை படுவதாக சொல்கிறார் அவர், ஆனால் அவர் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது சாமான்யங்களின் அறிவுத்திறனைப் பார்த்து நிபுணன் தான் பொறாமைப் படுவதாக தோன்றுகிறது. சாமான்யங்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும் அரசியலையும், சமூகவியலையும் பற்றி நிபுணன் தான் தொலைகாட்சி போன்ற ஊடகங்களில் கருத்து சொல்லவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம். அதைதான் ஜெயமோகர் சரி என்கிறார். 'ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது' என்று சொல்லும் ஜெயமோகர் நேற்றைய காலம் வரை நிபுணன்களும், கலைஞர்களும் சாமான்யன்களை வலுக்கட்டாயமாக அடித்து துரத்தினார்கள் என்பதை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எந்த நிபுணர்களுக்கும் இந்த சமூகம்  முழுவதும் அறிவார்ந்த சமூகமாக உற்பத்தியாவதில் உடன்பாடில்லை என்ற உண்மை வாதத்தையும் புறந்தள்ளுகிறார். உண்மையான அறிவையும், கலையையும் எல்லோருக்கும் கிடைக்கும்  படி செய்பவனே நிபுணன், மக்கள் நலன் சார்ந்த முற்போக்குவாதி எல்லாமே. அதைவிடுத்து இந்த சமூகம் முழுவதும் எல்லாவற்றிற்கும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், தன்னைப் போன்ற சிலரையே சாந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் குறுகிய மனநோயாளி என்பதை ஜெயமோகருக்கு சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்..

- தமிழன் வேலு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக