செவ்வாய், 28 ஜனவரி, 2014

ராஜபக்சேவை மன்னிக்கும் மணியன் ! அப்போ வைகோ?

தமிழருவி மணியன் என்ற மிகுந்த யோக்கிய குணம் படைத்தவர் மாற்று அணி என்ற போர்வையில் நச்சுப்பாம்புகளிடம் அப்பாவி மக்களை கூட்டிக் கொடுத்திட துடியாய் துடிக்கிறார்‍ என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை. தனிப்பட்ட முறையில் அவர் மீது நமக்கு எவ்வித காழ்ப்பும் கிடையாது. ஆனால் அவர் முன்னெடுப்பதாக சொல்லும் அரசியல் மிக மிக கொடூரமான அரசியலாக இருக்கிறது என்பதாலே அவரை நாம் விமர்சிக்கிறோம். அதை மாற்று அணி என்கிறார், ஆனால் அவர் பேச்சில் இருந்து அது மக்களை ஏமாற்றும் அணி என்றே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மணியனின் கடும் கோபத்திற்கு நான் முதலிலே பதில் சொல்லி விடுகிறேன்‍. முகநூலில் அமர்ந்து கொண்டு அரசியல் தெரியாமலும்‌, தரம் தாழ்ந்தும்‌ தன்னை விமர்சிப்பவர்கள்‌, இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்தார்கள்? என அறச்சீற்றம் காட்டுகிறார்‍. காசு வாங்கி கொண்டு மேடையில் பேசிக் கொண்டிருப்பதாலே இந்த சமூகத்திற்கு தான் அல்லும் பகலும் உழைப்பதாக கருதும் மணியன் இப்படியெல்லாம் கோபப்படலாமா? காசு வாங்கி கொண்டு அவர் எதை பேசுகிறாரோ, எதை எழுதுகிறாரோ அதையே தான்  காசு வாங்காமல் முகநூலில் பேசுகிறார்கள்‌, எழுதுகிறார்கள்‍. எந்த மேடைப்பேச்சுக்கோ, அல்லது பத்திரிக்கை எழுத்துக்கோ தான் காசு வாங்கவில்லை என்று உறுதியாக ஆதாரத்தோடு அவர் மறுக்கட்டும், அவர் மீது நான் வைக்கும் அத்துனை குற்றச்சாட்டுக்களையும் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்‍. எழுத்துலக மேதைகளும்‌, மணியனை போன்ற அரசியல் தரகர்களுக்கும் முகநூல் மற்றும் இணையங்களில் எழுதுபவர்கள் மீது அப்படியென்னதான் கோபமோ தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் தன்னை விமர்சிக்க தகுதி வேண்டும்‌, வெங்காயம் வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள்‌.

சரி அது போகட்டும், அதை பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்வோம்... 


கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஜூனியர் விகடன் இதழில் மன்னிப்பு கேட்கட்டும் மோடி என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய மணியன், அதில் 2002 ஆம் ஆண்டு மோடி ஆட்சி காலத்தில் குஜராத்தில் கலவரம் குறித்து எழுதுகையில் "இந்தப் பாவத்தை வாழ்நாளில் இன்னொரு முறை நான் செய்யமாட்டேன்’ என்று முஸ்லிம் சமு தாயத்திடம் மோடி மன்னிப்பை வேண் டுவதுதான் நியாயம். " என்று எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாக அன்றே நாம் எழுதினோம்.  ராஜபக்சேவும்  மன்னிப்பு கேட்டாலும் போதுமா? என்று எழுதி இருந்தோம். அதனை தொடர்ந்து  அதே கருத்தை வலியுறுத்தி முகநூளில் கூட பலரும் எழுதினார்கள். அதற்கு 2014 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தன் இயக்கத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் நாம் வைத்த கேள்விக்கு பதில் அளித்து பேசி இருக்கிறார். அந்த கூட்டத்தில் தான் ராஜபக்சேவுக்கும் பாவ மன்னிப்பு அருள வாழும் ஏசுபிரான்(?) மணியன் முன்வந்திருக்கிறார். அவர் பேசுகையில் " மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் சொன்னால், ராஜபக்சே மன்னிப்பு கேட்டாலும் மன்னித்து விடுவீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். இலங்கையில் தமிழனும், சிங்களவனும் ஒன்றாகி வாழும்  நிலை ஏற்பட்டால் ராஜபக்சேவையும் மன்னிக்க தயார்"  என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். (ஆதாரம் : இந்த வார ஜூனியர் விகடன்) மணியன் மன்னிக்கட்டும் ஆனால் இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்றாமல் ஓயமாட்டேன் என்று காவி துண்டை சாரி... கருப்பு துண்டை முறுக்கும் வைகோ என்ன செய்யப் போகிறார் என்பதே நம் பிரதான கேள்வி...

உலக நாடுகளில், ராஜபக்சே சர்வதேச குற்றவாளி என்ற உண்மை மெல்ல மெல்ல உருவாகி வரும் இந்த நிலையில் தான் மணியன் இப்படி பேசி இருக்கிறார். அவரது பேச்சில் ராஜபக்சேவுக்கு மன்னிப்பு என்பதையும் தாண்டி இன்னொரு விஷயமும் பொதிந்து கிடக்கிறது. அது உலக தமிழர்களின் கனவு தமிழீழ விடுதலை எதிர்ப்பே. இன்று உலகெங்கும் வாழும் பெரும்பாலான தமிழர்கள் போராடுவது இரண்டு கோரிக்கைகளுக்குக்காக ஒன்று தமிழீழ விடுதலை, மற்றொன்று ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக. ஆனால் மணியன் சிங்களவர்களோடு தமிழர்கள் ஒன்றாக வாழவேண்டும் என்கிறார். புலிகள் போராடியது சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதற்காக அல்ல, சிங்களவர்களுக்கு இணையாக, தனி இறையாண்மை மிக்க சுதந்திர தமிழீழத்தில் வாழ்வதற்கே என்பதை கூட மணியன் மறுதலிக்கிறார். தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களோடு தான் வாழவேண்டும் என்றுதான் ராஜபக்சேவும் சொல்கிறார். இத்தனை லட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டது சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்கிறோம் என்று சொன்னதற்காக அல்ல, நாங்கள் பிரிந்து தனி நாடாக போகிறோம் என்று போராடியதற்காக என்பதால் தான் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாத மணியன் ஈழ தமிழர்கள் பற்றி பேசுவதற்கு தகுதியானவர் தானா? என்பதை தமிழ்தேசிய போராளிகளே விளக்கட்டும்...      

இதன் மூலம் தன்னைப் பற்றியும் தன், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் பற்றியும் அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்றே நம்மால் உணரமுடிகிறது. காங்கிரசில் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த மணியன், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடியும் தருவாயில், சிங்களவர்களின் வெற்றி உறுதியான பிறகு, ஈழ விவகாரத்தை காரணம் காட்டி, கட்சியில் விலகினார். அதன்பிறகு மேடைக்கு மேடை ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றுவேன் என்று நீட்டி முழங்கினார். தற்போது மன்னிப்பு கேட்டால் போதுமானது என்கிறார். கடந்த வாரம் கூட ஒரு தொலைகாட்சி பெட்டியில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு என்னை இன்னமும் வாட்டி வதைக்கிறது என்று நீலி கண்ணீர் வடித்தார். இப்போது கண்ணீர் துளிகள் வற்றிப் போய்விட்டதா? அல்லது மோடியை பிரதமராக்க ராஜபக்சேவை புனிதராக்குவது தான் சமயோசித யுக்தி என்று மக்களை ஏமாற்றுகிறாரா? என்று கேட்க தோன்றுகிறது.

மணியனின் பேச்சை கூட புறந்தள்ளிவிடலாம், அவர் ஒரு நாக்கு வியாபாரி. ஆனால் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உடந்தையாக இருந்த காங்கிரசை கருவருக்கவே பாரதிய ஜனதாவோடு கூட்டு சேர்கிறேன் என்று தன்னிலை விளக்கம் அளித்த வைகோ, மணியனின் சொல்படி ஆடும் வைகோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். ராஜபக்சேவை மன்னிக்கப் போகிறாரா? அல்லது மணியனை கண்டிக்கப் போகிறாரா? எனக்கென்னமோ மணியனையும், ராஜபக்சேவையும் சேர்த்தே மன்னிப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சொன்ன சுப்ரமணிய சுவாமியையே மன்னித்த வைகோ, வைகோவை முதல்வராக்குவேன் என்று ஓயாமல் கூவும்  மணியனை மன்னிக்காமலா? போய்விடுவார்...

வைகோ மன்னிப்பார்... ஆனால்  மான ரோஷம் உள்ள தமிழர்கள்??? 

 - தமிழன் வேலு                  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக